“கூன் விழுந்த அந்தக் கிழவி டிராபிக் சிக்னலில் கடந்து போனாள்!” என்று எழுத ஆரம்பித்த போது “சிக்”கென்று உடையணிந்த அந்த இளம் பெண் கடந்து போனாள்.” சும்மா கவருவதற்கு சம்பந்தமில்லாமல் ஆரம்பித்து வைத்தேன். கிழவியானாலும், இளம் பெண்களானாலும் அதிகம் படிக்க வைக்க இந்த மாதிரி ஆரம்பித்து எழுதினால் நல்லது.
ஏதே கிழவி, குமரியென்றூ கலாய்க்கிறானே, என்ன தான் சொல்லுகிறான் பார்ப்போம் என்று அனைத்து வேட்டிகளும், லுங்கிகளும் வரிந்து கட்டி படிக்கும் என்று தமிழ் படிக்கும் நல்லுலகம் மீது நம்பிக்கையோடு ஆரம்பிக்கிறேன்.
“அந்தக் குதிரைக்குப் பேர் சொல்லவா!”
“டக் டக்,!”
சினிமாவிலும், பத்திரிக்கைகளிலும் வரும் பெண்களைப் பற்றிய விற்பனை வாக்கியங்களைக் கவனிக்கலானேன்!
“இளம் பெண் கணவனைக் கொன்றாள்!”
ஏன் வயதான பெண் நெடுங்காலமாகத் “தொண தொண” வென்று அறுக்கும் கிழவர்களைக் கொல்லக் கூடாது?. அவ்வாறு பல பாட்டிமார்கள் நினைத்தாலும் செய்தி போடமாட்டார்களே!
“காதலை ஏற்காத கம்ப்யூட்டர் படிக்கும் இளம் பெண் துப்பட்டாவினால் கழுத்து நெறித்துக் கொலை!”
டைப்ரைட்டிங் கிளாஸ் படிக்கும் பெண் என்றால் அது அந்தக் காலம். கம்ப்யூட்டர் தான் இப்போது லாயக்கு!
காதல், இளம் கழுத்து, துப்பட்டா என்று போட்டால் படிக்கத் தோணுதுங்களே!
“கணவருக்கு ஸ்லோ பாய்ஸன் மனைவி கைது!” இது செய்தி!
பெரும்பாலும் மனைவிகளுக்கு மருந்து வாங்காமல் காலம் கடத்தி “சிவனே”யென்று இருந்து விட்டு காலமாகிவிட்ட பிறகு, “போய் விட்டாள், எனக்கு கொடுத்து விட்டது அவ்வளவு தான்!” என்றூ பிறகு புலம்பும் கணவர்கள் ஏராளம். அவளுக்கு வீட்டில் புகைப்போக்கிகள் இருக்கிறதா, நல்ல இடமிருக்கிறதா, சுகாதாரமான வாழ்கை முறை இருக்கிறதா என்று இவர்கள் பார்க்காதலால்
“மனைவிகளுக்கு ஸ்லோ பாய்ஸன், கணவர்களுக்குத் தெரியும்! சமூக அங்கீகாரம்!” என்று செய்தி எழுதத் தோன்றுகின்றது.
“ஊட்டியில் இளம் பெண் மரணத்தில் மர்மம்!”
ஆகா என்ன சுவாரசியமான செய்தி! ஊட்டி! குளிர்!
இளம்! ஆகா! கற்பனை பறக்கத் தொடங்கியது!
பெண்! இன்னும் பலே!
மரணம்! “ஏடா கூடமாக” நடந்திருக்குமோ? அந்த “ஏடா கூட”த்தை ரசிக்க முடிவு செய்தேன்! அதைப் படித்தால் கொஞ்சம் பொழுது போகுமே!
மர்மம்! ஏது ராஜேஷ்குமார் கதை பொன்றூ குளிர் உடம்பை வருட, ரத்தம் உறைய கதைப் படிக்கலாமே!
மேலும் படித்துப் பார்த்தால், பி.எட். படிக்க முயற்சி செய்த ஒரு பெண் மனத்தை அறுத்துத் தொல்லை கொடுத்துக் கொன்று போட்டு ஊரார் வரும் முன்னே மயானத்திற்குப் பிணத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்!
