கடவுளுக்கேன் கருணை இல்லை?...
தொ. சூசைமிக்கேல்
ஆனதுபார் சவூதிவந்து இருப தாண்டு:
அடுக்கடுக்காய்த் துன்பமின்றி இன்ப மில்லை!
ஏனதுநீ சொல்வதென்(று) எல்லாரும் கேட்பர்:
என்னையன்றி அஃதறிவார் எவரும் இல்லை!
சுமைதாங்கி ஓய்வின்றிச் சுமையே தாங்கும்;
சொல்வார்கள்; இதுவரைநான் கண்ட தில்லை.
எமைத்தாங்கும் சுமைதாங்கி சவூதி நாட்டில்
எம்தலையின் சும்மாட்டுக்(கு) ஓய்வே இல்லை!
மாடாக உழைத்துவிட்டோம்; இளமை தன்னை
மாய்த்துவிட்டோம்; என்றாலும் மகிழ்ச்சி இல்லை.
காடாகக் கிடப்பவற்றைக் கழனி யாக்கும்
கனவுகட்குக் கனவில்கூட நனவு இல்லை!
கைநிறையச் சம்பளம்தான்; இருந்தும் என்ன?
கடன்சுமையின் கணக்கினிலே மாற்றம் இல்லை:
மெய்நிறைய நோய்மொய்த்துக் கொண்ட தாலே
மிஞ்சுவது சஞ்சலமே; இதுபொய் இல்லை!
‘எத்தனைநாள் இப்படியே வாழ்ந்தி ருப்போம்?’
என்பதொரு கேள்விக்கு விடையே இல்லை:
‘அத்தனையும் போதுமடா! போவோம்!’ என்றால்
அச்சுறுத்தும் செலவுகட்கோர் அளவே இல்லை!
வங்கிதனில் பணம்செலுத்தி முடித்த பின்னர்
வாய்க்கினிதாய்ச் சாப்பிடவோ காசும் இல்லை;
எங்கிருந்தோ கடன்வாங்கி அவ்வப் போது
இரைபோட்டுக் கொள்வதனால் வலுவும் இல்லை!
பெற்றமகன் பணிதேடிப் பிறிதோர் ஊரில்
பெருஞ்சிரமம் மேற்கொண்டும் விடிவே இல்லை;
உற்றமனை ஒற்றையளாய்த் தனித்த வீட்டில்
உழலுகின்றாள்; வாழ்க்கையிலே பயனே இல்லை!
‘கொண்டவளைப் பிரிந்ததெல்லாம் குழந்தைக்(கு)!’ என்னும்
கூற்றுக்குப் பிரிவுதினம் வரவே இல்லை:
என்றெனது இல்லாள், தன் கையால் அன்னம்
இட்டென்னை உண்ணவைப்பாள்? விளங்க வில்லை!
ஒவ்வொருநாள் இரவினிலும் உறங்கு தற்(கு)என்
உற்றார்தம்; ஞாபகங்கள் விடுவ தில்லை;
எவ்வளவு தான்புரண்டு படுத்த போதும்
இருவிழிகள் குளமாதல் நிற்ப தில்லை!
இவையனைத்தும் எனக்குமட்டும் நேர்வ தல்ல;
ஏனையர்க்கும் நேர்வதுதான்; ஐயம் இல்லை!
கவலையின்றி சவூதிமண்ணில் ஒருவ னேனும்
கண்துயில்வான் என்றெனக்குத் தோன்ற வில்லை.
தூக்கமிலா இரவுகளின் தொடர்ச்சி யாலே
துக்கமதைத் தாங்குதற்குச் சக்தி இல்லை;
யார்க்குமிலா வேதனையின் விபரம் சொல்லி
யாரிடமும் முறையிடவும் முடிய வில்லை!
கடவுளிடம் முறையிட்டு அலுத்துப் போனேன்:
கண்ணீர்விட்(டு) அழுதழுது களைத்துப் போனேன்;
கடவுளைநான் இல்லையென்று சொல்ல வில்லை;
கடவுளுக்கேன் என்னிடத்தில் கருணை இல்லை?...
- தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

ஆனதுபார் சவூதிவந்து இருப தாண்டு:
அடுக்கடுக்காய்த் துன்பமின்றி இன்ப மில்லை!
ஏனதுநீ சொல்வதென்(று) எல்லாரும் கேட்பர்:
என்னையன்றி அஃதறிவார் எவரும் இல்லை!

