எங்கள் வீட்டு பிரதான அறையில் அழகாக நிறுத்தப்பட்டிருக்கும் பூவேலைப்பாடுகள் மிக்க மரப்பலகையில் வைக்கப்பட்டிருந்த அந்த தலையாட்டி பொம்மையைப் பார்த்து அன்று ஒரு நாள் தெரியாத்தனமாக இவ்வாறு கூறிவிட்டேன்.

அப்பா சின்னம்மா சாப்பிட கூப்பிடுறாங்க வாங்கப்பா

ஆனால் வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த தோட்டத்தில் சின்னம்மா சொல்லியிருந்தார் என்கிற ஒரே காரணத்துக்காக கடந்த அரைமணிநேரமாக செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த அப்பா, தன் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி வந்தார் என்றால், அதற்கு காரணம் அவர் என் சின்னம்மா மேல் வைத்திருக்கும் ​‍மேதகு மரியாதை உணர்வு தான். அது எப்படி வந்தது, எப்போது வந்து தொலைத்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. துரதிஷ்டவசமாக அது அப்படி நடக்கிறது. மரியாதை என்ற வார்த்தைக்கு டிக்ஷனரியில் அர்த்தம் தேட வேண்டிய அவசியமே இல்லை. என் அப்பாவைப் பார்த்தாலே போதும். மரியாதை என்கிற வார்த்தைக்கு வாழும் அர்த்தமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மிஸ்டர் மோகன் ஆகிய என் அப்பாதான் என்பதை 3 தெரு தள்ளியிருக்கும் ராஜீவ் நகரின் கடைசியில் கட்டப்பட்டிருக்கும் ஓட்டு வீட்டில் உள்ள மீனா அக்காவின் 5 வயது குழந்தையிடம் கேட்டாலும் சொல்லிவிடும். அந்த குழந்தையின் நனவிலி மனதில் கூட என் தந்தையின் குணநலன் பதிந்து விட்டது என்பதே சுட்டிக் காட்ட விரும்பிய விஷயம்.

கொடுக்கப்பட்ட இட்லி 4 தான் என்றாலும், மேலும் ஒன்று வேண்டும் என்று கேட்காமல் பெரிதாக ஏப்பம் விட்டு தான் வயிறாற சாப்பிட்டு விட்டதை பறைசாற்றிவிட்டு மெலிதாக சிரிக்கும் நாகரிகம் தெரிந்தவர் என் தந்தை. அப்படியே இன்னொரு இட்லி கேட்டாலும் அது கிடைக்கப் போவதில்லை என்பது எனக்கு மட்டுமல்ல மீனா அக்காவின் குழந்தைக்குக் கூட தெரியும். அந்த 4 இட்லி கூட ஒரு குடும்பத் தலைவர் உழைத்துப் போடுவதற்கு உயிருடன் இருக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காகத் தான் என்பது தெள்ளத் தெளிவு. சின்னம்மா ஏதேனும் ஆர்டர் போட்டால் போதும், சிரமேற்கொண்டு அந்த ஆர்டரை ஒபே பண்ணுவதில் ராணுவ ஒழுங்கை கடை பிடிப்பார். அன்று ஒருநாள் சப்பாத்தி மாவை பிசையச் சொல்லிவிட்டு கடைக்குச் சென்றுவிட்டார் சின்னம்மா. 1 மணி நேரம் கழித்து வந்து பார்த்த போதும் அவர் சப்பாத்தி மாவையே பிசைந்துகொண்டிருந்தார். அன்று அவர் வாங்கிய திட்டுக்கள் அவரது சொரணையற்ற மூளைக்குள் சென்று தாக்கி சிறிது கண்ணீரை வெளியே கொண்டு வந்துவிட்டது. ஆம் சப்பாத்தியை சுட்டு வைக்கச் சொன்னால் தான் அதைக் கூட சுட்டு வைப்பார். அவர் ஒரு எந்திரமாக மாறியிருந்தார்.