“படிக்கும் பெண்ணைத் தடுத்து வாழ்கை அழிப்பு! பெண் தரைமட்டம்” இந்த்ச் செய்தியைப் படிப்பார்களா என்பது தெரியவில்லை! ஆக மட்டும் ஆண்களுக்கு மட்டும் தான் பேப்பர் அச்சடிக்கிறார்களோ?
“பெண்ணை அழிக்க ஆண் பேயாட்டம்!” என்று தலைப்பு சரியில்லையோ?
“மனைவி மேல் சந்தேகம்! குழந்தைகளுடன் தந்தை விஷம் குடித்து தற்கொலை முயற்சி! குழந்தை சாவு!
மேலும் படித்துப் பார்த்தேன். குடித்து விட்டு மனைவியை அறைந்து, எனக்குப் பிறந்த குழந்தைகளில்லை என்று அலறியிருக்கின்றான். பதறிப் போன பெண்ணை அடித்து விட்டு தன் வீட்டிற்குப் போய் தற்கொலை முயற்சி பண்ண குழந்தை பறி போனது. இவன் பிழைத்துக் கொண்டான்.
ஆனால் பாருங்கள் மேல் கண்ட செய்தி எவ்வளவு விரைவாகப் படித்திருக்கிறீர்கள்? அதனால் தான், பத்திரிக்கைகளில் இம்மாதிரி செய்திகள் விலை போகின்றது.
டீ கடையில் உட்காருகின்றோம். பேப்பரைப் புரட்டுகிறோம்!
“தாய், பேய்! கெட்ட மாமா!” இத்தலைப்புகளும் பத்திரிக்கைகளுக்கு அல்வா மாதிரி!
போண்டா, ஆமை வடை , சூடான டீ போன்று செய்திகளைச் சூடாகப் பறிமாற வேண்டும். அப்போது தான் ஆறி அவலாப் போனதைத் தள்ளி, சூடானதைப் பற்றீப் பேசிக் காலத்தைப் போக்க முடியும்!
ஆணுக்குச் சூடு கோபம், காமம், பொறாமை, வெட்டு, குத்து! இவற்றிற்குத் தீனி போட்டால் போதும்!
ராமர் காலத்திலிருந்தே பெண்ணைப் பற்றிச் சந்தேகம் கொள்வது “காவியமாக”ப் படைக்கப் பெற்றிருக்கின்றது.
“அவனுடன் பேசினியாமே!”
இப்போதெல்லாம் “அவளுடன் பேசினியாமே!” என்று கூடக் கூப்பிடலாம் என்று சந்தேகம் வருகின்றது. (“ஃபைர்” படம் பார்த்ததிலிருந்து அப்படிச் சந்தேகம்!)
இப்படித் தலைப்புக் கொடுத்தால் கட்டாயம் படிப்பேன்!
“மார்கரெட் தாட்சர் அதிபருக்கு காட்டமான பதில்!”
“வறுமையை ஒழிப்பேன்! இந்திரா காந்தி சவால்!”
“தமிழகத்தை முன் மாநிலமாக ஆக்குவேன்! முதல்வர் ஜெயலலிதா முழக்கம்!”
இதெல்லாம் சுவாரசியமில்லாத செய்திகள்.
“குஷ்பூ கற்பு பற்றி காட்டமான பதில்!”
“என் இடுப்பு அளவை மேலும் குறைப்பேன்! நமிதா சவால்!”
“ஐஸ்வர்யா ராய் பிகினியில் வலம் வருவார்! டைரக்டர் முழக்கம்!”
எது டீக் கடைக்கேற்றது தெரிகிறதா?
டீ கடை விட்டுத் தள்ளுங்கள்.
“ஹாயா”க பகல் பொழுது அரட்டை அடிக்கும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஏற்றது எது?
எது விற்குமோ அது விற்கும்!
எது குப்பையில் போகுமோ! அது குப்பையில் போகும்!
பெண்கள்! துணி! களவு! கொலை! கற்பு! துப்பு! சவால்! காரசாரம்!
விற்பனை! ஆடித் தள்ளுபடி! சலுகை! சிக் ஷாம்பு பாக்கெட்!
நாணயம்! ஷேர் மார்க்கெட்!
எந்த ஹோட்டலில் காபரே நடக்கும்? தகாத உறவுகள் வலுக்கின்றனவா? புருஷன் இல்லாத போது ஆட்டோவில் ஊர் சுற்றும் பெண்களை ஒரு ரிப்போர்ட்டர் பின் தொடர்கிறார்! அது “ரிப்போர்ட்!”
சமூகம்! அக்கரை!
