“சந்திரனுக்குப் போனாலும் கூட நாயர் டீ கடை வைப்பான்.” இதை நாம் நிறைய தடவை கேட்டிருப்போம். எங்கு போனாலும் அந்த இடத்திற்குப் போய் தனக்குத் தெரிந்ததை நிலை நாட்டும் கேரளக்காரரின் கைவண்ணத்தைச் சிலாகிக்க இந்த மாதிரி கூறி வருவதுண்டு.

Mars இங்கிலாந்து போனாலும் இட்லி கேட்பான் தமிழன்!
அமெரிக்கா போனாலும் அரிசிச் சோறு தேடுவான் தமிழன்!
சான் பிரான்ஸிஸ்கோ போனாலும் சாம்பார் வேண்டும்.

போன்ற ரீதியில் நம்மவர்களைப் பற்றி எதுகை மோனையாக வேடிக்கையாகச் சொன்னாலும், அடுத்து செவ்வாய் கிரகத்திற்கே நாம போனாலும் இரண்டாவது பிளைட்டில் நம்மூர் கம்ப்யூட்டர் என்ஜினியர்கள் நிறைந்து அங்கு போய் வேலை செய்யப் பிழைக்க ஓடுவார்கள்.

செவ்வாயிலும் ‘செலக்ட் * ’!

( Select * from என்ற கம்ப்யூட்டர் SQL கேள்வி மொழி உலகப் பிரசித்தம்! இந்திய ஐ.ஐ.டி.யில் படித்தாலும் செலெக்ட் * பண்ணித் தான் ஆக வேண்டும்! தலைவிதி!)

M1 விசா வாங்க அமெரிக்க, பிரிட்டிஷ் தூதரகங்களுக்கு முன் தவம் கிடக்க வேண்டும். M1 விசா என்பது மார்ஸ் 1 விசாவாகும். முதலில் அதை வாங்கிச் செவ்வாயில் குடியேறுவது. அப்புறம் சிகப்பு கார்டு என்று செவ்வாய்க்கு வாங்க வேண்டும். அப்புறம் தமிழகம் கூறும் நற்பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டு செவ்வாய்க்குத் தனிக் குடித்தனம் பண்ணத் தயாராக வேண்டும்! (சிகப்பு கார்டு என்பது தற்போதைய அமெரிக்க க்ரீன் கார்டு மாதிரி).

ஏதோ ஒரு கார்டு வாங்க வேண்டும். ரேஷன் கார்டாக இருந்தால் என்ன? தமிழ்நாடு மின்சார பில் (TNEB Electricity Bill) கார்டாக இருந்தால் என்ன? சிவப்புக் கார்டாக இருந்தால் தான் என்ன?. நிறம் எப்படி இருந்தாலும் ஏதோ ஒரு “கார்டை” வாங்கிக் கொண்டு போய்க்கொண்டே இருப்போம்.

யாதும் ஊரே . . . செவ்வாயுள்ளோரும் கேளிர்!

என்ன வளம் இல்லை இத்திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி கிரகத்தில்? என்று பத்திரிக்கைகள் மாணவர்களைத் தாக்கின. இளைஞர்களை இளித்த வாயர்கள் என்று கேலி செய்தன. அப்பவும், செவ்வாய் M1 விசாவுடன், மனைவி குழந்தைகளுடன், பெட்டி படுக்கையுடன், பெட்டியில் பருப்பு பொடி, அப்பளம், வடாம் சகிதம் செவ்வாய் காலனிக்கு இரண்டாவது பிளைட்டில் படையெடுக்க நீலாங்கரையிலிருந்து, அமைந்தகரை வரை விசா கியூ நீளம் நீண்டிருந்தது.

ஆமா, முதல் பிளைட்டில் யார் போனார்கள்? “ஹி! ஹி! ஏமாளியான அமெரிக்காகாரன் போய் எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டா நமக்கு கஷ்டம் இருக்காதுண்ணா!”

