நீண்டு விரவியிருக்கும்
நிசப்தத்தினை
என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை

நிசப்தத்தின் சூக்குமம் தேடி
தாயின் கருவறையினுள்
மீண்டும் சென்றதில்
அன்று உதைத்த ஒலி
எதிரொலித்ததில் நிசப்தம் தொலைந்தது

இரவின் உச்சத்தில்
நிசப்தம் நிலவியிருக்குமா என்று
இரவுகளை எண்ணியிருக்க
வெளிச்சம் குத்தி இரவு அலறியதில்
நிசப்தத்தின் வாடை மறைந்தது.

பிரபஞ்ச நுனியில் கால்புதைத்து
வெறுமை கோள்களில் நிசப்தம் தேட
சூன்யம் என்னும் சப்தம்
தெறித்து நிசப்தம் கலைந்தது

எங்கு தேடினும்
அதன் முடிச்சைப் பெற முடியவில்லை

பிறிதொருநாள்
எனக்கருகே சம்மணமிட்டு
கவனிக்க ஆளில்லை என்று
சப்தமாய் அழுதுகொண்டிருந்தது
நிசப்தம்


✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.