பதினொன்றாம் வயதில்
விபத்தொன்றில்
கிணற்றில் விழ
கழுத்திற்கு கீழ்
கைகள் இரண்டையும் தவிற
எல்லாவற்றின் செயல்களையும் அந்த
கிணற்றால்
கொள்ளையடிக்கப்பட்டவன்!

உடலின் கசிவுகள்
இவனின் கட்டுக்குள் இல்லை
உடன்பிறந்தோரின் உதவிகள்
தொடர்கிறது
வருடங்கள் இருபத்தி ஐந்திற்கு
மேலாக!

கழுத்திற்கு கீழ் உணர்வில்லை - ஆனால்
உடல் முழுக்க மனவலியின் உணர்வுகள்
பழகி விட்டதென்று புன்னகைப்பான்
பார்ப்போரின் கண்களில்
முந்தும் கண்ணீர்மழை!

எத்தனையோ நண்பர்கள்
வந்தார்கள் சென்றார்கள்
புதிய துடப்பத்தின்
ஆரம்ப சுறுசுறுப்பு போலவே!

இருப்பினும்
சில தியாகதீபங்கள்
இவனுக்காய் அழுதுகொண்டு தான்
இருக்கிறார்கள்
உருகுவதைத் தவிற
வேறுவழியின்றி!

இவனிடம்
பேச யாருக்கு நேரமுண்டு - என
உணர்ந்த இவனின் தனிமையே
இவனுக்கு நல்ல தோழன்!

இவனும் தனிமையும் சேர்ந்து
புத்தகங்கள் வாசிப்பார்கள்
அழுவார்கள்
பள்ளிநாட்களின் நினைவுகள் தரும்
மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!

மூன்று மாதங்கள் முன்பு
தகப்பனின் மரணம்
ஆலமரம் விழுந்ததால்
கசிந்துருகுமதன்
நிழலின் துயரம்!

படுத்த படுக்கையில்
பல்லாண்டுகளாய் தாய்!

ஐந்து சகோதரிகள்
அவர்களின்
தியாகமும் அன்பும்!

தனிமையின் துணையோடு
இதெல்லாம் நினைத்துக்கொண்டே
நகர்ந்து கொண்டிருக்கிறது
இவனின் கவலைகளின்
இருண்ட மேகமூட்டத்தில்
கரையும் வாழ்க்கை!

கவலை கோபமாக மாறும்
சில நொடிகளில்
தனிமையும் இவனும் சேர்ந்து
பூமிப்பெண்ணை ஒரு சாத்து
சாத்துவார்கள்
பிறகு அழுவார்கள்!

இசையில் மேதையிவன் - ஆனால்
இவன் இசையை இசைக்கமட்டும்
மனமில்லா சமுதாயம்!

தசைகள் செயலற்ற இசைஞானிக்கு
இசையெதற்கு என்ற
விரக்தியில் இசைந்து
இசையை மறந்துவிட
முயற்சிக்கிறான்
காதலியை மறக்க முயன்று
தவிக்குமோர் காதலனைப்போல!

கண்டதை படித்து
பண்டிதனானா - அல்லது
பிறப்பாலேயே பண்டிதனா
எனும் வினா எழுப்பிக்கொண்டிருக்கிறது
இவனின் அறிவாற்றல்!

தந்தை விட்டுச்சென்ற
கொஞ்சம் வயல் நிலத்தில் மிஞ்சும்
வியர்வை
இவன் பசியை கொஞ்சம்
ஆற்றிக்கொண்டிருக்கிறது!

தேவைகள் அநேகம்
ஆனாலதை
கட்டுக்குள் வைக்கும்
அதீத விவேகமது
இவனின் சீடன்!

இந்நிலையிலும்
சுயமாக சம்பாதிக்க
துடிக்கும் உள்ளம்!

கணினியும்
கணினியில் தமிழின் அழகாம் "அழகியும்"
ஒன்றாய் கலந்திட
இவன் இதயம் முழுக்க தமிழின்று!

இணையம் வழி
சுயதொழில் செய்ய
யோசனை!

தெரு அரசியல்வாதி முதல்
ஐநா சபைத் தலைவர் வரை
எல்லோரிடமும் இணையம் வழி
வணக்கம் சொல்ல
காத்திருக்கிறது இவன் துடிப்பு!

தன்னிலையில்
இவ்வுலகில்
எத்தனை பேரென்று ஒருநாள்
அழுது உருகினான்
அதனால்
அவர்களுக்கென ஓர் இயக்கம் தீட்டும்
எழுச்சியின் சிந்தைனையில் இவனின்று!

தன்னிலை கண்டு
தற்கொலை தவிற்போரின்
எண்ணிக்கை கண்ட மகிழ்ச்சியில்
இந்நிலை தனக்கு தந்த இறைவனுக்கு
நன்றி சொல்லும் ஞானியிவன்!

அன்பர்கள் உதவினால் - அதை
சுயமரியாதை தடுத்தாலும்
தந்நிலை உணர்ந்த ஞானத்தால்
ஒருநாள் திரும்ப கொடுப்போமென்ற
உறுதியில் அதை நன்றியுடன்
அங்கீகரிப்பவன்!

இவன் தானே மனிதன்
இவன் போன்றோரை
உதவினால் ஏவரும் புனிதர்கள்!

இவன் பெயர் அந்தோனி
சென்னை ஏழைகளில் மூத்தவன்
உதவ மனமிருந்தால் போதும்
இவன் விலாசம் உங்களை
தேடி வரும்!

புனிதர்களாக வாழ்த்துக்கள்
அன்புடன்
என் சுரேஷ்


திரு அந்தோணியின் விலாசம்
Mr. S. Anthony Muthu C/O. Mr.J.Dharmaraj 5/96 Cheran Street KK Nagar Pammadhu Kulam Redhills Chennai 600052 Tamil Nadu, India Phone Number : 26323185 Mobile Number: 9444496600

சுரேஷ், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 
Pin It