‘சிறப்பு முகாம்’ என்ற பெயரில் தமிழக அரசு செங்கல்பட்டில் அமைத்துள்ள ஈழத்தமிழ் அகதிகள் முகாமிற்குள் புகுந்து தமிழகக் காவல்துறையினர் கடந்த 2.2.2009 அன்று இரவு, அங்கிருந்த அகதிகள் மீது மிகக் கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியிருக்கின்றனர். இத்தாக்குதலால் நிலை குலைந்த 18 பேர் பலத்த காயமுற்றனர். காயமுற்றவர்கள் மீது வழக்குப் பதிந்து வேலூர் சிறையிலும் அடைத்துள்ளது தமிழக அரசு.

கலவரங்களின் போது தாக்கப்பட்டால், அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் அடிபட்ட தடங்கள் காணப்படும். ஆனால், காயம்பட்ட அகதிகளிடம் அவ்வாறு காண முடியவில்லை. ஓரிடத்தில், கட்டி வைத்து, ஒவ்வொரு அங்குலமாக அடித்து துவைத்தது போலவே அவர்களது அங்கங்கள் வீங்கி இருப்பதாக, அவர்களை நேரில் கண்ட வழக்கறிஞர் பா.புகழேந்தி தெரிவித்திருக்கிறார்.

இவ்வளவு வெறி கொண்டு, தமிழகக் காவல்துறையினர் தாக்கும் அளவிற்கு அந்த அகதிகள் என்ன செய்தனர்? தங்கள் உரிமைகளுக்காக சனநாயக வழியில் உண்ணாப் போராட்டம் நடத்தியது தான் அவர்கள் மீதான தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம்.

சனநாயகத்தைப் பற்றி அவ்வப்போது வாய் கிழியப் பேசும் கருணாநிதியின் ஆட்சியில், இடைத் தேர்தல்களின் போது மட்டுமல்ல, மக்களின் நியாயமான உரிமைப் போராட்டங்களின் போது கூட சனநாயகத்தைக் கந்தலாக்குவதே தொழிலாக இருந்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாகத் தான், உரிமைகளிழந்து, நாடிழந்து, வீடிழந்து, உறவுகள் இழந்து தஞ்சம் வந்துள்ள ஈழத்தமிழ் அகதிகள் மீது ஈவிரக்கமற்ற தமது அரசக் கூலிப்படையை வைத்து, கருணாநிதி அரசு தாக்குதல் தொடுத்திருக்கிறது.

இலங்கைத் தீவில், சிங்கள இனவெறி அரசின் கொடூர இன அழிப்புப் போர் காரணமாக 1983க்குப் பிறகு, தமிழகத்திற்கு தமிழீழ மக்கள் அகதிகளாக வரத் தொடங்கினர். அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களைத் தமிழ்நாட்டுத் தமிழர்களோடு கலந்து விடாதவாறு, தனித்த முகாம்கள் அமைத்து அதில் குடியமர்த்தினார். தற்போது, தமிழகமெங்கும் இதைப்போல 100க்கும் மேற்பட்ட முகாம்கள் உள்ளன.

இவை மட்டுமின்றி, குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் என முத்திரை குத்தி, அகதிகள் சிலரை ‘சிறப்பு முகாம்’ என்ற பெயரிலான திறந்தவெளிச் சிறைச்சாலைகளை ஏற்படுத்தி, அடைத்து வைத்துள்னனர். தற்போது செங்கல்பட்டிலும், பூவிருந்தவல்லியிலும் என 2 முகாம்கள் இவ்வாறு செயல்பட்டு வருகின்றன. இதில் செங்கல்பட்டு முகாமில் மட்டும் 38 ஈழத்தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

‘தீவிரவாத’ அச்சுறுத்துல் நீடிப்பதாக சொல்லப்படும், பாகிஸ்தான் சீன எல்லையோர வட இந்திய மாநிலங்களில் கூட இப்படிப்பட்ட சிறப்பு முகாம்கள் இல்லை. ஆனால், தமிழகத்தில் மட்டுமே இவை உண்டு. திபெத், பர்மா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த அகதிகளுக்கு உள்ளது போன்ற சுதந்திரமாக நடமாடும் வசதி கூட தமிழ்நாட்டில் உள்ள சாதாரண ஈழத்தமிழ் அகதிகளுக்குக் கிடையாது. இந்நிலையில், சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறைவைக்கப்படுள்ள ஈழத்தமிழ் அகதிகளின் நிலைமை மிகவும் கொடுமையானது.

குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் இம்முகாமில் அடைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்து வருகின்றது. குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள் பலர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படாமலும், வழக்குகள் நடத்தப்படாமலும், குற்றப்பத்திரிக்கை கூட வழங்கப்படாமலும் தான் இங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்பதுவே உண்மை. சட்டப்படி நீதிமன்றம் கொண்டு சென்று தண்டனை வழங்குங்கள் என்று இங்குள்ள அகதிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட, சட்டத்தை சிறிதும் மதியாமல் சட்டவிரோமாக இவர்களை சிறைவைத்துள்ளது தமிழக அரசு.

வழக்கிற்காக நீதிமன்றம் கூட கொண்டு செல்லப்படாமல் தட்டிக் கழிக்கப்பட்டு, பிடியாணை பிறப்பிக்கும் வரை காத்திருந்து விட்டு பின் அவர்களை அவசர அவசரமாக நீதிமன்றம் அழைத்துச் சென்று அலைக்கழித்து, அகதிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதையும் தமது வழக்கமாகக் கொண்டுள்ளது, காவல்துறை.

இவை மட்டுமின்றி, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையானவர்கள் கூட இங்கு அடைத்து வைக்கப்பட்டிருப்பது தான் கொடுமை. இங்குள்ளவர்கள் மீது குற்றம்சாட்டப்படும், குற்ற நடவடிக்கைகள் பெரும்பாலும், பிணையில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் இருந்தும் கூட தமிழகக் காவல்துறை அதனை சிறிதும் மதிப்பதில்லை. அகதிகளின் உறவினர்கள், கடன் வாங்கியோ, தமது சொத்துகளை விற்றோ பல இலட்சங்கள் செலவு செய்து சிறையிலிருந்து தம்மை பிணையில் எடுத்த போதும், அதனை பொருட்படுத்தாமல் சிறைவாசலுக்கே சென்று விடுதலையானவர்களை கைது செய்து இழுத்து வந்து இம்முகாமில் அடைத்துள்ளது, தமிழகக் காவல்துறை.

எனவே, இம்முகாம் இன்னொரு சிறைக்கூடம் என்பதில் எவ்விதத் தவறும் இல்லை. அதனால் தான் இம்முகாம்வாசிகள் அதனை ‘கிளைச்சிறைச்சாலை’ என்றே அழைக்கின்றனர். உலக நாடுகள் வகுத்துள்ள அகதிகளுக்கான சட்ட திட்டங்களை மதிக்காதது மட்டுமின்றி, தனிமனிதர்களின் உரிமைகள் கூட இவர்களுக்கு இங்கு வழங்கப்படுவதில்லை.

ஈழத்தமிழர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாகக் கருதி வரும் இந்திய அரசின் போக்கிற்கு ஏற்பவே, தமிழக அரசின் குற்றப்பிரிவுக் காவல்துறையும், உளவுத்துறையினரும் இம்முகாமில் உள்ளவர்களை நடத்துகின்றனர்.

அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, மனிதர்கள் வாழத் தகுதியற்றவையாக உள்ள இம்முகாம்களில் அடிப்படை வசதிகளைக் கோரி அவ்வப்போது அகதிகள் உண்ணாப் போராட்டம் நடத்துவதுண்டு. அவ்வாறு போராட்டம் நடத்தப்படும் போது சில சமயங்களில், அரசு அதிகாரிகள் நேரில் வந்து வாக்குறுதி அளித்துச் செல்வதும், பின்னர், அவ்வாக்குறுதிகள் ஓட்டு அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைப் போலவே காற்றில் பறக்கவிடப்படுவதும் காலம் காலமாக இம்முகாம்வாசிகள் அனுபவித்து வரும் மற்றொரு கொடுமை.