என் தந்தையை பொறுத்தவரை தலைக்குக் கீழ் கழுத்து என்ற ஒரு பகுதி இருப்பது எதற்கு என்று கேட்டால் அது சரி என்று தலையாட்டுவதற்காகவே, அந்த கழுத்து என்றுமே இட, வலமாக ஆட்டப்பட்தே இல்லை என்பதால், இடவலமாக ஆட்டுவதற்கு அர்த்தம் என்ன என்பதையே மறந்து விட்டிருப்பாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது. கண்கள் எப்பொழுதுமே தரையை நோக்கித் தான் இருக்கும். அப்படி தரையில் என்னதான் இருக்கிறது என்று தெரியவில்லை. ஒருவேலை போன ஜென்மத்தில் தரையை தோண்டி பழம்பெரும் நாகரிகங்களை கண்டுபிடிக்கும் ஆர்க்கியாலஜிஸ்டாக இருந்திருப்பாரோ என்னவோ? தரையை இப்படி ஆராய்ச்சி செய்யும் ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட்டை இந்த ஜென்மத்தில் இந்த உலகம் இழந்துவிட்டது என்றால் அது மிகையல்ல?

தாழ்வுணர்ச்சியை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு வெளிப்படுத்த வழி தெரியாமல் பரிதாபமாக திரிந்து கொண்டிருக்கும் என் தந்தைக்கு தன்னைப் போன்று அல்லது தன்னைவிட சமுதாயத்தில் வெட்கித் திரியும் அல்லது துன்பப்படும் ஜீவன்களை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு. அதில் அவருக்கு ஒருவித அமைதியும் கிடைக்கும். தன்னைப் போன்று துன்பப்படுபவர்களை காண நேர்ந்தால், வாழ்க்கை தனக்கு மட்டுமல்ல பலருக்கு அவ்வாறு தான் உள்ளது என்பதை உணர்ந்து அவரது மனம் அமைதி அடையும். இங்கு மட்டும் அல்ல தீ, ஊரெங்கும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. தான் மட்டும் தீயிற்கு பலியாகிக் கொண்டிருக்கவில்லை. ஊரே தீயினால் வெந்து கொண்டுதானிருக்கிறது என்பதில் நிம்மதியடையும் அவரது மனம் தன்னிச்சையாக உடலை ஆக்கிரமித்து தனக்கு தகுந்தாற் போல் சூழ்நிலையை மாற்றிக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் குறிப்பிட்ட விஷயத்திற்கு அடிமையாவது இப்படித்தான், சிகரெட் பிடிப்பதில் அடிமைத்தனம், காஃபி குடிப்பதில் அடிமைத்தனம், பேப்பர் படிப்பது, சீரியல்பார்ப்பது. தெருச்சண்டையை வேடிக்கை பார்ப்பது. ......என சில்லரை விஷயங்களில் மனம் ஆறுதல் அடை முயற்சி செய்து மறுபடி மறுபடி தோற்கும்.

மிஸ்டர் மோகனுக்கு இந்த சமுதாயம் அதாவது 99 சதவீதம் சின்னம்மா அனுமதித்த வரை அதிகாலையில் பேப்பர் படிப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஒருவித ரவுடித் தனத்துடன் பேப்பரை ஆக்கிரமித்துக் கொண்டு வரிவரியாக, விலாவாரியாக பரீட்சைக்கு படிப்பதைப் போல் படிப்பதில் அவரது உள்மனம் ஒருவித ஆறுதலை அடைந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலையிலிருந்து, ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மணல் லாரி ஏறியதுவரை அத்தனை கொடூரச் செய்திகளும் மிஸ்டர் மோகனை நிகழ்வாழ்க்கையின் தோல்வியிலிருந்து மீட்டெடுக்க உதவியது என்று சொன்னால் அது மிகையில்லை.

