முற்றுப்புள்ளியின் வடிவையும்
தொடருகையின் வாசகத்தையும்
ஒருசேரப் பரவவிட்டபடி பெருமுரணாய்
எரிந்து கொண்டே இருக்கிறது
பச்சைவிளக்கு உன் வாசல் கதவினில்.
என்னைப்போலவே நீயும்......
வரிகளை செப்பனிட்டபடியோ
செப்பங்களை இணைத்தபடியோ
இல்லையேல்........எவரோ உனக்காய்
கோர்த்தவைகளைப் பிரித்து அலசியபடியாகவோ
ஒன்றா இமைகளோடு உட்கார்ந்திருக்கலாம்.
சுட்டுவிரல் பதிக்க வரிசை வரிசையாய்
வந்தசையலாம் வந்தடைதலின்
நீள்சதுரப் படிகள்.
ஆனாலும் முயலப் போவதேயில்லை
இனியொருபோதிலுமே.........
உணர்பரப்பெங்கிலும் சதாவும்
செறிவன்னமில மொன்றையே
பெய்தபடி தொடர்கிற உன் நெடு மௌனமொன்றே
போதுமெனக்கு நீ எப்போதுமே விரும்பிய
அம்முற்றுப்புள்ளியின் திசையுணர.

- கிண்ணியா எஸ்.பாயிஸா அலி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.