என் மரணம்
நிகழ்ந்து விட்டதாக
என் எதிரிகள் தான்
தொலைக்காட்சியில்
முதலில் அறிவித்தார்கள்
ஒரு பிணத்தின்
கழுத்தருகே
என் முகத்தையும்
வைத்துக் காட்டினார்கள்
எனக்கு
அந்நியமானவர்கள் முதல்
அன்னியோன்னியமானவர்கள் வரை
அனைவருமே
என் மரணத்துக்கு
இரங்கல் தெரிவித்தார்கள்
என் மரணத்தை
அவர்கள்
உள்ளூர விரும்பியிருக்கிறார்கள்
என் மனத்தின்
அடியாழத்தில்
ஏதோவோர் ஓரத்தில்
ஒரு சிறு நம்பிக்கையின்
கீற்று
நான் மரணிக்கவில்லையென்று
சொல்கிறவரை
என் மரணத்தை
எப்படி நான் நம்ப முடியும்.
என் அடையாளம்
அவன்.
அவன் வேறு
நான் வேறோ?
எழுநூறு கோடி மனிதர்கள்
இருப்பதாய் நம்பும்
கடவுள்
இருக்கிறாரா என்று
எப்படி சந்தேகிப்பதில்லையோ
அப்படியே
எட்டு கோடி தமிழர்கள்
நம்பும்
ஒரு மனிதன்
இருப்பதை நாங்கள்
சந்தேகிப்பதில்லை.
வருவார் அவர் வருவார்
அதுவரை இருப்பாய் தமிழனே நெருப்பாய்.
RSS feed for comments to this post