அன்று அதிகாலை,

எப்பொழுதும் அவன் (இஸ்மாயில் - செய்தித்தாள் போடுபவன்) இதயம் வெடவடெப்பது மிஸ்டர் மோகனுக்காக மட்டும் தான். அது ஒருவேளை பரிதாப உணர்வாக இருக்கலாம். ஒரு ஜீவன் 16 வயதினிலே மயிலைப் போல அதிகாலை வேளையில் செய்தித்தாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போதே நெஞ்சு படபடக்க ஆரம்பித்து விடும் அவனுக்கு. முதலில் யாருக்கு செய்தித்தாள்  போட வேண்டும் என்று அவனை அரைத்தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட தேள்ளத் தெளிவாக மிஸ்டர் மோகனின் பெயரை மரியாதையாக கூறுவான். செய்தித் தாளை கையில் வாங்கி மரியாதையாக நன்றி தெரிவிக்கும் பண்புமிக்க மனிதரை இந்த உலகம் இதற்கு முன்னும், இதற்குப் பின்னும் காணப்போவதில்லை என்று தனக்குத் தானே பலமுறை அவன் கூறிக்கொண்டதுண்டு.

அன்று கடவுள் செய்த சதியோ, இயற்கை செய்த சதியோ தெரியவில்லை இஸ்மாயிலுக்கு வயிற்றைக் கலக்கிக்கொண்டு வர, கடைசி நிமிட தேர்வு நிமிடங்களைப் போல, கடைசி ஓவர் கிரிக்கெட் விளையாட்டைப் போல காலைக் கடனை முடித்துக் கொண்டு விட்டு வர 3 நிமிடங்கள் அதிகமாகிவிட்டன. கால நேரத்தை கணக்கிட்டு புயலின் வேகத்திற்கு சாவல் விடும் விதத்தில் இஸ்மாயில் அரசு வழங்கிய தனது இலவச சைக்கிளில் வெறித்தனமாக பாய்ந்து வர, அங்கே மிஸ்டர் மோகன் முகத்தில் கடுமையை வரவழைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். பொதுவாக அரசு வழங்கிய எந்த இலவச சைக்கிளிலும் ஒருவார பயன்பாட்டிற்குப் பிறகு பிரேக் என்கிற பகுதி தனது செயல்பாட்டை முடித்துக் கொண்டு விட்டிருக்கும். இஸ்மாயிலின் சைக்கிளோ வருடம் ஒன்றை கடந்து புரட்சி செய்துகொண்டிருந்தது. ஒவ்வொரு சைக்கிளிலும் வழியில் செல்வோரை எச்சரிக்கும் மணி என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். அதேபோன்றதொரு அமைப்பு இஸ்மாயிலின் சைக்கிளிலும் இருந்தது. ஆனால் அதை உபயோகப்படுத்த வேண்டிய அவசியமே அவனுக்கு ஏற்படவில்லை. அந்த மணி ஒலி எழுப்புதல் என்னும் செயலை தானாகவே செய்ய ஆரம்பித்து விடும். சைக்கிளானது ஓடிக்கொண்டிருக்கும் போதே அந்த மணி தன்னைத் தானே இயக்கிக் கொள்ளும்.

