அடிப்படையில் நான் ஆதார் அடையாளத் திட்டத்துக்கு எதிரி. எனக்கு மட்டுமில்லை, அனைவரும் ஆதார் அட்டை பெற்றுக் கொண்டாக வேண்டும் எனும் அரசின் இந்தக் கட்டாயப் போக்கு பெரும்பாலும் யாருக்குமே பிடிக்கவில்லை. வெறுமே பெயர், ஊர், படம் ஆகியவை மட்டும் என்றால் கவலையில்லை; மாறாக, கைக்கோடுகள் (finger impression), கருவிழிக் கோடுகள் (Iris impression) போன்ற உயிரியளவியல் தகவல்கள் (biometric informations) வரை நம்மைப் பற்றிய அடிப்படை விவரங்களையே ஒட்டுமொத்தமாக ஒப்படைப்பது என்பது நம்மையே நாம் இன்னொருவருக்கு எழுதித் தருவதற்குச் சமம்.

அதுவும் அரசிடம் இந்தத் தகவல்களைத் தருவது என்றால் கூடப் போனால் போகிறது என அரை மனதாக ஒப்புக் கொள்ளலாம். ஆனால், ஆதார் அட்டைக்காக நம்மைப் பற்றிய இத்தகவல்களையெல்லாம் திரட்டுவது ஒரு தனியார் நிறுவனம்! ஒரு தனியார் நிறுவனத்தை நம்பி நாட்டு மக்கள் அத்தனை பேரும் தங்களைப் பற்றிய அத்தனை விவரங்களையும் அளித்து விட வேண்டும் என அரசு வற்புறுத்துவது வெட்ட வெளிப்படையான தனிமனித அத்துமீறல்! இது உலகின் மிகப் பெரிய உயிரியளவியல் அடையாளத் திட்டம் (World’s Largest Biometric ID program) என்கிறது மத்திய அரசு. ஆனால் இது உலகின் மிகப் பெரும் பட்டப்பகல் தகவல் கொள்ளை (World’s Largest Daylight Data Robbery) என்பதுதான் சரி. “உன்னைக் கொள்ளையடிக்க ஒரு நிறுவனத்தைப் பணியமர்த்தியிருக்கிறேன். அதற்கு ஒத்துழைப்புக் கொடு” என அரசே மக்களை வெளிப்படையாக மிரட்டும் செயல் இது.

aadhaar cardஆனால் இப்படி ஆயிரம்தான் சொன்னாலும், இந்தத் திட்டத்தை எதிர்த்து நாடெங்கும் எவ்வளவுதான் பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டாலும், ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றமே திரும்பத் திரும்பச் சொன்னாலும் அன்றாட வாழ்க்கையை நடத்தவே இன்றியமையாத ஒன்றாக ஆதார் அட்டை இன்று மாற்றப்பட்டிருக்கிறது என்பதே கண்கூடான உண்மை!

வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டுமா – ஆதார் அட்டை கொடு! எரிவளி மானியம் (LPG subsidy) வேண்டுமா - ஆதார் அட்டை கொடு! வாடிக்கையாளர் அடையாள நிரலக அட்டை (SIM) வேண்டுமா - ஆதார் அட்டை கொடு! அவ்வளவு ஏன், சாக வேண்டுமா – அதற்கும் ஆதார் அட்டை கொடு என்கிறது இந்நாடு. எனவே எதிர்காலத்தில் பாதிப்பு வருகிறதோ இல்லையோ, நிகழ்காலத்தில் சிக்கலின்றி வாழ வேண்டுமே என்பதற்காகவாவது மக்கள் ஆதார் அட்டையைப் பெற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

ஆனால், இப்படி ஏற்றுக் கொண்டு போவதில் பெரும்பான்மை மனிதர்களுக்கு இடைஞ்சல் ஏதும் இல்லை. முதியவர்களும் மாற்றுத் திறனாளிகளும் அவர்கள் குடும்பத்தினரும் இதற்காகப் படும் பாடுகள்தாம் கொடுமை! நாட்டில் முதியவர்கள் எத்தனையோ கோடிப் பேர் இருக்கிறார்கள். முதுமை காரணமாகக் கண் சரியாகத் தெரியாதவர்கள், காது கேட்காதவர்கள், எழுந்து உட்காரவோ நடக்கவோ முடியாதவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், தமது கை – கால் – பார்வை போன்றவற்றைத் தமது விருப்பப்படி கட்டுப்படுத்த இயலாதவர்கள், படுக்கையை விட்டே எழ இயலாதவர்கள் என எத்தனையோ வித விதமான மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள்.

