sad man 351அழுவது ஒன்றே ஆறுதல் என்றான பின்
அவசரமாய் இழுத்து வருகிறாய்
ஒரு பெருந்தனிமையை

யாரும் நுழையா அதனிடத்தில்
சம்மணமிட்டு அமர்கின்ற
துணிச்சலின் பாதத்தில் கால் ஆணி

இனி
அவசரமில்லை என்ற நிதானத்தின்
பிடரி முடி பிடித்து அழைத்துப் போகிற
தோல்வி தான் பெருந்தொல்லை என்பதை
இன்னொருமுறையும் நீ அறியத்தான் வேண்டும்

பலி பீடந்தன்னில் வெட்டப்படும் கனவின்
காது வழி கசிந்துருகும் கருப்பு ரத்தத்தை
கோயில் பூசாரியின் அருள் தீவிரத்தோடு
உட்கொண்ட பின் நிதானத்திற்கு வரும்
யாவற்றையும் அதன் வழியே
நீ ஏற்கத் தான் வேண்டும்

அழுவதொன்றே ஆறுதல் என்றான பின்
அவரவர் கைமணல் சிற்பத்தின்
கடல் அழிக்கா சுயநலத்தை
அவர் வழியே காண்பதாய்
எப்போதும் நாம் நடிக்கத்தான் வேண்டும்

- ரேவா

Pin It