நிஜம்
பலவண்ண மலர்களாய்ப்
பூத்துக்குலுங்கும்
நந்தவனத்தில்
வேர்களின் வாசம் நுகரக்
கூரிய நகங்களோடு
கரங்கள்
ஆழமாய் மண் பறிக்கும்

நிஜம்
மனம் லயிக்கும் இசையாய்க்
செவிக் கோப்பைகளில்
வழியக் காத்திருக்கையில்
அந்தகார இருட்டில்
மௌனத்தை மொழிபெயர்க்க
விரல்கள்
வேகவேகமாய்
அகராதிகளைப் புரட்டும்

நிஜம்
மேனி சிலிர்க்கத் தீண்டி
மெய்தொட்டுப் பயிலுகின்ற
தென்றலாய் வருகையில்
கைகள் இறுக்கி
கால்கள் மடக்கி
கணப்பைப் போர்த்தி
உடல்கள்
சுருண்டு முடங்கும்

நிஜங்கள்
நிராகரிக்கப்படும் போது

பொய்ம்மைகள்
புதுப்புதுக் கோலம் புனைந்து
புன்னகை தவழ
வலம் வருவது
விசித்திரமல்ல
நடப்பின் சித்திரம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.