Rainமழை!
ஒரு வரி
ஹைக்கூ கவிதை!

பெருவிருட்சங் கொண்ட
வனாந்தரங்கள்
ஜீவராசிக்கனுப்பும்
வான்வெளிக் கடிதம்!

நீலக்கடல்,
நீர் வீழ்ச்சி,
நீர் நிலைகளனைத்தினதும்
உதடுகள் முணுமுணுக்கும்
தாய் மொழி!

மேகத் துணி மூட்டையை
யாரோ இறுக்கிப் பிழிந்து விட்டு
சூரியனின் மேலே
காயப் போட்டார்களோ;
இப்படி இருண்டு கிடக்கிறதே!

மழைச் சாரல்
சற்று அதிகரித்துவிடின் - நம்
மானிடர் விழிகளில்
தொடர்ச்சியாய் தூறல்;
ஒன்று காய்ச்சலால்,
மற்றது வெள்ளப் பாய்ச்சலால்!

ஒரு நாழிப் பொழுதில்
ஒரு கோடிப் பிரசவங்கள்
ஆகாயத்திற்கு;
ஒரு ஊழிப் பொழுதின்
வேதனைகளை வெளிப்படுத்தும்
இடி மின்னல் வார்த்தைகள்
புரிகிறதா உனக்கு....?

எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It