அமெரிக்கர்கள் முந்திரிக் கொட்டை போன்று மற்றவர்களின் வியர்வை, மற்றும் பணத்தைச் செலவழித்துப மற்றவர்களை வைத்துப் பாதை போட்டுக் கொண்டு, செளக்யமாக தான் வாழ்வதற்குச் சகல விதமானத் தேவைகளையும் பண்ணிக் கொண்டு, ரோடில் கார்களை உலாவ விட்டு, செவ்வாயில் தனியே சிறிது காலம் வாழ்ந்து வந்தனர். ஆனால் போகப் போக வசதிகளின் செலவைக் குறைக்க மற்றவர்களின் உதவி அதிகம் தேவைப்பட்டது. காலனிக்கு போய் முதற் கட்டமாக மெக்ஸிக்கோ, லாத்தீன் வேலைக்காரர்களை வைத்து அமெரிக்கா வேலை வாங்கி அனைத்து வசதிகளும் கட்டிடங்களுக்குப் பண்ணி அவற்றைக் கட்டியது. பிறகு டிரில் செய்து, ரோடு போட்டு, கான்கிரீட் கட்டிடங்கள் எழுப்பி, தார் சாலைகள் போட்டு ஜெர்மன், ஜப்பான் காரர்களைத் துணைக்கு அழைத்து நிர்வாகித்தது. ஜப்பான்காரர்கள் செவ்வாய் கிரகக்திற்குத் தக்கதான “செவ்வோட்டோ” கார் தயாரித்து அதிலிருந்து கொட்டும் தண்ணீரை (அது ஹைபிரிட் மாடல் சார்!) குடிதண்ணீராகவும் விற்கச் செய்வார்கள். இந்தியர்கள் அனைவரும் அனைத்தையும் கணக்குப் பண்ணி, சரியாகச் சொல்ல உதவியாயிருந்தனர். பல்வேறு கம்ப்யூட்டர் புரோகிராம்கள் எழுதக் கடைசியாகத் தமிழர்களைக் கூப்பிட்டனர்.

புரோகிராம்காரர்களுக்கு முன்னாலே நாயர் டீ கடை வைப்பதற்கும், உடுப்பிக்காரன் இட்லி வடை சாப்பிடக் கடையும், வைதீகக் காரியம் பண்ண மாம்பலத்து சாஸ்திரிகளையும் முன்னே அனுப்பியாயிற்று. பிறகு என்ன, சென்னையில் எவ்வளவு தான் குப்பை கொட்டுவது? செவ்வாயிலும் போய் கொஞ்சம் குப்பை கொட்டுவோமே?. அள்ளுவதற்கு மற்றவர்கள் இருக்கின்றாரே! “அள்ளு அள்ளு! தள்ளு! தள்ளு! என்று பாடத் தோன்றுகிறது.

இவ்வளவு தூரம் வந்து கை காசு கொடுத்து கூப்பிடறப்போ செவ்வனே செவ்வாயில் வேலை பார்க்க நிறைவேற்றக் கசக்கிறதா என்ன?. துட்டு குடுக்கிறான் சார்! எங்க தாத்தா அப்படித் தான் துபாய் சென்றார். அங்கு 55 டிகிரி வெயில் என்று எங்களுக்குக் கதை சொல்லியிருக்கின்றார். அப்படியும் துபாய் துறைமுகத்தில் வேலை பார்த்து விட்டு, கராமாவில் (துபாயில் ஒரு இடம்) மசாலா தோசைச் சாப்பிட்டதைக் கதையாகச் சொல்வார்.

செவ்வாய் வெறும் 555 டிகிரி தானாமே?. ஒரு 555 பற்ற வைக்கிற மாதிரி தான் இருக்கும்! அப்புறம் ஒன்று! இது நாமெல்லாம் பெருமை அடித்துக் கொள்ள வேண்டிய விஷயம். குழந்தைகள் செவ்வாயிலே வினோதமாக வாயை மூடி பேசுகிறதாமே! நமக்கு அப்படிக் குழந்தைகள் பிறந்து பேசினால் சந்தோஷமாக இருக்கும். தமிழகத்தில் வந்து செவ்வாயைத் திறக்காமல் செவ்வாய் மொழி பேசினால் ஒரு தனி மவுசு தான். பெண்கள் கூட அப்ப தான் நம்ம கிட்டே பேசுவார்களாமே?. ஒரு காலத்தில் இப்படித் தான் ஆங்கிலம் பேசி பிறகு அதுவே தமிழாக மாறி உருவெடுத்து இப்போது வேறு “செம்மொழி” செவ்வாயிலிருந்து இறக்குமதி ஆகிவிட்டது.

தற்காலம், பொற்காலம், எக்காலத்திலும் எங்கள் தமிழ் உருவெடுத்து, மறுவி, கொடி போல் அசைந்து வளைந்து வளரும். தமிழ் சினிமாக்களைப் பாருங்கள் பெண்கள் மட்டும் செவ்வாய் மொழி பேசி ஸ்டைலாக நடந்து போகிறார்கள். ஸ்டெல்லா மேரிஸ் பெண்கள் கூட நாகரிகத்தில் அப்படித் தான் “செவ்வாய்” மொழி பேசிக் கொள்கிறார்களாம். செவ்வாய் மொழி பேச முடியாமல் கிராமத்து இளைஞர்கள் வெம்புகிறார்களாம். செவ்வாய் “ஸ்பீக்கிங் டியூஷன் சென்டர்கள்” பெருகியிருந்தன.

