ஒரு நாடகம் தொடங்கியது
மேடையிலல்ல; என்னைச்சுற்றி

peopleஎன்னைப்
பொறியிலடைத்துத் தூக்க
உறவுகளால் ஒரு தத்ரூப நாடகம்

புரிந்துபோனதும்
புதிராய்த்தான் உதிர்ந்தேன்
முதலில்

பிறகு...
நானும் கலந்துகொண்டேன்
ஆவலும் அவசியமும் உந்த

நானும் நடிக்கிறேன் என்று
அந்த நடிகர்களுக்குத் தெரியாது
என் பாத்திரத்தின் கதை வசனம்
அவர்கள் அறியாதது

இதனுள் என்னைப்போல்
இன்னும் எத்தனைபேர்
எத்தனை அரிதார முகங்களுடன்
நடிக்கிறார்களோ தெரியாது

ஒரு சிலரைக் காணும்போது
இவர்கள் இன்று நடிப்பதாய்த்
தெரியவில்லையே என்று
நானே வியக்கும் அளவுக்கு
அத்தனை இயல்பாய் நடிக்கிறார்கள்

இதில் நானும் நடிக்கிறேன் என்று
அறிய முடியாத முட்டாள்கள்
அவர்கள் என்று நான் நினைத்தால்
நான்தான் முட்டாளோ
என்று தோன்றுகிறது

அடுத்த காட்சி எனக்கு வேறாகவும்
அவர்களுக்கு வேறாகவும் இருப்பதால்
இந்தப் பல்முனை நாடகத்தில்
அடிக்கடி வசனங்களை மாற்றிக்கொண்டே
இருக்க வேண்டியதாய் இருக்கிறது

எல்லோரும் கைதேர்ந்த
வசனகர்த்தாக்களாய்
வளர்ந்துகொண்டிருக்கிறார்கள்
காட்சிகளை அருமையாய்
அரை நொடியில் திட்டமிட்டு
அப்போதே அரங்கேற்றுகிறார்கள்

திறமையற்றவர்களெல்லாம்
சில காட்சிகளிலேயே
விடைபெற்றுக்கொள்கிறார்கள்

என்றாலும்
இந்த நாடகத்தின் முடிவு
எவருக்குமே தெரியவில்லை

இந்த நாடகம்
முடிவடையாது என்றும்
புரிந்துபோய்விட்டது

சுயங்கள் கழன்றுவிழுந்து
நடிப்பே சுயங்களாகிப் போயின
மெல்ல மெல்ல

வாழ்வது எப்போது என்றுதான்
எவருக்குமே தெரியவில்லை 

புகாரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It