கினி, கினி, கினி, ..... என இஸ்மாயிலின் வருகையை அந்த ஊர் முழுவதும் சொல்லாமல் சொல்லி செல்லும் அந்த ஒலி எப்பொழுதும் மிஸ்டர் மோகனுக்கு தேவகானமாகத் தான் இருந்தது. ஆனால் இப்பொழுதோ, இந்த உலகம் கண்டிராத மிஸ்டர் மோகனின் கோபத்தை அந்த சப்தம் வெளிக்கொணர்ந்து விட்டது. அவரது முகம் கடுமையாக இருந்ததை நூறடி தூரத்திலேயே உணர்ந்து கொணடான் இஸ்மாயில். பீரங்கி வண்டி முன் தைரியமாக நின்று சண்டை போடும் தீரமிக்க ராணுவ வீரனுக்கும், இஸ்மாயிலின் சைக்கிள் முன் நிற்கத் தைரியம் வராது என்பது திண்ணமானாலும், மிஸ்டர் மோகன் அன்று நடுப்பாதையை மறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும் போதே அதிலிருந்து தாவிக் குதித்து, சைக்கிளின் வேகத்திலேயே ஓடி அதன் வேகத்தை குறைக்கும் புதிய கண்டுபிடிப்பை கற்று வைத்திருந்த இஸ்மாயில் 10 அடிக்கு முன்னேயே மேனுவலாக பிரேக் போடும் செயலை நிறைவேற்றியிருந்தான். தனக்கு வழங்கப்பட்ட அரைமணி நேரத்தில் 3 நிமிடங்களை விழுங்கி விட்ட இஸ்மாயிலை, விழுங்கிவிடுவது போல வெறித்து பார்த்தார் மிஸ்டர் மோகன். அவன் அமைதியாக சுருட்டிக் கொடுத்த செய்தித் தாளை விருட்டென்று வேகமாக பிடிங்கி கண்கள் இரண்டையும் உருட்டியபடி முறைத்துப் பார்த்தார். அதன் பெயர்தான் கோபம் என்பதை அவர் தெரிந்து வைத்திருக்கிறார் என அன்றுதான் நான் கண்டுகொண்டேன்.

செய்தித் தாளின் மூன்றாம் பக்கத்தில், ஏதோ ஒரு செய்தியில் வைக்கப்படாத புள்ளி குறித்து கவலைப்பட்டுக்கொண்டிருந்த போது அவருக்கு காஃபி என்கிற அந்தத் திரவத்தை என்னால் கொடுக்க நேர்ந்தது குறித்து நான் சந்தோஷமடைந்தேன். என்னால் நம்பமுடியாத விஷயங்களுள் ஒன்று, அந்த திரவத்தை அவர் ரசித்து குடிப்பது மட்டுமல்ல. இன்னொரு கிளாஸ் வேண்டும் என்கிற தோரணையில் என்னைப் பார்ப்பதும் கூடத்தான். அதில் என்ன விசேஷம் என்றால் காஃபியை, கசாயம் போல் செய்வதில் வல்லுனரான எனது சின்னம்மா, கஷயாத்தை எப்படி செய்வார் என்பது தான். அதற்கெல்லாம் அதீதமான கற்பனை சக்தியும், கசப்புணர்ச்சியும் வேண்டும். சின்னம்மாவின் உணர்ச்சிகள் அவரது படைப்புகளில் (காஃபி, இட்லி, சாம்பார்) வெளிப்படையாகத் தெரியும். சாம்பாருக்கும், ரசத்துக்கும் 6 வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முயற்சிப்பவர்கள் தோல்வியைத் தழுவுவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படியென்றால் ரசத்தை பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. வெறும் தண்ணியை ஊற்றி பழைய சாதமாக சாப்பிடுவது குறித்து நான் என்றோ கற்றுக்கொண்டு விட்டேன்.

என் தந்தையின் மூத்த மனைவியின் பிள்ளையான நானும், என் தந்தையும் தினசரி சின்னம்மா விட்டெறியும் அம்புகளுக்கு பலியாகிக் கொண்டிருந்தோம். விஷம் தடவிய ஒவ்வொரு அம்புகளும் தைத்துச்சென்ற இடத்தின் வடுக்கள் கணக்கில் அடங்காதவை. நீர் வற்றிய கிணற்றைப் போல, கண்ணீர் வற்றிய கண்களுடன் நடமாடிக் கொண்டிருந்த என் தந்தை வாங்கி வந்த சாபங்களுக்கு நான் ஏன் பலியாகிக்கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி வெகுகாலமாகவே என்னை நச்சரித்துக் கொண்டுதான் இருந்தது.

ஆறரை மணிக்கு செய்தித்தாள், 7 மணிக்கு பாத்திரம் கழுவுதல், ஏழரை மணிக்கு துணி துவைத்தல், 8 மணிக்கு அலுவலகம் கிளம்புதல், 9 மணிக்கு விடுதலை.......

