இரவின் விளிம்பில்
உடைபடும் பனித்துளிகளில்
மென்மையாய்க் கரைகின்றன
என்
கனவுகள்

கரையும் கனவுகளிலிருந்து
கண்கள் கசக்கி
விழித்தெழுகின்றன
என்
கடந்த காலங்கள்

கடந்த காலங்களின்
இருள் துடைத்து
வெளுத்துச் சிவக்கின்றன
என்
மௌனங்கள்

மௌனங்களின்
அர்த்த அழுத்தங்களில்
உடைபட்டுக்
கண்ணாடிச் சில்லுகளாய்ச்
சிதறுகின்றது
என்
தனிமை

தனிமையின்
வெப்பச்சூட்டில் ஆவியாகி
வான்கலந்து
மழைத்துளிகளாய்
வழிகின்றன
என்
கண்ணீர்த் துளிகள்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.