போய்வருவதாகச் சொல்லி
துணிக்கடை பொம்மையிடம்
கையசைக்கிறாள் பாப்பா.

***

காற்றசைக்கும் மர இலைகளில்
சலசலக்கிறது
மெல்லிய நீரோட்டம்.

***

அழைப்பிற்குத் திரும்பாமல்
காதை மட்டுமே அசைக்கிறது
பூனை.

***

அசையாத புத்தர் சிலை
சலனத்துடன் நின்றபடி
நான்.

***

தாய் மறந்தாலும்
சேய் மறப்பதே இல்லை
பொம்மைக்கு சோறூட்ட.

***

சன்னலுக்கு வெளியே மரம்
கண்ணாடி மேசைமீது அசைகிறது
தலைகீழாக.

***

கூண்டினைத் திறந்துவிடுங்கள்
பறந்தே சாகட்டும்
பறவைகள்.

***

பிறந்தநாள் மெழுகில்
உருகிப்போகிறது
வயது.

- வான்மதி செந்தில்வாணன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.