விடுதலைக்காக போராடியவர்களில் ஒருவரின் பெயரை சொல்லுமாறு என் வரலாற்று ஆசிரியர் கேள்வி கேட்ட போது, ஏதோ சிந்தனையில் இருந்த நான் மிஸ்டர் மோகன் என்று கூறிவிட்டேன். எனது ஆசிரியரும் வெரிகுட் என்று கூறி பாராட்டினார். அன்றுதான் எனக்கே தெரியும் காந்தியின் முழுப்பெயர் மிஸ்டர். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று.

அலுவலகம் செல்லும் அவஸ்தையில் 60 நொடிகளுக்குள் உணவு உண்ணும் சாதனைகள் என் தந்தையால் தினசரி நிகழ்த்தப்படுவது உண்டு. உருட்டிக் எடுக்கப்பட்ட கவளங்களை யானைகள் விழுங்குவது போல், இரண்டு உருண்டைகளை உள்நாக்கில் வைத்து அழுத்தி தண்ணீரை வாய்க்குள் கொட்டி விட்டு விருட்டென்று வெளியேறும் சாதனை நிகழ்ச்சி தினசரி நடைபெறுவது குறித்து இந்த உலகில் யார்தான் கவனிக்கிறார்கள். அதனால் அவர் 50 கிலோ தாஜ்மஹாலாகவே இன்று வரை இருக்கிறார். அவரது எடைக்கு தகுந்தாற்போல் டி.வி.எஸ் 50 ஒன்றை வைத்திருந்தாலும், அதிகமாக காற்றடித்தால் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்தே பயணத்தைத் தொடர்வார்.

சின்னம்மாவின் நெருக்கமான தோழியான பக்கத்து வீட்டு சரளா அக்காவின் மகன் குட்டி மணியை பற்றி சொல்ல வேண்டிய விஷயங்கள் சில உண்டு. 7ஆம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுவனுக்கு நியாயமாகவும், நேர்மையுடனும் வைத்திருக்க வேண்டிய பெயர் குண்டுமணி, இப்பொழுதே 50 கிலோவை கடந்து 60 கிலோவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான். அவன் சாப்பிடும் நேரம் போக சிலமணித்துளிகள் படிப்பான் என்று ஊருக்குள் பேசிக் கொள்வார்கள். அவனது தாடை எலும்புகள் கடினமானவை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். 24 மணி நேரத்தில் தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அதை உபயோகப்படுத்தி கடினமாக உழைத்துக் கொண்டிருப்பான். ஏதேனும் ஒரு உணவுப்பொருளை அவனது தாடைகள் அரைத்துக் கொண்டே இருக்கும் என்பதை இந்த நொடியிலும் என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

வயிற்றுக்கு மேல் கழுத்து என்னும் ஒரு உறுப்பு உண்டு என்று சொன்னால் அவன் நம்ப மாட்​டேன் என்கிறான். அவனைப் பொறுத்தவரை வயிற்றுக்கு மேல் தலை மட்டும் தான். அவனுக்கு உடை தைக்கும் தையல் தொழிலாளி வேர்வை சிந்தி தைக்கும் உடைகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு மேல் அவனுக்கு பத்துவதில்லை. அவன் நாளொரு ஒரு மேனியும்,  பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தான் என்று சொன்னால் அப்படியே அதை நம்பலாம்.

விஷயம் என்னவென்றால், குட்டி மணியின் தாய் சரளா, என் சின்னம்மாவின் நெருங்கிய தோழி என்பதால் குட்டி மணியை பள்ளிக்கு அழைத்துச்செல்லும் பொறுப்பு என் தந்தையின் தலையில் வந்து விடிந்தது. சின்னம்மாவினால் அந்த கட்டளை பிறப்பிக்கப்பட்ட போது, மிஸ்டர் மோகன், கண்கலங்கிப் போனதை நான் கவனித்தேன். அரசியல் வாதிகளைப் போல் அல்லாமல் அவர் நிஜமாகவே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்து விட்டார். இருப்பினும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.