ஒரு உதாரணம். வாய் திறந்து பேசாத மொழியாதலால் . . .


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் (செவ்வாய் செம்மொழி பேசினேன்!).

ம்ம்ம்ம்ம்? ( புரிந்ததா?).

சரி! சாண்டில்யன் பாணியில் சொல்லிப் பார்ப்போம்!

இளைய பல்லவனின் கைகள் இளவரசியின் இடுப்பை அணைக்க . . .

“ம் ம் ம் ம் “

“என்ன ம் ம் ம் ம்” மையல் கொண்டு பேசினான்.

“ம் ம் ம் ம் “

“மேலும் ம் ம் ம் ம் மா?”

அப்போது ஒரு காலணியொன்று புதரிலிருந்து “விர்”ரென்று எரியம்பு போன்று பறந்து பல்லவனின் கையைத் தட்டிவிட்டது.

“ம் ம் ம் மா!” அலறினாள் இளவரசி!

(தொடரும்)


கடைகளில் கூட “எக்ஸ்கியூஸ் மி” என்றால் யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்று இருப்பவர்கள் கூட “ம்ம்ம்ம்ம்ம் ம்” என்றால் விரைந்து “என்ன மேடம் , ம்ம்ம்?” கால் தமிழ, கால் ஆங்கிலம், அரை செவ்வாய் மொழியில் பேச, ஆனந்த விகடன் பத்திரிக்கை கூட புதுத் தமிழில் ம்ம்ம்ம் கலந்த மொழியில் பத்திரிக்கை வெளியிட்டது. மற்ற மொழிகள் சோறு போடுமா?. ம்ம்ம்ம் சோறு போடுமா? என்று விவாதித்து ம்ம்ம்ம்ம் மை அனைவரும் அனைத்துப் பள்ளிகளிலும் தேர்ந்தெடுத்தனர்.

சென்னையில் வந்து செவ்வாய்க்கு காலையில் 7 மணிக்கு காபி கொடுத்து பிறகு வேலையை ஆரம்பித்து வைத்தால், இரவு 9 மணி வரை உழைத்து, பத்து மணிக்குச் செவ்வாய் கிரகத்து உடுப்பி ஹோட்டலில் தோசையைச் சாப்பிட்டுவிட்டு, 11 மணிக்குப் பூமி வெப் சைட்டிலிருந்து தமிழ் படத்தை ‘இலவசமாக டவுன்லோட் செய்து” இறக்கிப் பார்த்து காலையில் மீண்டும் வேலைக்குச் சுறு சுறுப்பாகத் தயாராவான், தமிழன்.

பிளைட்டில் ஏற்றி மாதம் செலவு பண்ண கொடுத்தால் போதும், வந்து இறங்கிச் செவ்வனே செவ்வாயில் இறங்கிப் பணிகளை நிறைவேற்றத் தமிழனை நம்பலாம். அப்படித் தான் என்னைக் கூப்பிட்டார்கள். என் தாத்தா இப்படி தான் துபாய்க்குப் போன பின்பு, அமெரிக்காவிற்கு H1 சென்று வந்து விட்டு கடைசிக் காலத்தில் என் அப்பாவைக் கழுத்தறவு செய்தாராம். “இங்கு இது கிடைக்கும், அங்கு அது கிடைக்கும்” என்று அறுத்துத் தள்ளினாராம்.

சரி! நம்மையும் ஒருத்தன் எதுக்காவது கூப்பிடறானே என்று கிளம்பி விட்டேன். மறைமலையடி நகரில் சென்னைக்கு வெளியே கொல்லைப்புறம் கூப்பிட்டிருந்தாலும் போய்விட்டிருப்பேன். பிளைட்டில் டிக்கெட் போட்டுக் கூப்பிடறானே, மேலும் இலவசமாக சூடு பறக்கும் செவ்வாய் கிரகத்தில் குளிர்ச்சியான பீர் கிடைக்குமென்று “குமுதம்” நம்பகமான செய்தி கொடுத்திருந்தது.

அதனால் செவ்வாய் நமக்கு நல்லத் தீனி போடுமென்று பூமியை விட்டு, சென்னையிலிருந்து செவ்வாய் நோக்கி புறப்பட்டேன். மேல் மருவத்தூரில் சிவப்புச் சேலை கட்டிய அம்மன் சிலையும், சிவப்பு சேலை கட்டிய சாமியார்களையும், பெண்களையும், ஆண்களையும் பார்த்திருக்கின்றேன். அதற்கப்புறம் “வெளி உலகம்” இப்போது தான் பார்க்கப் போகிறேன். இதுவும் சிவப்புதானாமே! அம்மன் காப்பாற்றுவாள் என்று நம்பி சிவப்புக் குங்குமம் இட்டு வேண்டிக்கொண்டு கிளம்பினேன்.

