கடவுளின் சாயலில்
இருவரும் இருந்தார்கள் எனினும்
கடவுளின் மொழி
அறியாதவர்களாய் இருந்தார்கள்

ஆரம்ப  தேவை குறித்தான
எதிர்பார்ப்புகளை
பரிமாறிக்கொள்ள
கண்களே முதலில்
அவர்களுக்கு உதவியது 

தேவைகளைக் கண்டறியும்
மிக நெருக்கமான காலங்களில்
ஆதாமின் மூச்சுக்காற்றின் வெம்மை
பனியிருளை கடக்க உதவுகிறது

இளைப்பாறுதல் குறித்தான
தணிந்த காமத்தின்
கடைசி கையிருப்பில்
கடவுளின் மொழி கண்டறியப்படுகிறது
நேசக்கரம் நீட்டி
நெற்றியில் பதித்த
நெடிய முத்தங்களால்.

....................................

எச்சில் ரணங்கள்

நிர்வாணம் குறித்தான
இயற்கையின் முதல் அங்கீகாரமென
வானத்து மேகங்கள்
முழு நிலவின்
துயில் கலைக்கிறது.

ஈரம் உமிழும்
சிற்றோடைக்கரைகளில்
காமம் முழுவதும் தணிந்த
ஆதாமின் பாதப்பதிவுகள்.

பரிமாறிய முத்தங்களின்
உலராத எச்சில் ஈரங்கள்
ரணங்களாக மாற
ஏவாளின் கண்களில் தெரிகிறது
ஏடன் தோட்டத்துக்கனி
இது நாள் வரை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.