குட்டி மணி அந்த பரிதாபமான டி.வி.எஸ். 50 மீது முதன் முதலில் ஏறி உட்கார்ந்த போது அதன் சக்கரப்பகுதியில் சற்று கோட்டம் விழுந்து விட்டது. சின்னம்மாவின் முன் அதை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது என நினைத்த என் தந்தை, அந்த ஆக்சிலேட்டரை பல்லைக் கடித்துக் கொண்டு திருகி முறுக்கினார். இருப்பினும் அந்த வண்டி கதறியதே தவிற ஒரு இன்ச் தூரம் கூட நகரவில்லை. ஒரு கையில் மாம்பழத்தையும், மற்றொரு கையில் பார்லிஜி பிஸ்கெட் பாக்கெட்டையும் வைத்துக்கொண்டு மாறி, மாறி சாப்பிட்டுக்கொண்டிருந்த குட்டி மணி இதையெல்லாம் பார்த்து கவலைப்படுவதாய் தெரியவில்லை. கண்கள் கலங்கிப் போன மிஸ்டர் மோகன், கால்கள் நடுங்க, கண்கள் கலங்க, கைகள் வெடவெடக்க அந்த டி.வி.எஸ். 50யை ஒரு ரிக்ஷாவாக நினைத்து தள்ளிக் கொண்டு சென்றார் மெக்கானிக் ஷாப்பை நோக்கி.

உடலில் இவ்வளவுதான் வேர்வை வடிய வேண்டும் என்கிற வரையறையைத் தாண்டி கண்ணாபின்னாவென வேர்த்து ஒழுகிய உடம்புடன் நடந்து வந்த மிஸ்டர் மோகனை பார்த்து பரிதாபப்பட்ட, மெக்கானிக் கடையின் முருகன் ஓடிச் சென்று என்தந்தையை கைத்தாங்கலாக பிடித்து அழைத்து சென்று உட்கார வைத்தான். வண்டியின் கோட்டம் விழுந்த சக்கரத்தை பழுது பார்க்கும் வரை அருகில் இருக்கும் இரும்பு சட்டத்தின் மீது உட்காரும் படி மேன்மை தாங்கிய குட்டி மணியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவனோ மாம்பழத்தை தோலுடன் சாப்பிட்டு முடித்துவிட்டு பெரிய மனது பண்ணி அந்த கொட்டையை கீழே போட்டுவிட்டு, பார்லிஜி யை கபலீகரம் செய்ய ஆரம்பித்தான்.

டி.வி.எஸ். 50யின் புல்லிங் கெபாசிட்டியை அதிகரித்து கொடுத்த முருகன் எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள் என பரிதாபமாக சொல்லியனுப்பினார். நியாயமாக 50ல் போக வேண்டிய வண்டி 15, 16, 17, திரும்பவும் 15 என வேகமுள் துடிதுடிக்க நிதானமாய் பயணித்து அந்த மூட்டையை பள்ளியில் இறக்கி விட்டு, காற்றாடியைப் போல் அலுவலகம் சென்றார்.

இந்தத் தண்டனையை தினமும் அனுபவித்து வந்த என் தந்தை, போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேன் என பிள்ளையார் படத்திற்கு முன் நின்று தினமும் நொந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தினமும் சாப்பிடும் 4 இட்லியில் இருந்து கிடைக்கும் கலோரி அனைத்தும் குட்டிமணியை பள்ளிக்கு அழைத்துச் செல்வதிலேயே தீர்ந்து விடும் என்பதால், அவர் மேலும் மேலும் எடை குறைய ஆரம்பித்தார்.

