lonelygirl_373ஒரு காலகட்டத்தில் 

நமக்கிடையேயான 

பிரமிப்பு 

நீங்கிப் போகலாம்..

அப்போது நாம் 

பிரியமாயிருப்பதே

பிரமிப்பாயிருக்கலாம்..

 

ஒரு நேரத்தில் 

நமக்கிடையேயான

ரசனைகள் மாறிப் போகலாம்

அந்நாளில் நமது 

ஒத்த சிந்தனைகளே

ரசனையாகலாம்..

 

ஒரு பொழுதில்

நமக்கிடையேயான

அத்தனையும் கசந்து போகலாம்..

ஆனபோதும்

முந்தைய தினசரி பதிவுகளே

சர்க்கரையாகலாம்..

 

எல்லாம் மாறிப் போகட்டும் விலகலில்.. 

மாறாதிருக்கட்டும் எதுவும் நெருக்கத்தில்..

 

&&&&&&

 

பெரும் இரைச்சலுடன்

கடந்து போகும் வாகனப் பொதிகளுக்கு

மத்தியில்

கண்ணீருடன் பயணப்படுமென் 

விழிகளை யாரும் 

கண்டு கொள்ள இயலாதுதான்.. 

 

சொட்டு சொட்டாய் வீழும் கண்ணீரைத் 

தொட்டுத் தொட்டு உலர வைக்கும்

காற்றுக்கு மட்டும் 

என் கண்ணீருக்கான இரகசியம் தெரியும்.. 

 

யாரிடமும் சொல்லத் தெரியாத 

காரணத்தால் 

காற்றை மட்டும் அனுமதித்திருக்கிறேன்..

என் கண்களுக்கும், கனவுகளுக்குமான

நடைபாதைகளில்..

 

&&&&&

 

எதிர்காலம் பற்றிய

எந்தவொரு அச்சமுமற்று

நிகழ்காலத்தில் வாழ்ந்துவிட

ஏங்குமென் மனதின் 

அத்துணை துயரங்களையும்

துடைத்தெறிந்து விடுகிறது

கடந்தகாலத்தில் நீயனுப்பிய 

குறுஞ்செய்திக்ள்...

 

&&&&&

 

எனது எதிர்பார்ப்பின் 

எல்லைகளைத் தகர்த்தெறியும் 

உனது அலட்சியத்திலென்

நினைவிலிருந்து

ஒவ்வொரு கண்ணியாய்

உதிரத் துவங்குகிறாய்..

 

நீளும் பொழுதுகளில் சேமிக்கிறேன்

உதிரும் கண்ணிகளை

மீண்டும் நினைவில் கோர்ப்பதற்கு.. 

 

&&&&&&

 

மகிழ்வுறுமென் கனவுகளையும்

துயருறுமென் இரவுகளையும்

உனக்குச் சொல்வதற்கு பிரியமில்லை..

 

எனது பெருந்துயரும்

சிறு மகிழ்வும்

என்ன தந்துவிடக் கூடும்

காதலற்ற உன் இதயத்தில்..

 

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It