எங்களுக்கும் ஆசை வந்தது
ஒரு மாடு வளர்க்க.
வாரக்கணக்கான கற்பனையை
நொடிப்பொழுதில் சிதைத்தவாறு
வாசலின் குரல் கொடுத்தது
சோனியாக ஒரு மாடு
ஒரே வருடத்தில் பால் கறக்கும்
என்ற எழுதாத வாக்குறுதியுடன்

முழுக்கவனிப்பும்
முத்தம்மாளின் பொறுப்பு எனினும்
விடுமுறைக்காலங்களில்
கோமதி என் பொறுப்பு

ஒத்துக்கொள்ளச்செய்திருப்பேன்
கத்திரி வாத்தியாரையும்
மாடு மேய்ப்பதென்பது
அவ்வளவிற்கு சுலபமான
வேலையில்லை என்பதை

வருடங்கள் இரண்டு கடந்தும்
பலன் இல்லாமல் போக
தீவனச்செலவும்
பற்றாக்குறை பட்ஜெட்டும்
பரிந்துறைத்தது
கோமதியை விற்றுவிட

மூன்று நாட்கள் கழித்து
மாணிக்கம்தான் சொன்னான்
போன இடத்தில் உடனே
கோமதி இறந்து விட்டதாக
சாவின் காரணம் யாருக்கும்
தெரியவில்லையாம்.

எங்களுக்குத் தெரிந்த காரணத்தை
யாரிடம் கூறி நாங்கள்
ஆறுதல் பெற

- பிரேம பிரபா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.