என் தந்தை எப்பொழுது இப்படியொரு அடிமையானார் என யோசித்துப் பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் அடிமையாக்கப் படுகிறார்கள் என்கிற கருத்து நிலவுகிறது. ஆணடிமைத் தனத்தைப் பற்றிய விழிப்புணர்வு இங்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். என் தந்தை ஒரு சிறந்த அடிமை என்பதற்கு எந்தவொரு நிரூபணமும் தேவையிருக்காது.

இரண்டாவது திருமணமான புதிதில் சிறு குழந்தையாய் இருந்த எனக்கு சில விஷயங்கள் நிழலான நியாபகமாக உள்ளது. இன்று என்ன நடந்திருக்கும் என என்னால் யூகித்து புரிந்து கொள்ளவும் முடிகிறது.

தான் இரண்டாம் தாரமாக வற்புறுத்தப்பட்டதால் ஏற்பட்ட கோபமாக இருக்கலாம். தனக்கென்று வரவேண்டிய அடிமை ஏற்கனவே இன்னொரு பெண்ணுக்கு அடிமையாக இருந்தவன் என்கிற மனோபாவமாக இருக்கலாம். எப்பொழும் பெண்களுக்கு தன்னுடை அடிமை கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் உண்டோ என்னவோ? ஒருவேளை நான் பிறந்திருக்காமல் இருந்திருந்தால் கூட சின்னம்மா என் தந்தையை மன்னித்திருக்கலாம். நான் என்றுமே அவரது ஆழ் மனதில் ஒரு முள்ளாகவே தைத்துக் கொண்டிருந்திருக்கிறேன். கண்ணில் நிரந்தரமாக விழுந்த தூசியைப் போல் நான் அவரை உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறேன். இதையெல்லாம் விட என் தந்தையால் இன்னொரு முறை தந்தையாக முடியவில்லை. அவருக்கும் என் சின்னம்மாவுக்கும் கடைசி வரை ஒரு குழந்தை பிறக்கவேயில்லை. இது எதனால் என்று எனக்குத் தெரியவில்லை. இதையெல்லாம் வெளிப்படையாக என்னால் விசாரித்து தெரிந்து கொள்ள முடியாது என்றாலும், சில விஷயங்களை யூகித்து புரிந்து கொள்ள முடிகிறது.

சித்தி கொடுமையிலிருந்து என்னை விடுவித்துவிட்டு தன்னை பலிகொடுத்துவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. சின்னம்மா இன்று வரை என் தந்தையை பழி வாங்கிக்கொண்டிருக்கிறார் என்றால் பின்னணியில் நிச்சயமாக வலிமையான ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும். என் தந்தை அவரது பழிவாங்குதலை மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்கிறார் என்றால் அதற்கும் காரணமில்லாம் இருக்காது. ஆழ் மனதுக்குள் காயப்பட்ட சின்னம்மாவின் மனதுக்கு என் தந்தை படும் துன்பங்களே மருந்தாக இருக்கிறது போல. உண்மையில் அவர்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்திருந்தால் நான் ஒதுக்கப்பட்டிருப்பேன் என்று நினைத்திருப்பார் என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். அவருக்கு என்மேல் மிகுந்த அன்பு உண்டு என்றாலும், வரைமுறையின்றி அடிமைத்தனத்தில் வாழும் அவர் மேல் எனக்கு சற்றும் அன்பு இல்லை.

ஒரு பெண்ணின் நியாயமான ஆசைகளில் மண்ணை அள்ளிப் போட்ட மிஸ்டர் மோகன் பழி வாங்கப்பட வேண்டியவரா?, இல்லையா? என பட்டிமன்றம் நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை. திருமணம் நடக்கும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு, திருமணத்திற்குப் பின் தன்னால் இயன்ற வரை பதிலீடு செய்ய நினைப்பதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும், சம்பந்தமே இல்லாமல் பழிவாங்கப்பட்ட எனது குழந்தைப் பருவத்திற்கு, பதிலீடாக பழி வாங்குவதற்குரிய ஒரு  வாய்ப்பாக அதை நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

