nilarasigan book kadalil vasikkum paravai“அபரிமிதமான ஆற்றலைக் கொண்ட, எந்தவொரு திட்டமிடலும் இல்லாத கலை.” இது கவிதையின் பிரவாகத்தைப் பற்றியப் பேச்சு வருகையில் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி தனது ‘ஸ்கைலார்க்’ (வானம்பாடி) கவிதையையே எடுத்துக்காட்டாகக் கொண்டு குறிப்பிட்டது. ஷெல்லியின் இக்கூற்று நிலாரசிகன் எனும் ராஜேஷ் வைரபாண்டியனின் “கடலில் வசிக்கும் பறவை” நூலில் இருக்கும் 60 கவிதைகளுக்கும் பொருந்தும். ஒருவர் தனது ஆன்மாவின் அடி ஆழத்தை உணர்ந்தால் மட்டுமே இத்தகுக் கவிதைகளை வடிக்க இயலும்.

அகத்திலிருந்து புற உலகைக் காணும் கவிதைகளுக்கு மத்தியில் புறத்திலிருந்து அக உலகைக் காண்கின்ற, கேள்விகளை எழுப்புகின்ற, தலைப்புகள் அற்ற சிறு சிறு கவிதைகள். பக்கத்திற்கொன்றாக குறைந்த பட்சம் ஐந்து வரிகளிலிருந்து அதிக பட்சமாக பத்து வரிகளைக் கொண்ட கவிதைகள். நான் கூட முதலில் புத்தகத்தைப் புரட்டும் போது பக்கத்திற்கு ஒன்று என்றில்லாமல் தொடர்ச்சியாகவே பதிப்பித்திருக்கலாமே என நினைத்தது உண்மை. ஆனால் ஒவ்வொரு கவிதையையும் வாசிக்க வாசிக்க, நாம் நின்று சிந்திக்கவும், கவிதையில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கவும், ஆசுவாசம் பெறவும் அந்த வெற்றிடங்கள் வேண்டியதாயிருப்பதை உணர்ந்து வியந்தேன்.

“நீங்கள் ஏன் பூனைக்குட்டிகளை
ரசிப்பதேயில்லை
சப்தமிட்டுக் கொண்டிருக்கிறது என்று
நேற்று அதை வெளியே வீசினீர்கள்
இன்று
உங்கள் இரைச்சலில் அழுகிறது
வாலாட்டுகிற இச்சிறு மிருகம்”

“அந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள்
அதன் கிளைகளிலிருந்து கூடொன்று
விழுந்து சிதறியது
ஒற்றைக்கால் ஒடிந்த பறவைக்குஞ்சு
தத்தி தத்தி புதருக்குள் ஓடுகிறது
புதருக்கு வெளியே வருகையில்
காகமொன்றின் அலகில்
அது சிக்கியிருக்கிறது
இனி,
மரக்கன்றுகள் ஆயிரம் நடும்
விழாவில் மலம் கழித்துச் சிரிக்கும்
அக்காகம்”

மனிதர்கள்தம் மனசாட்சியின் குரல்கள் பெரும்பாலும் தீனமாகவும், உறுதியற்றதாகவும், மர்மமானதாகவும், எளிதில் புரிந்து கொள்ள முடியாததாகவுமே உள்ளன.

“உறக்கத்தில் ஒருமுறை
இடையருகே சென்று திரும்பியது
வலக்கரம்
ஏதேனுமொரு பேரரசனோடு
வாள்யுத்தன் எனில்
பரவசமாய் நீளலாம் இவ்வுறக்கம்”

“கடலில் விழுகின்ற
பறவையின் நிழலை
விரட்டிச் செல்கின்றன இரு மீன்கள்.
தூண்டிலை இறுகப் பற்றியபடி
சிறுவனை நோக்கி
கத்துகிறான் கிழவன்
‘துப்பாக்கியை உயர்த்திப் பிடி’.”

பிரபஞ்சத்தின் ஒரு சிறுதுளி தாம் என உணராத மனிதர்களைக் கொண்ட உலகம் இது. அளப்பற்ற வளங்களை அள்ளித் தரும் இயற்கையின் பேரன்பை மதியாத மாந்தர்களில் நாமும் அடக்கமே எனப் பதற வைக்கின்றன பல கவிதைகள்..

“கழிவுகள் தின்று மிதக்கின்றன
மீன்பிள்ளைகள்
கடைசி மீன்குஞ்சு கழிவை நோக்கி
நீந்துகிறது மிக வேகமாய்
தன் தளர்ந்த மடுவை பார்த்தபடி
அமைதியாய் படுத்திருக்கிறாள்
கடல்”

“கடலருகே விரிந்திருக்கும்
பாறைகளில் வந்து விழுகிறது
கடைசிப் பறவை.
மனிதர்கள் மனிதர்களென்று
முனகியபடி.”

எப்போதும் குழந்தைகள் மேல் தனி அன்பு காட்டும் கவிஞர் இந்தத் தொகுப்பிலும் அதை வெளிப்படுத்தத் தவறவில்லை. மனதை உருக வைத்த ஓர் கவிதை:

“சாவு வீட்டின் முற்றத்தில்
விளையாடுகின்றன
இரு அணிற் பிள்ளைகள்
அழுதுகொண்டிருந்த சிறுமி
அணில்களை பார்த்துக்கொண்டே.
அழுகிறாள்
சற்று நேரம் கழித்து
எதற்காக அழுகிறோம் என்றே
தெரியவில்லை அவளுக்கு
முற்றத்தில் இப்போது
மூன்று அணில்கள்.”

குளம், கடல், நதி, மீன்கள், மரங்கள், மலைகள், மிருகங்கள், பறவைகள், குழந்தைகள் எனக் காட்சிப் படுத்திக் கொண்டே போகின்றன கவிதைகள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு, முடிவற்ற பிரபஞ்சத்தைப் போன்றே.

**

கடலில் வசிக்கும் பறவை - நிலாரசிகன் (ராஜேஷ் வைரபாண்டியன்)
பக்கங்கள்: 60; விலை:ரூ 60/-
வெளியீடு: புது எழுத்து
மின்னஞ்சல்:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அமேசான் கின்டிலிலும் கிடைக்கிறது.

- ராமலக்ஷ்மி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.