உன் வாசலில் மட்டும்
தேங்குவதில்லை மழைநீர்
தூங்குகிறது

*
நீ ஜன்னலோரம்
அமர்ந்திருக்கிறாய்
வீதி ரயிலாகிறது

*
போதி கடந்த பறவை
அதன்பிறகு
கூடடையேவில்லை

*
பின் வீட்டிலிருந்து வருகிறதா
முன் வீட்டிலிருந்து வருகிறதா
என் வீட்டு சாயந்திரம்

*
வாவ் வாவ் என்றே குரைக்கும்
கடைசி வீட்டு நாய்க்கு
எப்போதும் ஆச்சரியம் தான்

*
ஆயிரம் சித்தார்த்தனை
அடைத்து வைத்தாலும்
ஒற்றை புத்தன் வந்தே தீர்வான்

*
முதிர்ந்த
வெயிலுக்குள்
நீச்சலடிக்கும் பூமி

*
சாவி கிடைத்தாலும்
திறக்க வேண்டாத வீடு
ஊருக்கு ஒன்றிருக்கிறது

*
எழுது
நீ பிடித்த கரமும்
கவிதை என்று

*
தூங்குகையில்
வரையும் மீசை
உடனே வளர்ந்து விடுகிறது

*
கோடை மழைக்கு
மேடை போட்டது போல
குடையற்ற உன் நடை

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.