சுமைதாங்கி ஓய்வின்றிச் சுமையே தாங்கும்;
சொல்வார்கள்; இதுவரைநான் கண்ட தில்லை.
எமைத்தாங்கும் சுமைதாங்கி சவூதி நாட்டில்
எம்தலையின் சும்மாட்டுக்(கு) ஓய்வே இல்லை!

மாடாக உழைத்துவிட்டோம்; இளமை தன்னை
மாய்த்துவிட்டோம்; என்றாலும் மகிழ்ச்சி இல்லை.
காடாகக் கிடப்பவற்றைக் கழனி யாக்கும்
கனவுகட்குக் கனவில்கூட நனவு இல்லை!


கைநிறையச் சம்பளம்தான்; இருந்தும் என்ன?
கடன்சுமையின் கணக்கினிலே மாற்றம் இல்லை:
மெய்நிறைய நோய்மொய்த்துக் கொண்ட தாலே
மிஞ்சுவது சஞ்சலமே; இதுபொய் இல்லை!

‘எத்தனைநாள் இப்படியே வாழ்ந்தி ருப்போம்?’
என்பதொரு கேள்விக்கு விடையே இல்லை:
‘அத்தனையும் போதுமடா! போவோம்!’ என்றால்
அச்சுறுத்தும் செலவுகட்கோர் அளவே இல்லை!

வங்கிதனில் பணம்செலுத்தி முடித்த பின்னர்
வாய்க்கினிதாய்ச் சாப்பிடவோ காசும் இல்லை;
எங்கிருந்தோ கடன்வாங்கி அவ்வப் போது
இரைபோட்டுக் கொள்வதனால் வலுவும் இல்லை!

பெற்றமகன் பணிதேடிப் பிறிதோர் ஊரில்
பெருஞ்சிரமம் மேற்கொண்டும் விடிவே இல்லை;
உற்றமனை ஒற்றையளாய்த் தனித்த வீட்டில்
உழலுகின்றாள்; வாழ்க்கையிலே பயனே இல்லை!

‘கொண்டவளைப் பிரிந்ததெல்லாம் குழந்தைக்(கு)!’ என்னும்
கூற்றுக்குப் பிரிவுதினம் வரவே இல்லை:
என்றெனது இல்லாள், தன் கையால் அன்னம்
இட்டென்னை உண்ணவைப்பாள்? விளங்க வில்லை!

ஒவ்வொருநாள் இரவினிலும் உறங்கு தற்(கு)என்
உற்றார்தம்; ஞாபகங்கள் விடுவ தில்லை;
எவ்வளவு தான்புரண்டு படுத்த போதும்
இருவிழிகள் குளமாதல் நிற்ப தில்லை!

இவையனைத்தும் எனக்குமட்டும் நேர்வ தல்ல;
ஏனையர்க்கும் நேர்வதுதான்; ஐயம் இல்லை!
கவலையின்றி சவூதிமண்ணில் ஒருவ னேனும்
கண்துயில்வான் என்றெனக்குத் தோன்ற வில்லை.

தூக்கமிலா இரவுகளின் தொடர்ச்சி யாலே
துக்கமதைத் தாங்குதற்குச் சக்தி இல்லை;
யார்க்குமிலா வேதனையின் விபரம் சொல்லி
யாரிடமும் முறையிடவும் முடிய வில்லை!

கடவுளிடம் முறையிட்டு அலுத்துப் போனேன்:
கண்ணீர்விட்(டு) அழுதழுது களைத்துப் போனேன்;
கடவுளைநான் இல்லையென்று சொல்ல வில்லை;
கடவுளுக்கேன் என்னிடத்தில் கருணை இல்லை?...

- தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It