கிழக்கின் வரலாற்று ஏட்டில்
கிழிந்துதான் கிடக்கிறது
முதலாம் சமுகத்தின் இரண்டாம் பந்தி
மாசடைந்திருக்கும் நம்
மண்ணெங்கும்
முடிவற்ற துயரை
தன் நரைக்குறிப்பால்
எழுதி கொண்டிருக்கின்றன
பாலியம் கடந்த பருவத் தூரிகைகள்
காட்சியோடு உறைந்து போகும்
சித்திரங்களின் வலி
மனசை கீறியபடி வரைபட்டிருக்கிறன
யாரும் பயணிக்காத முற்றங்களில்
கற்பனையின் உலகத்தை அன்றி
வேறேதும் கானா
வாழ்வின் நீட்சி
மயான வீதிகளை
சமீபித்து கொண்டிருக்கின்றன
எந்த கங்கையிலும்
கழுவ முடியா கறைபூசி
‘அத்தர்’வாசமாய் காட்டிக் கொள்ளும்
பீ நாத்தங்கள்
இருப்பின் வசமிருக்கும்
தராசுகளின் தட்டில்
இயலாமை எப்போதும்
பொருளற்ற பொதியாய் ஆக
மனிதத்துவம்
கணிதத்துவத்தை மிஞ்சும்படி
கணிக்கப் படுகின்றன
வாழ்வென்பது
பொருந்தத் தகாத பொய் கூற்று
என்றானதால்;
காலப் புல்லாங்குழல்
வாசித்துக் கொண்டிருக்கின்றது
இயலாமையின் பொருளை
தனித்தலையும்
மௌனப் பறவைகளின்
ராகங்களையொத்த
ரணங்களில் பிரிகிறது மொழி
கேட்பதற்கான
புலன்கள் தான்
பூமியிலில்லை என்ற
வலியோடு ஒலிக்கிறது
இசையற்ற பாடல்!
- ரோஷான் ஏ.ஜிப்ரி