இவ்வாறே, கடந்த 2009 ஆம் ஆண்டு சூலை மாதம் செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்த அகதிகள், தங்களை தங்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கக் கோரியும், தங்கள் வழக்குகளை நியாயப்படி நடத்தக் கோரியும் சாகும் வரை உண்ணாப் போராட்டத்தை நடத்தியிருந்தனர். 7 நாட்களுக்குப் பின் சில அதிகாரிகள் தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியதால், உண்ணாநிலைப் போராட்டம் கைவிடப்பட்டது. நாட்கள் கடந்தும் நிறைவேறாத வாக்குறுதிகளால், மீண்டும் 20.9.2009 அன்று உண்ணாப் போராட்டத்தை அகதிகள் தொடர்ந்தனர். அதன் விளைவாக தமிழக அரசு 17 பேரை மட்டும் விடுவித்து, தட்டிக் கழித்துவிட்டது. அதன் பின் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் கூட எஞ்சியுள்ளவர்களை அங்கேயே சிறை வைத்திருந்தது தமிழக அரசு.

எஞ்சியிருந்த அகதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது உறவுகளுடன் இணைத்து வைப்பதாக அப்போது வாக்குறுதி அளித்திருந்தது தமிழக அரசு. அவ்வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று கோரி, 18.01.2010 அன்று தமது உண்ணாப் போராட்டத்தை அங்கிருந்த அகதிகள் தொடங்கினர். அப்போது மீண்டும் சில அதிகாரிகள் பேச்சு நடத்தி போராட்டத்தைக் கைவிடக் கோரினர்.

அதன் பின்பு வேறு வழியின்றியே, 01.02.2010 அன்று, நான்காம் முறையாக உண்ணாப் போராட்டத்தை அகதிகள் தொடங்கினர். 02.02.2010 அன்று முதல் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். முகாம்வாசிகள் தங்கள் அறையின் கதவை உட்புறமாக அடைத்துக் கொண்டு வெளியே வரமறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தான், அன்று மாலை சிறப்பு முகாமிற்குள் உதவிக் காவல் ஆணையர்(கிஷிறி) சேவியர் தன்ராஜ் என்பவர் தலைமையில் சீருடையணிந்த மற்றும் அணியாத காவல்துறை அரம்பர்கள் சுமார் 150 பேர், முகாம்வாசிகளின் இருப்பிடக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த அகதிகள் மீது தடிகளைக் கொண்டும், பூட்ஸ் கால்களால் எட்டி உதைத்தும் தாக்கத் தொடங்கினர். இத்தாக்குதல் அதிகாலை 2 மணி வரை நீடித்தது. உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காரணத்தால் ஏற்கெனவே சோர்வுற்றிருந்த அகதிகள் பலர் மயங்கி விழுந்தனர். ஒருவருக்கு கை எலும்பு முறிந்தது. போராட்டங்களின் போது முன்நின்றவர்கள் குறிவைத்து, பெயர் சொல்லித் தாக்கப்பட்டனர்.

கடுமையான காயங்கள் இருந்ததால், அன்று நள்ளிரவே மருத்துவமனைக்கு சில அகதிகளை அழைத்துச் சென்றுள்ளனர் காவல்துறையினர். அகதிகளைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவர்களைத் தாக்கியதாகவும் அவர்களில் 15 மீது வழக்குப் பதிவு செய்தது, தமிழகக் காவல்துறை.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், நீதிபதி முன் கொண்டு நிறுத்தப்பட்ட போதும் வாய்த்திறக்கக் கூடாது என காவல்துறையினர் அகதிகளை அச்சுறுத்தியிருந்தனர். வண்டிகளில் ஏற்றப்பட்ட போது கூட அடித்தே ஏற்றப்பட்டுள்ளனர். இதனை அங்கிருந்த வட்டாட்சியர் வெங்கடேசன் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார். ஏற்கெனவே பலமுறை அகதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது உடனிருந்த அவர் அமைதியாகக் கைக்கட்டி நின்று வேடிக்கை பார்த்துள்ளார்.