மாம்பலத்தில் ஒரு ஃபிளாட் வந்திருக்காம்! விலை 60 லட்சமாம்! அம்மா சொன்னாள். ரூ 40 லட்சம் வெள்ளை. ரூ 20 லட்சம் கறுப்பு. வெள்ளைக் கறுப்பு என்றால் அப்போது தான் முதன் முதலாகத் தெரியும். ஒரு வேளை சிவப்பு, நீலம் என்று செவ்வாயில் பேசலாம். செவ்வாயில் இறங்குவதற்கு முன் வீட்டை வாங்கியாச்சு! கடனை அடைக்க போகத் தான் ஆக வேண்டுமென்ற நிலைக்குத் தள்ளப் பட்டேன்.

இந்தியன் என்றால் வெள்ளை என்று வெள்ளை மனதுடன் நினைத்திருந்தேன். நாம் வெள்ளை இல்லை என்று விமானத்தில் கண்ணாடி பார்த்த பிறகல்லவா தெரிந்தது?. செவ்வாயில் வெயில் என்னை மாநிறமாக வறுத்தெடுத்து விட்டால் என்ன செய்ய?. பூமியின் ஆண்டவனைப் போல செவ்வாயிலும் அவனுக்கு தூய “வெள்ளை” மனம் .. அடடா ஆண்டவனும் வெள்ளையா? தூய வெண்பட்டாடை போன்ற இதயம் படைத்தவன். . செவ்வாயிலாவது வெள்ளை, கறுப்பு என்று நிற வேற்றுமை நீங்கிய சமுதாயம் என்பதால் அங்கு ஆண்டவன் “நீல” மனம் படைத்தவனாயிருப்பான். கண்ணனை “நீல மேகக் கண்ணா வாடா” என்று தானே வணங்குகின்றோம்?

வெள்ளைப் பணிமகள்கள் வேண்டா வெறுப்பாக என்னை செவ்வாய் கிரகத்திற்கு “சோனியா ஏர்வேஸில்” ஏற்றினாள். வெளிப்படையாக “ஹலோ” என்றாள். வெள்ளைக்காரி நினைத்துக் கொண்டாள் “ ஏன் இவர் இப்படி சிரிக்காமல் “உம்” மென்று இருக்கிறார்?”. என் கஷ்டம் எனக்குத் தான் தெரியும். கோடம்பாக்கத்தில் இடர்பாடுகளுக்கிடையே கஷ்டப்பட்டு 500 சதுர அடி வீட்டை ரூ. 40 லட்சத்திற்குப் பதிவு செய்து விட்டு, அம்மாவை, வயதான அப்பாவை மாம்பலத்தில் விட்டு விட்டு வந்தேன்.

சென்னை டிராபிக் ஜாமில் தட்டுத் தடுமாறி விமான நிலையத்திற்கு வந்தால், அங்கே ஆர்ப்பாட்டம்! செவ்வாய்க்கு விமானம் பறந்தால் “செவ்வாய்” தோஷமாம். செவ்வாய் தோஷம் சென்னைக்குப் பிடிக்காமல் இருக்க “சோனியாவை” தடை செய் என்று ஒரு மத வாதிக் கட்சியினர் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். நான் தான் அன்று நவக்கிரகத்திற்கு அர்ச்சனை செய்து அன்று காலை கபாலீஸ்வரர் கோவிலில் செவ்வாய்க்கு விசேஷ பூஜை செய்திருந்தேனே?. அம்மா கூட செவ்வாழையைக் குழைத்து நெற்றியிலிட்டு, சந்தனக் காப்பு போட்டு என்னை அனுப்பியிருந்தாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “செவ்வாய்” காலடி வைத்தால் நம்ம சாஸ்திரம் சம்பிரதாயமெல்லாம் பறந்து விடுமென்று நம்பிக்கையோடு பயணத்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருந்தேன்.

“செவ்வாயிலே சனிக் கிழமை தோறும் எண்ணைத் தேய்த்துக்கொள்ளப்பா . . . “ என்றாள் அம்மா! “சென்னையைக் காட்டிலும் ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் கலந்து நீரை அதிகம் உற்பத்தி பண்ணுகின்றாராமே! நல்லாத் தேய்த்துக் குளி! முக்யமாகத் தலையில் தண்ணீர் படக் குளி! “ என்று அப்பா பொரிந்தார். அவருக்கு சிறு வயது முதலே மஞ்சளான நில அடித் தண்ணீரிலும், சோப்பு நுரை வராதக் குளியல்களும் பயமுறுத்தியிருக்க வேண்டும். என் பெட்டியில் சிறிய பெட்டியில் பிள்ளையார் மற்றும் ஒரு முருகன் படமும் இருந்தது. “யாமிருக்க பயம் ஏன்?” என்று முருகப் பெருமனார் சாந்தியளித்தார். செவ்வாயில் இன்னும் முருகனுக்குபக் கோவில் கட்டவில்லை. நான் தான் பெரிய ஆள் ஆன பிறகு காட்ட வேண்டும்!

