ladyபிடிமான இடுக்கில் வழியும்
வியர்வை ஒற்றிய விரல் பதித்த
நகக் குழியில்
அகால குறிப்புகள் நிரம்பியிருக்க

றெக்கையின்றி கிடக்கும்
குளவியை
இழுத்துச் செல்லும்
எறும்பாகிறாய்

தீர்மானமற்ற கடிதமொன்றில்
முரணாகிப்போன
அர்த்தங்கள் மீதேறும்
ஆசையை
சொற்கள் திணறிச் சுமக்கையில்

அதன் இறுதி மூச்சைக் கைவிட்டு
அனாதையாகி அனத்தும்
ஊடல் தருணங்கள்
மௌனக் கூர்க் கொண்டு குத்தப்பட்டு
துடிக்க

இதயத்தின் சிறு பகுதியொன்றை
தன் குரல் வளைக்குள்
அடைத்து கேவுகிறது
சாமத் தவளை

- ப்ரீத்தி ஸ்ரீதரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It