மழைக்காலத்தில் குரலெழுப்பும்
தவளையின் காற்றுப்பையாய்
துயரத்தால் பெருத்திருக்கிறது
மரணித்தவன் வீடு.

வாழ்ந்த பொழுதுகளில்
அவனது கழிவிரக்கமும்
முற்றிய கொடுங்கோன்மையும்
இரத்தமுறைந்த முதுகின் பின்புறம்
அலசப் படுகின்றன.

விதவிமான குரல்களில்
உருகி வழிகின்றன
உயிரின் இழப்புகள்.

அசைவற்றவனின் ஆன்மா
சூடேறிய புகைவளையமாய்
காலவெளிக்குள் பயணிக்கிறது
ஒளிவேகத்தில்.

இறுதி ஊர்வலத்தின்
சிந்திய பூக்களில்
அறுந்து தொங்குகிறது
வாழ்வின் இரகசியம்

உள்ளறையிலிருந்து
கழுவித் தள்ளும்
முற்றத்து நீரில்
தளும்பித் தெறிக்கிறது
மரணித்தவனின் மிச்சம்.


சுகிர்தராணி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.