முதலில் திருப்பதி பாலாஜி கோவில் கட்டினார்களாம். பிறகு தெலுங்கர்களுடன் சண்டை போட்டுவிட்டு பின்னால் முருகன் கோவில் கட்ட வேண்டியிருக்கும்.. ஒருத்தருக்கு செவ்வாய் கிரகம் போகும் போது விமானத்தில் பெட்டிக்கு 60 கிலோ வரை கொண்டு போகலாமாம். அதனால் அம்மா முண்டு முடுக்கு வரைப் பெட்டியில் அடைத்திருந்தாள். அப்பா, மேற்கு மாம்பலத்தில் கிடைக்கும் ஒரு விதமான சகல விதமான எல்க்ட்ரானிக் பூட்டுக்களையும் திறக்கத் தக்க சாவியினை வாங்கிக் கொடுத்தார். “சும்மா வச்சுக்குப்பா! உதவும்!” என்றார். திறக்காத கதவும் திறக்கும் என்று வாண்டுமாமா எழுதும் மந்திரவாதிக் கதை போன்று இருந்தது. பெட்டியை அம்மா அடைத்த பின்பு எப்படி பளுத் தூக்கிப் பார்ப்பது? அருகே ஒரு விறகுக் கடை இருந்ததால், எடை தூக்கி நிறுத்திப் பார்த்து 59.99 கிலோ அடைத்திருப்பது புரிந்தது.

தீவிரவாதிகள் தொல்லைகள் அதிகம் இருந்ததால் (மாம்பலம் கொசுக்களைச் சொல்லவில்லை!), சுலபமாகக் கழற்றி போடும் காலணிகளைப் (பூட்ஸ் தான் சார்! சும்மா உங்க தமிழைப் பரிசோதித்தேன்!) போட்டுக் கொண்டு சென்னை விமானநிலையத்திற்குப் போனேன். கலைஞர் கருணாநிதி என்ற பெயரிடப்பட்ட டெர்மினலில் இறங்கி ஜெயலலிதா என்று பெயரிடப்பட்ட எலிவேட்டரில் ஏறி, சிதம்பரம் என்று பெயரிடப்பட்ட வாயிலில் உள்ளே நுழைந்து, செக்யூரிட்டி “செக்” கிற்குப் போனேன். அம்மாவின் கை முறுக்கு காற்று புகாத டப்பாவில் அடைக்கப் பெற்று பெட்டியில் நெய் வாசனையுடன் இருந்தது. இந்தப் பாழாப் போன மோப்ப நாய் “செக்யூரிட்டி செக்” கில் காண்பித்துக் கொடுத்து விட்டது. முறுக்கு பறிபோன சோகத்தில் “அன்னை சோனியா ஏர்வேஸில்” செவ்வாய் கிரகத்திற்குப் புறப்படத் தயாரானேன்.

விமானத்தின் உள்ளே அமர்ந்தேன். விண்வெளியில் தலை சுற்றி மிதக்காமல் இருக்க சுற்றிலும் கவசம் சாத்தப்பட்டு போர் வீரனைப் போல இருந்தேன். உள்ளே குளிர் காற்று வீசியது. பணிப்பெண் புறப்பட 20 நிமிடங்கள் இருக்கும் போது வந்து ஒரு தட்டில் இட்லியும், சாம்பாரும் வைத்தாள். இன்னும் 3000 வருடங்கள் நிலைத்து நிற்கும் இட்லியைச் சிலாகித்தேன். நன்றாகச் சாப்பிட்டு விட்டு தஞ்சாவூர் டிகிரி காப்பி சாப்பிட்டேன். இனிமேல் எப்போது கிடைக்குமோ?. போய் சேர ஒரு மாதம் ஆகும் என்று கால அட்டவணையில் போட்டிருந்தது.

“எங்கு போகிறீர்கள்?” என்று செவ்வாய் கிரகத்திற்குப் போகும் பக்கத்து சீட் மனிதரைக் கேட்டேன். அங்கு கபிலன் பள்ளத்திற்குப் போவதாய் சொன்னார். கபிலன் என்றத் தமிழ விஞ்ஞானி செவ்வாயில் நீர் கிடைக்கும் பள்ளத்தாக்கைக் கண்டுபிடிக்க அவர் நினைவாக அமெரிக்கா அவருக்குப் பெயரிட்டிருந்தது.

