நாம் உணவு உண்டால், அதனைச் சமிபாடடையச் செய்ய குடலில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. மிகவும் காரமான இந்த அமிலம் சுரக்கும் வேளையில் வயிற்றில் சாப்பாடு இல்லை என்றால், அது சாப்பாடு என நினைத்து குடல் சுவருடன் தாக்கம் புரிந்து குடல் சுவரைப் புண்ணாக்குகிறது. இது நடைபெற குறைந்தது 3 நாட்கள் போதும். இதனை அல்சர் என்பார்கள்! இப்ப இதுக்கும் மானாட மயிலாடவுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? சற்றுப் பொறுங்கள்! 1 நாளைக்கு நீர் அருந்தா விட்டால்கூட எமது உடலில் உள்ள நச்சுப் பதார்த்தங்களை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாதுபோகும். அது இரத்தத்தில் கலந்து இருதயம், ஈரல் மற்றும் சிறுநீரகத்தை தாக்க ஆரம்பிக்கும். 3 நாட்கள் உணவை நாம் உண்ணாமல் விட்டால் சோர்வு, ரத்த அழுத்தம் குறைவு! உடல் நடுங்குதல், குளிர், கண்பார்வை மங்குதல், சிறு நீர் கழிக்கும்போது பாரிய வேதனைகள் ஏற்படும்!

12 நாட்கள் உணவை அருந்தாவிட்டால் குடல் சுருங்கிவிடும். பலவகையான நச்சுப்பதார்தங்கள் எமது இரத்தத்தில் தங்கிவிடும். நாடி நரம்புகள் சுருங்கிவிடுவதாலும் கைகளில் உள்ள சதைகளுக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும், ஊசியால் குத்துவது போன்ற வலி கைகளிலும் தோள்பட்டையிலும் கால்களிலும் ஏற்படும். சிறு நீர் வருவதுபோல இருக்கும், ஆனால் பாரிய நோ இருக்கும்! மூளைக்கு நச்சுக் கலந்த இரத்தம் சென்றுவருவதால், செயல்பாடு பாதிக்கப்படும்! இருதயக் கோளாறுகள் உருவாகும்! சாதாரண வெப்பநிலையில் கூட குளிரும். சுருண்டு படுக்கவே தோன்றும். காதுகள் கேட்கும் திறன் இழக்கும்! இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். உண்ணாவிரதம் இருக்கும் நபர் அனுபவிக்கும் கொடுமைகள் இவை !

பதினொரு நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் திரு. கோபி சிவந்தனின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. இருப்பினும் இப்போது அதிகளவு மக்கள் அவரை சந்தித்து உரையாடுவதற்காக தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு வருவதனால் சற்றும் தளராமல் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசிடம் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்து தியாகியான திலீபன், நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தார். தற்போது இந் நிலை சிவந்தனுக்கும் தோன்றியுள்ளது. இவர் பாரிய உயிராபத்துக்கு முகம்கொடுக்கிறார்.

வேற்றின மக்கள் எல்லாம் வந்து, அவர் ஏன் உண்ணாவிரதம் இருக்கிறார் எனக் கேட்டறிந்து, தாமும் அங்கே சில மணிநேரம் தங்கிச் செல்கிறார்களே. ஆனால் தமிழர்களோ ஒரு சோர்வு நிலையில் உள்ளார்கள். புலிகள் கைகளில் ஆயுதங்களை எடுத்து போராடியவேளை லண்டன் தமிழர்களிடம் இருந்த ஆவேசம், ஆக்ரோஷம் எல்லாம் எங்கே போனது? இனி வெல்லமாட்டோம் என்று யார் சொன்னது? போராடாத இனம் வெற்றிபெற்றதாக சரித்திரம் இல்லை என்று தலைவர் அன்று சொன்னார்! அதனை மதிக்கும் தமிழர்கள் அனைவரும் தம்மால் முடிந்த நேரத்திலாவது சிவந்தன் உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்குச் சென்று உங்கள் ஆதரவை கொடுக்கக்கூடாதா?

Pin It