அம்மா ஆசையாய்க் கொடுத்ததோ?

Moneyஅப்பா ஆசிர்வதித்துக் கொடுத்ததோ?

பிரிவுநாளின் நினைவாய்ப்
பிரியமாய்த் தோழன் விட்டுச்சென்றதோ?

"எதுவேண்டுமானாலும் வாங்கிக்கோ" என்று
தாத்தா பாட்டி சேர்ந்து கொடுத்ததோ?

பிறந்தநாள் பரிசு வாங்க மறந்ததற்காய்
"என் நினைவாய் எப்பொழுதுமே வைத்திரு" என்று
தோழியொருத்தி அவசரமாய்த் திணித்ததோ?

எல்லோர் பெயரும் இருக்கவேண்டும் என்று
எல்லோரும் ஒன்றாய் இருந்த வேளையில்
நட்பு வட்டாரங்கள் கூடிக் கையொப்பமிட்டதோ?

முதல் மாச சம்பளத்தின் அடையாள மிச்சமோ?

அவசரத்தேவைக்கு உதவும் என்று
பத்திரப்படுத்தி வைத்ததோ?

எது எப்படியிருந்தாலும்

கண்ணெதிரே அடிபட்டுக் கிடக்கும்
முகந்தெரியா நண்பருக்காகவோ,

தாளாத பசியில் தளர்ந்திருக்கும் முதியவரின்
யானைப்பசிக்கு சோளப்பொறியாகவோ,

பள்ளிசெல்லும் குழந்தையின்
கட்டணத்தொகையில் ஒரு பகுதியாகவோ

முழுமனத்தோடு செலவழிக்கையில்
முன்னைக்கிப்போது புனிதமடைகிறது
பணப்பையில் பத்திரப்படுத்தப் பட்டதாய்
எண்ணிப் பக்குவமாய்ச் சிரிக்கும்
ஒரு நூறு ரூபாய்த் தாள்!

ஒவ்வொரு உறவுகளுடனான
சந்திப்பும் புதுப்பிக்கப்படட்டும்
புது ரூபாய்த் தாளுடன்...

இப்படியாய் சில ரூபாய்கள் எப்பொழுதும்
இருக்கட்டும் நம்மிடையே.... 

இராகவன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It