100 ஆண்டுகளாகக் கபிலன் அமெரிக்கராக இருந்தாலும் “நம்ம ஆளுங்க!” என்று பக்கத்து சீட் மகிழ்ந்து கொண்டது. பள்ளத்தில் குழி வெட்டி வீட்டுத் தூண்கள் கட்டுவதில் பக்கத்து சீட்காரர் கலைத் திறமைவாய்ந்தவராம். ராமேஸ்வரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் தூண்களைப் பராமரிப்பவராம். அவரை குவைத்தில் உள்ள ஒரு ஏஜென்ட் பிடித்து ஈராக் அனுப்ப, அங்கிருந்த அமெரிக்கப் பட்டாளம் செவ்வாயிலுள்ள கபிலன் பள்ளத்தில் தூண்களை எழுப்பப் பயன்படுத்திக் கொண்டது. ஏழ்மையில் வாழும் அவரது குடும்பத்தினைக் காப்பாற்ற அவரும் செவ்வாய் போகத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டார்.

இரண்டு வருடங்களுக்கு முன் மனைவியைப் பார்த்த பிறகு போன வாரம் தான் லீவிற்கு குவைத்திலிருந்து வந்தாராம். மனைவியுடன் இல்வாழ்க்கையை ஒரு வாரம் அனுபவித்து விட்டு அவளுடன் இருந்த பிறகு மீண்டும் அவருக்குச் செவ்வாய் கிரகம் பயணம். அவருக்கு அமெரிக்க செவ்வாய் குடியரசு ஆறு வருடம் வேலை பார்க்க விசா கொடுத்திருந்தது. ஆறு வருடம் கழித்து தான் வருவாராம்.

குழந்தை பிறந்தால் வரும்போது ஐந்து வயது இருக்கும் என்று ஜோதிடம் கூறினார். அவர் மனைவியை நினைத்துக் கவலை கொண்டேன். ஆறு வருடத்திற்கு ஒரு முறை என்றால் மொத்தம் அறுபது வருடங்களில் பத்து தடவை மட்டும் . . . என்று இல்லறக் கணக்கு போட . . . எண்ணங்கள் சிறகடிக்கவே . . . (இதிலேயெல்லாம் மனது சிறகடிக்கும் . . . மற்ற நேரத்தில் ‘அடை ‘ காத்து கோழி போன்று உட்கார்ந்து சோம்பேறியாக இருக்கும் ).

செவ்வாய் போன பிறகு கிடைக்க ஆளில்லாமல் தலையில் ஒரு கவசத்தைப் பொருத்தினால் அனைத்து சிற்றின்பமும் அனுபவிக்கலாம் என்று இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர். இத்துடன் பேரின்பமும் பெரியவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அனைத்துக் கடவுள்களையும் கவசத்தின் மூலம் கண்கள் மூட, தரிசனம் செய்யலாம். பிறகு நிம்மாதியாகப் போய் சேரலாம்.

“உன்னைக் கடைசியாகக் கொஞ்சம் பார்த்து விட்டேனென்றால் கண்களை மூடிவிட்டு போய்விடுவேன் . . . “ ஆயிரம் வருடங்கள் பேசி வந்தாலும், செவ்வாயில் தலைக் கவசம் வைத்து விட்டு கடைசியில் யாரை வேண்டுமென்றாலும் பார்த்துப் பரலோகம் போகலாம்! செவ்வாய்க்கும் மேலேப் பரலோகம் இருக்கிறது தெரியுமா?

பாலாஜி பார்க்க (திருப்பதிக் கடவுள் சார்!) கொஞ்சம் செலவாகும். பாற்கடல் ( மில்கி வே காலக்ஸி) பின்னனியுடன் ரெஹ்மான் (இது வேறு ரெஹ்மான் சார்!) இசையுடன் ரகுமானை தரிசிக்கலாம். பத்து தடவை செலவு செய்து இது மாதிரி பார்த்தால்,
நாராயணன் போன்று ஒருவர் வேடமிட்டு “நரனே நீ வேண்டுவது கேள்!” என்று கேட்பார்.

“மீண்டும் பிறவா வரம் வேண்டும்” என்று கேட்டால் தலையில் இருக்கும் கவசம் வெடித்து 1 வினாடியில் சாம்பல். இதெல்லாம் கொஞ்சம் “ஓவராக” இருந்தால், இப்போதைக்கு, சாப்பாடைப் பற்றி பேசுவோம்! எதுக்கு சாம்பல், பேரின்பம் என்று நினைக்க வேண்டும்? மற்ற சாமான்யர்களைப் போன்று அடுத்த வேளைச் சாப்பாட்டுக் கனவுகளோடு ஆழ்ந்தேன்.