ஆனால், “நீ எப்படி வேண்டுமானால் இருக்கலாம். உனக்கு எப்பேர்ப்பட்ட பாதிப்பு வேண்டுமானாலும் இருக்கலாம். அதெல்லாம் உன் தனிப்பட்ட சிக்கல். ஆதார் அட்டை பெற்றாக வேண்டும் என்றால் பெற்றாகத்தான் வேண்டும். இல்லாவிட்டால், நீ செத்தால் உனக்கு இறப்புச் சான்றிதழ் கூடக் கிடையாது” என்கிறது மத்திய அரசு. எனவே, உடற்கழிவு வெளியேறுவதைக் கூட உணர முடியாத முதியவர்கள், சிறு அதிர்வு ஏற்பட்டால் கூடப் பெரும் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய அளவுக்கு மாற்றுத் திறனாளிகள் போன்றோரைக் கூட ஆதார் மையங்களுக்கு எப்பாடு பட்டாவது இட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.

ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தி இரும்புச் சட்டம் கொண்டு வந்த மத்திய அரசு இப்படிப்பட்ட முதியவர்களையோ, மாற்றுத் திறனாளிகளையோ நினைத்துப் பார்த்து இவர்களுக்குச் சிறப்பு ஏற்பாடு எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. ஆதார் சேவை இணையத்தளத்தில் (uidai.gov.in) ஆதார் அட்டைக்குப் பதிவு செய்து கொள்வதற்காக (Aadhaar Enrollment) விண்ணப்பிக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளதுதான். ஆனால் அதன் மூலம் விண்ணப்பித்தால் ‘உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது’ என்று காட்ட மட்டும்தான் செய்கிறதே தவிர, அதன் பிறகு யாரும் தொடர்பு கொள்வதோ வீட்டுக்கு வருவதோ இல்லை.

மாநில அரசும் இதற்காக மாநிலம் தழுவிய அளவில் ஏற்பாடு ஏதும் செய்யாவிட்டாலும், போனால் போகிறது எனச் சென்னையில் மட்டும் இதற்காக ஒரு சிறப்புச் சேவையை வழங்கி வருகிறது. ஆம்! தமிழ்நாடு அரசு தனது அரசுக் கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் (Arasu Cable TV Corporation) மூலம் நடமாடும் ஆதார் சேவை (Mobile Aadhaar Service) வசதியை வழங்கி வருகிறது.

இப்படி ஒரு வசதி இருப்பதே ஏறத்தாழ யாருக்கும் தெரியாது. இந்தச் சேவையைப் பெற, சென்னையில் உள்ள அரசுக் கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்துக்கு விண்ணப்பதாரரின் உடல்நிலை – அவர் ஏன் ஆதார் மையத்துக்கு நேரில் செல்ல இயலவில்லை என்பதை – பற்றிச் சுருக்கமாக விளக்கி, அதன் காரணமாக வீட்டுக்கு வந்து ஆதார் அட்டைக்குப் பதிவு செய்து தரும்படி கோரி ஒரு கடிதம் அனுப்ப வேண்டும். பின்னர், குறிப்பிட்ட அலுவலகத்தின் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தைப் பரிசீலிக்குமாறு நினைவூட்ட வேண்டும். சில மாதங்களில் விண்ணப்பம் ஏற்கப்பட்டுச் சேவை வீடு தேடி வரும்.

இந்தச் சேவையில் மடிக்கணினி, படக்கருவி (camera), கைக்கோடுகள் – கருவிழிக் கோடுகள் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கான கருவிகள், அச்சுக்கருவி (printer) என அனைத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்கே வந்து ஆதார் அட்டைக்குப் பதிவு செய்து கொண்டு போகிறார்கள். ஒளிப்படம் (photo), பதிவு எண் (enrollment number) முதலான இன்ன பிற விவரங்கள் அடங்கிய சீட்டும் உடனே தந்து விடுகிறார்கள். இதற்கெனத் தனியாகக் கட்டணமும் கிடையாது; இது முழுக்க முழுக்க இலவசச் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசுக் கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்தின் இலவச அழைப்பு எண்: 1800 425 2911 என்பதை அழையுங்கள். அல்லது, 044-2843 2911 எனும் அலுவலக எண்ணிலும் அழைக்கலாம். நேரில் அணுக:

தமிழ்நாடு அரசுக் கேபிள் டி.வி கார்ப்பரேஷன் லிமிடெட்,

துகார் டவர்ஸ்,

34 (123), 6ஆவது தளம்,

மார்ஷல் சாலை,

எழும்பூர்,

சென்னை – 600 008.

தனிமனித உரிமைக்கு எதிரான ஆதார் அடையாளத் திட்டத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெற முயலாவிட்டாலும், குறைந்தது, மாற்றுத் திறனாளிகளையும் முதியவர்களையும் எண்ணிப் பார்த்து இப்படி ஒரு சேவையை வழங்கவாவது முன்வந்த தமிழ்நாடு அரசுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கும் அதே நேரம், இந்தச் சேவையை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்!

- இ.பு.ஞானப்பிரகாசன்

Pin It