Dalith ladyமுன் இரவில் இறக்கத்தில்
நமது வாசலைக் கடந்து
இருட்டின் எல்லையை
நூல் பிடித்து வெளியேறுகிறோம்
அகன்ற வீதிகளை நோக்கி

தெருவிளக்குகள் எங்கோ ஒளிதெறிக்க
நமது நிழலின் முன்பின்
ஆட்டங்களில் தடுக்கிக்கொள்கிறோம்
இடுப்பில் துணிமூடிய சட்டியுடன்
நாய்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாகக் குரைத்துப் பார்க்கும்
பழகிய வாசனைபிடித்து அடங்கும்

அவரவர் தெருக்களில் அவரவர்
பிரிகிறோம்
குடித்தனக்கார
ஆண்டைகளின் வாசலை நோக்கி

தெரு வாசலில் வெளிச்ச
சட்டத்துக்கு அப்பால் நின்று
குரலெடுப்போம்
அம்மா அன்னம் போடுங்க
கூடப்படிக்கும் பொடிசுகள்
எட்டிப்பார்த்துவிட்டுச் செல்லும்

ஏகாலி வந்திருக்காம்மா...
அம்பட்டவன் வந்திருக்காம்மா...
தோட்டி வந்திருக்காம்மா...
சக்கிலி வந்திருக்காம்மா...
குடிப்புள்ள வந்திருக்காம்மா...

ஏண்டி உன் அப்பன், ஆத்தா வரலியா
ஒனக்கு நேரங்காலமே தெரியாதா
இப்பத்தான் சாப்பிடப்போறோம்
இருட்டுல நின்னு பூதங்காக்காதே
தோட்டத்துப்பக்கமா வந்து ஓரமா நில்லு

ஐயா...
தஞ்சம் கொடு
உணவு கொடு
தண்ணி கொடு
வேல கொடு
மண்ணு கொடு
வாழ்வு கொடு
உயிரு கொடு
கொடு... கொடு... கொடு... கொடு...

வரிசைகள் நீண்டுகொண்டே இருக்கின்றன

உடலே பெரும் பிச்சைப் பாத்திரமாக
வாய்ப்பிளந்து நிற்கிறோம்
எல்லாக் காலங்களுக்குள்ளும்

எல்லாத் தர்மங்களும்
நமது பாத்திரத்தில்
இடப்படுகின்றன
அவை ஒரு பழகிய
விலங்கெனப் படுத்திருக்கிறது.


மாலதி மைத்ரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.