போய்வருவதாகச் சொல்லி
துணிக்கடை பொம்மையிடம்
கையசைக்கிறாள் பாப்பா.
***
காற்றசைக்கும் மர இலைகளில்
சலசலக்கிறது
மெல்லிய நீரோட்டம்.
***
அழைப்பிற்குத் திரும்பாமல்
காதை மட்டுமே அசைக்கிறது
பூனை.
***
அசையாத புத்தர் சிலை
சலனத்துடன் நின்றபடி
நான்.
***
தாய் மறந்தாலும்
சேய் மறப்பதே இல்லை
பொம்மைக்கு சோறூட்ட.
***
சன்னலுக்கு வெளியே மரம்
கண்ணாடி மேசைமீது அசைகிறது
தலைகீழாக.
***
கூண்டினைத் திறந்துவிடுங்கள்
பறந்தே சாகட்டும்
பறவைகள்.
***
பிறந்தநாள் மெழுகில்
உருகிப்போகிறது
வயது.
- வான்மதி செந்தில்வாணன்
RSS feed for comments to this post