மல்லிகைப் பூக்களாய் சிரிக்கும்
உன் ரோஜாப்பூ முகத்தை..
எப்படி மண்மூடிப் புதைப்பேன்
என் மகனே?

உன்னைப் பிரிந்து..
இருபத்தி ஆறு ஆண்டுகளாய்
காத்திருக்கிறேன்..
நீதி கிடைக்குமென்று..!

உன்னைப் போலவே
நீதியும் கொலையுண்ட
சேதி கிடைத்தது.

போபாலின்
மூச்சுக் காற்றை நிறுத்தியது
நுரையீரல்களில் நிரம்பிய
நச்சுக்காற்று..!

பறிக்கப்பட்ட
இருபத்தி அய்யாயிரம் உயிர்களின்
படுகொலைகள்
விபத்தாகி விட்டது..!

உனக்காவது
உயிரை விடும் யோகம்
கிடைத்தது!

உனக்கு பின்னால்-
ஆறு லட்சம் குழந்தைகள்
ஊனமாகப் பிறந்த அவலம்
உனக்கில்லை!

ஆன்டர்சனும் அமெரிக்காவும்
தப்பித்த போதும்
இதை அனுமதித்த துரோகிகள்
இன்னும் உயிரோடு தான்
இருக்கிறார்கள்.

நீ உயிரோடு இருந்திருந்தால்
இதற்கு எதிராக
தண்டகாரண்ய காடுகளில்
ஆயுதம் தாங்கிப்
போராடியிருப்பாய்! 

நம் எதிரிகளே
தீர்மானிக்கிறார்கள்
போராடும் வழிமுறையை..!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.