அழுவது ஒன்றே ஆறுதல் என்றான பின்
அவசரமாய் இழுத்து வருகிறாய்
ஒரு பெருந்தனிமையை
யாரும் நுழையா அதனிடத்தில்
சம்மணமிட்டு அமர்கின்ற
துணிச்சலின் பாதத்தில் கால் ஆணி
இனி
அவசரமில்லை என்ற நிதானத்தின்
பிடரி முடி பிடித்து அழைத்துப் போகிற
தோல்வி தான் பெருந்தொல்லை என்பதை
இன்னொருமுறையும் நீ அறியத்தான் வேண்டும்
பலி பீடந்தன்னில் வெட்டப்படும் கனவின்
காது வழி கசிந்துருகும் கருப்பு ரத்தத்தை
கோயில் பூசாரியின் அருள் தீவிரத்தோடு
உட்கொண்ட பின் நிதானத்திற்கு வரும்
யாவற்றையும் அதன் வழியே
நீ ஏற்கத் தான் வேண்டும்
அழுவதொன்றே ஆறுதல் என்றான பின்
அவரவர் கைமணல் சிற்பத்தின்
கடல் அழிக்கா சுயநலத்தை
அவர் வழியே காண்பதாய்
எப்போதும் நாம் நடிக்கத்தான் வேண்டும்
- ரேவா