என்னரும் வன்னியை
எரித்தழித்தின்று
எதிரி வென்றான்.

மூல வேரறுத்தெறிந்தும்
"சூல்கொள்" உருவின்
Eelamகருவறை அறுத்தும்
சிறுகச் சிறுக எறும்புகள் போல
தமிழன் சேர்த்த
அனைத்தையும் அழித்து
எதிரி வென்றான்.

குழந்தைகள் தலைகளை
அறுத்தறுத்து எறிந்து
அவன் ஏற்றிய கொடியில்
உலகம் மகிழ்ந்தது.

பட்டினியிருந்தேனும் உயிருக்கு
பாதுகாப்பென்று எண்ணிய
குழிகளிற்குள்ளேயே
உயிரோடு புதைந்ததென்
தமிழனின் மூச்சு

தமிழர் சாதியின்
குருதியில் மிதந்த
கடைசிக்குடியிருப்பையும்
எதிரி எரித்தழித்தான்

பட்டினியோடு குற்றுயிராக்கி
வல்லமையிழந்த அந்த மனிதரைப்
பந்தாடிப் பந்தாடி
எதிரி பூரிப்படைந்தான்.

கண்முன்னே காலறுபட்டுக்
கையறுபட்டு முண்டமாய்ப்போன
தமிழர் பிணங்களை
உலகம் கொண்டாடியது.

என் மூதாதையரும்,
நானுமாய் வாழப்பிறந்த
மண்ணினில் இருந்தும்,
வயல்களிலிருந்தும்
கடல்களிலிருந்தும்
கடைத்தெருவிருந்தும்-என்
மக்களை விரட்டிய
பேய்களோடு கூடிப் புணர்ந்து
சன்னதம் ஆடின
உலகப் பிசாசுகள்.

உன் வம்சக் கொடிகளை
வேரறுத்தெறிந்த
துயரச் சுமைக்குள் தன்னினைவிழந்து
தவிக்கும் என் வன்னிதாயே
உன்னத் தேற்ற
வழியறிகிலேன் அம்மா!!!


தமிழ்சித்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It