பிரதிபலிப்புகள் அடங்கிய
கனவொன்றுக்குள் உன்
நினைவாகி நிகழ்கிறேன்....
நிலையான இருத்தல்களையும்
நிலையில்லா இருத்தல்களையும்
கலந்தே செய்கிறது
உன் தாக்கங்கள்....
எல்லையில்லா காட்சிகள்
உனதான நம் ரகசிய
எல்லைக்குள் காட்சிப்பட்டு
போகிறது....
ஆழ்மனதிலிருந்து பெறப்பட்ட
ஆசைகளும், அவஸ்தைகளும்
அடுக்கடுக்காய் பாதை தெளிகிறது.....
காரணம் ஏதும் இன்றியே
வாழ்வின் மொத்த சாயல்களையும்
உனதாக்கிக் கொள்கிறேன்....
தவங்கள் இன்றியே
வரங்கள் கிடைப்பதாகவே
நம்பப்படுகிறது எனதான
உன் அருகிருப்புகள்...
மொத்த பிம்பமும் உனதாகவே
கொண்ட கிரகம் ஒன்றிற்குள்
புதிதாய் புலம் பெயர்ந்து
கொண்டிருக்கிறோம் - இதுவும்
மற்றொரு கனவாகவே இருக்கலாம்.....
- ஆனந்தி ராமகிருஷ்ணன்