2-3 நாட்கள் எங்கு தங்கலாம், என்ன சாப்பிடலாம் என்று தமிழ் குடிமகன் கவலைகளுடன் இருந்தோம். செவ்வாய் COOUM நதிக்கரையோரம் கெயிட்டி என்ற தியேட்டரில் “பலான மலையாளப் படங்கள்” காண்பிக்கப்படுவதாகப் குவைத் காரர் தெரிவித்தார். குவைத்தில் காலம் காலமாகக் காய்ந்திருப்பார்கள் போல. மற்றத் தமிழ் சினிமா படங்கள், செவ்வாயில் “எவெரெஸ்ட்” என்ற தியேட்டரில் காண்பிப்பதாகச் சொன்னார் குவைத் காரர். செவ்வாயில் தங்கமும் பாளம் பாளமாகக் கபிலன் பள்ளத்தாக்கில் கிடைக்கும் என்றார். “வரும்போது தங்க பிஸ்கட் வாங்கி வரலாம் சார்!திநகர் லலிதா ஜுவல்லரியில் கிராமுக்கு $50 போகும்” என்றும் சொன்னார். குவைத்தில் வாங்கிய சென்ட்டோட அவர் உடம்பு “கமகம” க்க நான் மாம்பலத்தின் கசங்கிய மலர் போன்று மூக்குப்பொடி வாசனை வீசினேன். குவைத் காரர் போன்று செவ்வாயில் சீனத்துச் செம்பட்டில் ஒரு சட்டை வாங்கிக் கொண்டு, தங்கப் பாளாங்களுக்கு வரி கட்டு சென்னைக்குத் திரும்பி வருவாதாய் கனவு கண்டேன்.

“சோனியா ஏர்வேஸில்” போரடித்தால் பார்க்க 1000 தமிழ் படங்கள் உள்ளடங்கிய டிவிடி பெட்டி அனைவருக்கும் ஒன்று இலவசமாக உடைக் கவசத்திற்குள் சொருகிவிட்டிருந்தது. போரடித்ததால் சேனல்களைத் திருப்பினேன். 1950லிருந்து 2080 வரை வந்தத் தமிழ்படங்கள் பல இருந்தது. அடிமைப் பெண் படம் கூட இருந்தது. பாஷா இருந்தது. கஜினி இருந்தது. சிவாஜி இருந்தது. ஹிந்தி இருந்தது. மலையாளம் இருந்தது. தெலுங்கு இருந்தது. ஆங்கிலம் கொஞ்சம் இருந்தது.

தமிழ், தெலுங்கு படங்களில் ஓடி ஆடி பாடிக்கொண்டிருந்தனர். தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவி கிருஷ்ணா ஒரு ஹிந்தி நடிகையின் ஒல்லி இடுப்பைப் பிடித்துக் கொண்டு ஆடிக்கொண்டிருந்தார். சிரஞ்சீவி, என்.டி.ராமாராவின் மகள் வயிற்றுப் பேரனாயிற்றே?. சரி! பாடல்கள் கேக்கலாம் என்று பார்த்தால் உலகத்து அனைத்து மொழிகளின் பாட்டுக்களும் இருந்தன. லதீன் சல்சா பாட்டுக்கள், சென்னை கானா பாட்டு, ஜாஸ் சங்கீதம், சைனாவின் புல்லாங்குழலிசை, புரியாத கர்நாடக சங்கீதம் (அப்ப கூடவா புரியலை! ஜடம்!), தலைyai ஆடவைக்கும் ஹிந்துஸ்தானி , தாலாட்டும் கிராமியப் பாடல்கள் என்று கலக்கியிருந்தனர். செவ்வாயில் போய் இணைய தளத்தில் எனக்குப் பிடித்த அனைத்துப் பாடல்களையும் இறக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். செவ்வாய்க்கு இன்னும் பூமியின் சில சட்ட திட்டங்கள் வரவில்லை. ஆதலால் இலவசமாக இறக்குமதி செய்து கொள்ளலாம்.