அன்றிரவே நீதிபதி முன் நேர்நிறுத்தி, வேலூர் சிறைக்கு அவர்களை கொண்டு சென்றனர். வண்டியில் கொண்டு செல்லப்பட்ட போது கூட வெறி கொண்டு தாக்கியுள்ளனர், காவல்துறையினர். முகாமில் எஞ்சியிருந்த 18 பேருக்கு உணவு கொடுக்காமல், சித்ரவதை செய்துள்ளனர். அவர்களது உடைமைகளை சேதப்படுத்தி, திருடர்களைப் போல சூறையாடி உள்ளனர் ‘காவலர்கள்’.

தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர், தங்கள் கைத்தடிகளால் அகதிகளின் உடலை மட்டும் காயப்படுத்தவில்லை. தாய், தங்கை உள்ளிட்ட குடும்பத்தினரை அவமதிக்கும் விதமாக நாகரீகமற்ற சொற்களைக் உதிர்த்து தங்கள் உள்ளத்தையும் மிகவும் காயப்படுத்தி விட்டதாக, காயம்பட்ட அகதிகள் தெரிவித்தது நெஞ்சுருக வைத்தது.

அரசியல்கட்சிகளின் சுயநலனுக்காக பலியிடப்படும் நேர்மையான சில அதிகாரிகளைக் கொண்டிருந்தாலும் கூட, காவல்துறை எப்பொழுதும் ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக பயிற்றுவிக்கப்பட்ட கூலிப்படை தான் என்பதை இத்தாக்குதல் மெய்ப்பித்தது. மக்கள் மீது வன்முறையை ஏவப் பயிற்றுவிக்கப்பட்ட, காவல்துறையிடம் உறவு, பாசம் எதனையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை இத்தாக்குதல் உணர்த்தியது.

உண்மை நிலை இவ்வாறிருக்க, அகதிகள் தான் முதலில் காவல்துறையினரை கடத்தி வைத்து மிரட்டியதாகவும், அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே அகதிகளை காவல்துறையினர் தாக்கியதாகவும் எழுதியது, கருணாநிதியின் குழும, குடும்ப பத்திரிக்கையான ‘தினகரன்’ நாளிதழ். அதே செய்தியை சில தினங்கள் கழித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கையாக வழங்கினார், காவல்துறை ஆணையர் லத்திகா சரண்.

தமது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிறையில், சிறைவாசிகள் காவலரைக் கடத்தி விட்டனர் என்று வாய்க்கூசாமல் சொல்கிறது, தமிழகக் காவல்துறை. அதனை நம்பத்தான் இங்கு ஆளில்லை.

‘நாடில்லாத நாய்ங்க நீங்க... உங்களுக்கு எதுக்கு விடுதலை?’ என்று கேட்டவாறு காவல்துறையினர் தாக்கியதாகவும் அகதிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். இந்த சொற்றொடரை காவல்துறை அரம்பர்களின் குரலாக மட்டும் பார்ப்பது தவறு. ஆட்சியாளர்களின் குரலாகவே இதனை நாம் பார்க்க வேண்டும்.

சிறு நகரமான செங்கல்பட்டு நகரில் திடீரென 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொண்டு வரப்பட்டது எப்படி எனத் தெரியவில்லை. இவ்வளவு கொடூரமான இத்தாக்குதலுக்கான உத்தரவை பிறப்பித்த ‘மேலிடம்’ யார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஈழத்தமிழ் அகதிகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இத்தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார் என்பது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சிறப்பு முகாம்கள் கலைக்கப்பட்டு, அங்குள்ளவர்கள் அவர்களது சொந்தங்களுடன் வெளியில் உள்ள மற்ற முகாம்களில் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களது வழக்குகளுக்கான குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, சட்டரீதியில் அவர்களது வழக்குகளை சந்திக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.

ஒரு புறம் தமிழுக்கு மாநாடு என்று நாடகமாடிக் கொண்ட, மறுபுறம் ஈழத்தமிழ் அகதிகளை தடி கொண்டே தாக்கும் கருணாநிதியின் நரித்தந்திரத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும்.

- க.அருணபாரதி

Pin It