எழும்பு!
கனவுகளேதுமற்றவுன்
நெடுந் தூக்கத்தை விட்டும்!

பார்!
உன்னால் துடி துடிக்கப் பிடுங்கப்பட்ட
சிட்டுக் குருவிகளின்
சிறகுகளின் முனையில்
குருதி கறுப்பாய்க்
காய்ந்து கிடப்பதை!

கேள்!
இறக்கைகளனைத்தையும்
விலங்கான உன்னிடத்தில் இழந்து
பறக்க முடியாமல்
குருவிகள் பாடும்
ஒப்பாரியின் ராகத்தை!

புரிந்து கொண்டாயா
இருந்தும் என்ன திமிருனக்கு ?

உன் பாதத்தை
விளிம்பாய்க் கொண்டு,
உன் ரேகையை
நூலாய் எடுத்து,
ஓர் அந்தகாரக் காரிருளில்
ஒரு விஷச் சிலந்தி
தனக்கான வலையைப் பின்னும் வரை
உனக்கேதும் புரியாதுதான்! 

எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It