vinayaga 400மூத்திர சந்து ஒன்றின் முகப்பில்
திடீரென எழுந்தருளியிருக்கிறார்
வர்ணம் பூசப்பட்ட
மண்ணுப் பிள்ளையார்
கையிலொரு
காவிக் கொடியோடு...

கணபதிம் திம் திம்
கணபதிம் திம் திம்
என்ற சினிமா பாடல்
இடைவிடாது ஒலிக்க
காதில் வழியும் குருதியை
கண்டுகொள்ளாமல்
புலன் அடக்கி
பொறுமையோடிருக்கிறார்

பத்தி சூடம் காட்டி
படையல் மேல்
படையல் வைத்ததில்
அஜீரணமாகி அவஸ்தைப்பட்டாலும்
பொறுமையோடிருக்கிறார்

நெத்தியிலே
நீளமாய்
குங்குமத்தை இழுத்துவிட்ட
கும்பல் ஒன்று
குடிவெறி தலைக்கேறி
குத்தாட்டம் போட்ட போதும்
பொறுமையோடிக்கிறார்

முஸ்லிம்கள் தெருவழியே
மூர்க்கமான கத்தலோடு
ஊர்வலமாய்
கொண்டு செல்லப்பட்டபோதும்
என்ன நடக்குமோ என்கிற அச்சத்தோடு
நடுங்கும் கால்களை
நாசுக்காக மறைத்து
பொறுமையோடுதான்
இருக்கிறார்

கடைசியாக
கழிவுக் குட்டையொன்றில்
குப்புற தள்ளி
குறுக்கில் மிதித்து
மூழ்கடித்த போதும்
பொறுமையாகத்தான் இருக்கிறார்

நீரில் கரைந்து
மண்ணோடு மண்ணாக
மக்கிப்போன பின்னும் கூட
பொறுமையோடிக்கிறார்
தம் பெயரால்
முஸ்லிம்கள் தெருவில்
தூண்டப்பட்ட கலவரம்
இரத்தத்தால் மூழ்கடிக்கப்பட்ட
பிரக்ஞை ஏதுமற்று
அந்த மண்ணுப் பிள்ளையார்...

Pin It