கொதித்துக் கொண்டிருக்கும்
எனது தேநீரை
இமைக்காமல் நீ
பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அது உனது தேநீராகவும்
ஆகி விடுகிறது

கிளையிலிருந்து விடுதலை பெற்ற
முதிய இலையொன்று
பூமியைப் போய் சேர்வதற்குள்
சிறிய தவம் இயற்றி
முடித்து விடுகிறது

முத்தமிடும் போதே
ஞானம் பெற்றுவிடும் உதடுகள்
இதயத்திற்குள் இதயத்தை
கடத்தி விடுகின்றன

இந்த நொடிக்காகவே
காத்திருந்த கருங்கல் புத்தன்
யுகம் யுகம் கடந்த பின்பு
முதன் முதலாய் புன்னகைக்கிறான்
உள்ளிருக்கும் தேரை சீராக
சுவாசம் கொள்கிறது

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.