Mercyதோட்டகார பய ஒருத்தன்
கல்லால அடிக்க,
ஒத்தக்காலு ஊனமான
ஆட்டுக்குட்டிய தோளுல
சொமந்து ஆட்டம் போட்ட
காலம் நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!

மீனு புடிக்க ஆத்துக்கு
போயி கெண்ட மீன
புடிச்சுப்புட்டு, பாவப்பட்டு
ஆத்தோட அனுப்பி வச்சு
துள்ளியோடி வீடு வந்த
காலம் நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!

பள்ளிக்கூடம் விட்டு
திரும்பையில தெருவோரம்
தனியா தவிச்ச நாய்க்குட்டிய
தூக்கி வந்து "ஹார்லிக்ஸ்"
குடுத்து ஒண்ணா வௌயாடுன
காலம் நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!

தக்காளி செடி ஒண்ணு
கொண்டு வந்து நாம
வளர்க்க,இல விட்ட
செடிமேல ஒரு நாளு
அடைமழை பெய்ய
குடகொண்டு செடிக்கு
காவலா நின்ன
காலம் நினவுக்கு வந்துருச்சே
நண்பனே!

அஞ்சறிவு விலங்குக்கும்,
அஃறிணை செடிக்கும்,
காட்டின அன்பெல்லாம்
காலத்தோட மறந்து போச்சுதே..

அப்பனாத்தாவ அனாதயா
முதியோர் இல்லத்துல
விட்டு வரும்போது
ஆறறிவுல ஒண்ணு
கொறஞ்சு போனதா நினவு
சொல்லுதே நண்பனே!

நிலாரசிகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It