நன்கு தூக்கம் வரவே கவசத்தைக் கட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தேன். சோனியா ஏர்வேஸ் “ஜிவ்வென்று” பூமியை விட்டு வெகு தூரம் வந்திருந்தது. மிதக்கும் உணர்வுடன் காதில் மெல்லிய இசையுடன் செவ்வாய் தேசத்தில் புதிய காதலியைப் பார்க்கும் ஆர்வத்தில் கனவுகள் கண்டேண். “அங்கே யாரையும் தேடிக்க வேண்டாம். அந்தச் செவ்வாய் கலாச்சாரம் நமக்கு ஒற்றுக் கொள்ளாது. நீ திரும்பி இரண்டு ஆண்டுகளில் மாம்பலம் வந்து திருமண மண்டபத்து தண்ணீரைக் குடித்து ஹோமப் புகையில் (காதலால்) கண்கள் கசிந்து, எரிய மூன்று நாள் திருமணம் தான் நடக்கணும்” என்று அம்மா கட்டளையே போட்டாள். அதற்குப் பயந்து செவ்வாய் கிரகத்தில் எனக்கு இரண்டு கொம்புள்ள காதலி கிடைப்பதாகக் கனவுகள் கண்டேன் . . .

“எனக்குத் தெரிந்த பெண் மதுரையில் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள். கிளியாட்டம் இருப்பாள்!” என்று எனக்கு அம்மா கற்பனை மூட்டினாள். கிளியுடன் செவ்வாயில் கற்பனையாட்டம் போட வேண்டியது தான். கிளி பச்சையாகத் தானே இருக்கும்.! @ @!

செவ்வாயில் மரம் இருக்குமோ?.

தமிழ் சினிமா, டூயட் பாடல்களை மட்டும் டிவியில் காண்பித்து இருநூறு வருடங்களாகக் படம் காட்டி என்னை போன்றவர்களை மண்டுவாக மாற்றி விட்டிருந்ததால், கிளியின் உதடுகள் அருகே உதடுகளைக் கொண்டு வரும்போது கனவிலும் பூச்செண்டுகள் வந்து மறைத்தது.

“அங்கே இங்கே கண்ணை அலையவிடாதே! உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே “ என்று அம்மா புறப்படும் போது அறிவுரை சொன்னாள். “வரும்போது மங்கோலியப் பெண்ணோ, சிலி நாட்டுப் பெண்ணையோக் கூட்டிக் கொண்டு வந்தால் என்னை உயிரை நீ பார்க்க மாட்டாய் “ என்று பயமுறுத்தியிருந்தாள். “அம்மா, நான் செவ்வாய்க்குப் போறேன். தென் அமெரிக்காவிற்கு அல்ல. சீனாவுக்கு அல்ல. செவ்வாயில் வெப்பம் அதிகம். பெண் ரோபோக்கள் தான் இருக்கும்” என்று பயத்தை தெளிவித்து வேறு பயத்தை உண்டாக்கினேன்.

கலவி, திருமணம், ஆண்-ஆண், ஆண்-பெண், ஆண்- குதிரை, ஆண்-பன்றி என்று பல்வேறு உறவுகளைத் தாண்டி, சிலபலக் கலவைகளை, கலவிகளைத் தாண்டி மற்ற நாடுகள் அப்போது முன்னேறிக் கொண்டிருந்தனர். என்ன முன்னேற்றம்!

“செவ்வாய் நாட்டு அதிபர் தேர்தலில் கூட ஆண்-செல்லப் பிராணிகள், பெண்-செல்லப் பிராணிகள் சேர்க்கையை நியாயப்படுத்தி ஒரு சாராரும், திருமணம் என்றால் ஆண்-பெண் என்று ஒரு சாராரும் விவாதிப்பது சுவாரசியமாக இருக்கின்றது” என்று என் நண்பன் இ-மெயிலில் எழுதியிருந்தான்.

என் அம்மாவோ கிளி, கோலமயில் என்கின்றாள். குழந்தைகளைச் செயற்கைமுறையில் கிளினிக்கில் பெற்றுக் கொண்டு, பின்பு பணம் கட்டி ரசீது வாங்கி, வரி செலுத்தி நற்குடிமகன்களாய் மற்ற நாட்டு மக்கள் எல்லாம் சுதந்திரமாக வாழ, என்னை மாதிரி அம்மாவிடம் கேக்கும் பையன்களும் சென்னையில் இருந்தனர். இதிலிருந்து தப்பித்து அப்பாடி என்று ஒரு வழியாகச் செவ்வாய் புறப்பட்டோமென்று மனம் துள்ளியது.

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்!

சிரிக்குது எனைப் பார்த்து . . . பாடல் காதில் ஒலிக்க . . .

கி.மு. 2000 முன்பு இயற்றப்பட்டத் தமிழ் பாட்டு .....

தூரத்தே இளஞ்சிவப்பில் தெரிந்த செவ்வாய் பந்துருண்டை தன் பவள வாய் திறந்து என்னைப் பார்த்து இளிக்க ஆரம்பித்தது.

செவ்வாய் நாறாமல் இருந்தால் சரி! போய் பார்ப்போம்!


(செவ்வாயில் வளரும்!)


- கிருஷ்ணகுமார்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It