அவர்களுக்கு திருமணமான புதிதில் 3 மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். திடீரென ஒரு நாள் மாவு ஆட்டும் கல்லில் மாவரைக்க ஆரம்பித்தார். ஏதோ உடற்பயிற்சிக்காக மாவரைக்கிறார் என்று தான் அப்பொழுது நினைத்தேன். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை அந்த கல்லுக்கு அவர் ஓய்வு கொடுக்கவேயில்லை. அந்த மூன்று மாத இடைவெளிக்குள் தான் ஏதோ ஒருநாளில் அவர் அடியாகி இருப்பார் எனத் தோன்றுகிறது. திருமணமான புதிதில் ஏதோ ஒருநாள் சின்னம்மா சிரித்த முகத்துடன் உணவு பரிமாரிய காட்சி புகை மூட்டமாக நியாபகத்தில் இருக்கிறது. ஆனால் இன்று அதை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. இதெல்லாம் என் பிரம்மையாக இருக்கலாம், அல்லது நிறைவேறாத விருப்பங்களின் வெளிப்பாடாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

குழந்தைப் பேறு என்பது ஒரு ஆண்மகனின் அங்கீகாரமாக இருக்கலாம். பெண்ணடிமைத் தனத்துக்கு குழந்தைப் பேறும் ஒரு காரணமாக இருக்கலாம். குழந்தைப் பேறு ஒரு பெண்ணிடம் ஆண்மகனை ஏற்றுக் கொள்ளச்செய்கிறது. ஆண்மையை ஏற்றுக் கொள்வதன் மூலம் பெண் ஆனவள் தன்னுடைய தானை இழந்து விடுகிறாள். அவள் ஆணுக்காகவும், குழந்தைக்காகவும் என ஆகிவிடுகிறாள், தன்னைச் சுற்றி எழுப்பப்பட்ட குடும்பம் என்னும் கோட்‌டைச் சுவர்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு கம்பீரமாக தவிக்கிறாள். பெண்ணடிமைத்தனத்தைப் பற்றி வீராவேசமாக பேசும் ஒரு குடும்பப்பெண் கம்பீரமாக பெண்ணடிமைத்தனத்தில் இருந்து கொண்டுதான் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணருவதேயில்லை. அவர்கள் அப்படிப்பட்ட கோட்டைச் சுவர்களை விரும்புகிறார்கள். குடும்பம் என்னும் கோட்டைச் சுவரையே ஒரு பெண் தனது பாதுகாப்பு அரணாக நினைத்து அதற்குள் விரும்பியே நுழைகிறாள். அதற்குள் இருந்து கொண்டே அடிமைத்தனத்தையும் எதிர்க்கிறாள். இது நடக்கவே போவதில்லை. முன் கதவு வழியாக சுதந்திரத்தையும், பின்கதவு வழியாக அடிமைத்தனத்தையும் விரும்பும் முரண்பட்ட பெண்ணால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.

என் சின்னம்மாவைப் பொருத்தவரை அவருக்கு குடும்பம் என்கிற அமைப்பு முழுமை பெறவில்லை. அதனால், அவர் அடிமையாகவில்லை. அடிமையானவர் என் தந்தைதான். அவர் குடும்பம் என்னும் கோட்டையை எழுப்பத் தவறிவிட்டார். அக்கோட்டைக்கு சிறைபட தயாராய் காத்துக் கொண்டிருந்த சின்னம்மாவை ஏமாற்றிவிட்டார். ஏமாற்றுக்காரர் என்ற பட்டத்துடன் ஒரு அடிமையைப்போல சின்னம்மாவின் காலடியில் விழுந்து கிடக்கிறார் அவர். இன்று மட்டுமல்ல என்றுமே அவர் அடிமையாகத்தான் இருக்கப் போகிறார். ஒரு பெண் விரும்பிய அடிமைத்தனத்தை கொடுக்க முடியாத ஒரு ஆண், அந்த பெண்ணிடம் அடிமையாவதைத் தவிர வேறு வழியில்லை.

Pin It