Crane 291அடர்வனமற்ற
இருப்பின் பால் தனித்து
ஒற்றை கால் தவத்தில்
ஒரு கடிய வாழ்வை
நகர்த்திய பெண் பட்சி

வற்றிய நதிகளின் எல்லைதாண்டி
குஞ்சுகளின் இரைக்காய்
பாலை வெளியேகி
ஆட்டிடைச்சியாயும்
ஊண் தேடியலைந்ததாய்
கேவி அழுதிருக்கிறது என்னிடம்
நான் குஞ்சாய் இருந்த வேளையது

மனசு தாளாமல்
வலியோடு அழுதிருந்தேன்
வேறெதற்கும் வழியற்று நானும்

பின் வந்த காலங்களில்
பசித்திருந்த பொழுதுகளை சேமித்து
சுய அலகின் இறகுகளால்
கூடும் பின்னியது

தன் குஞ்சுகளின் வாழ்வு துலங்கும்
கனவுகளில் சிலிர்த்த
பொழுதொன்றில்
தன் ஆயுள்குளம் வற்ற
கணக்கு வழக்குகளை முடித்து
கரை ஏறிற்று

மீட்சி பெறு கணம்
எம் விழிகளில்
நதிகளை திருப்பி விட்டு
இறுதி விடை வாங்கி
திரும்பி வரா திசை நோக்கி
உயிருதிர்த்திப் பறந்தது
அவ்வெண் கொக்கு.

- ரோஷான் ஏ.ஜிப்ரி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.