மேற்கூரை சுமையினைத்
தாங்கமுடியாத மண்டபத்தூணருகே
தூங்கி வழியும் கோட்டான்களின்
நிழலசைவை ரசித்தபடி
வடிந்து கிடந்தது பகல்நிலவு

சிதிலமடைந்த மேற்புறச் சுவர்முட்டும்
காட்டுமரத்தின் கிளையொன்று
ஆகமவிதிகள் எழுதிய இலக்கணத்தை
மாற்றியமைத்துக் கொண்டிருந்தது

கல்லிடுக்குகள் சிதைந்து
தூணிட்ட முத்தம் தவிர்த்து
இணையில்லா இதழ் பிரித்து
யார் மீதும் எப்போதும்
விழத் தயாராக இருந்தது
கோவிலுறுப்புகள்

இருட்டும் சூன்யமும்
ஒன்றையொன்று
முட்டிக் கொண்டிருக்கும்
கருவறையின் வெற்றிடத்தை
பறவைகளின் புழுக்கைகள்
நிரப்பிக் கொண்டிருக்க

யாருக்கோ ரகசியத்தைக்
கசிய வைத்தபடி காத்திருக்கிறது
பள்ளிப்படை கோவில்

ஆதவா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It