விலைமாது! ஓரினக் கவர்ச்சி!
நடிகை! ஜாக்கெட்!! கவர்ச்சி போட்டோ! திருமணம் எப்போது?
பர பரப்பு தகவல்!
விலை ஒரு ரூபாய் தான்!
நடிகர்! திகில்! கிரைம்! டயலாக்! வம்பு! தும்பு!
கொலை! கொள்ளை! கற்பழிப்பு!
படிக்கணுமென்ற ஆசை வருகிறதல்லவா?
விலை இரண்டு ரூபாய் தான்!
பார்க்க! படிக்க! திரிஷா! காதல் நாயகன்!
பேட்டி! சிண்டு! நண்டு! பெண்டு!
இலவச இணைப்பு!
விலை மூன்று ரூபாய் தான்!
பக்தி ஸ்பெஷல்! ஜோதிடம் ஸ்பெஷல்! மோட்டார் ஸ்பெஷல்!
சும்மா சொல்லக் கூடாது! அனைத்தையும் ஊற்றிக் கொடுத்தால் தான் “கிக்” கே!
அனைத்திற்கும் சேர்ந்தே விலை ஐந்து ரூபாய் தான்!
பெண்கள் பற்றி சுமார் 70 % விகிதம் வரும். மீதி 30% பெண்களைப் பற்றிக் கவலை கொள்ளும் ஆடவர் பற்றி அல்லது பெண்கள் சம்பந்தப்பட்ட ஆடவன்.
என் பெயரை பத்திரிக்கையில் போட வேண்டுமென்றால் என்னை ஏதாவது பெண் இனத்தோடு (குதிரையாக இருந்தாலும்) சேர்க்க வேண்டும். நானே மறைந்த சில்க் ஸ்மிதாவின் சொந்தம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் இறந்த நாளன்று ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டால் என் படத்துடன் மீண்டும் அவர்களைப் பற்றியச் செய்தியினைப் போடப் பத்திரிக்கைகள் விழையக் கூடும்.
இலக்கிய ரசமா? காம ரசமா? மோர் குழம்பா? ஊற்றுவேன் உங்களுக்கு! இன்றே வாங்கிப் படியுங்கள்!
இராமயணமா? பாரதமா? காவியங்கள் உங்களுக்கே!
அதில் பிடித்த பாத்திரங்கள் அகலிகை கதை! பாஞ்சாலிக் கதை!
பெண்கள் சிதையில் விழுவதும் பிறகு துடைத்து எழுவதும் காண்போரை சிலிர்க்க வைக்கும் காவிய ஓவியங்கள்!
பாவம் பட்ட பெண் ஜென்மங்கள் கால் பட்டு துளிர்ப்பது நம்மை சிலிர்க்க வைக்கின்றது!
கல்லூரியா? பெண்கள் கல்லூரியில் பேட்டி எடுப்பது நன்றாக இருக்கும்.
அலுவலகமா, பெண்கள் ஆண்களுக்குப் போட்டியாக வருவதும், வீட்டில் அரிசி வேகாததைப் பற்றியும், அலுவுலகத்தில் செக்ஸ் (பாலியியல் தொந்தரவுகள்) பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படுவது குறித்துச் சமூக அக்கறையோடு எழுதுவது நல்லது. விலை போகும்!
நாமும் சிவனே என்றூ இராமல், பார்வதியே யென்று அவர்களையும் வாழ விடாமல், சஞ்சிகைகள் மூலம், பத்திரிக்கைகள் மூலம், வம்புகள் மூலம், தும்புகள் மூலம், சதா கவலைப் பட்டுத் திரிந்து கொண்டிருக்கிறோம்!
அட! விடங்கப்பா! வேறு வேலை பார்ப்போம்!
ஜோதிகா, சூர்யாவைத் திருமணம் புரிவது குறித்து நாட்டு மக்களே கவலை கொள்வது விந்தையானது!! ஆதலால் எனக்கும் கவலை வந்து போனது!
எனக்கும் சிவகுமார் எப்போது சூர்யாவிற்கு தேதி குறிப்பார் என்று கவலையாக உள்ளது!
அட! விடங்கப்பா!
வீட்டில் பிறந்த பெண் மகவைத் தேர்த்த வழி பார்ப்போம்!
வழி தானே? அவளுக்கு ஏற்றவன் பிறக்காமலா இருப்பான்? இவள் பிறந்த போதே “அவன்” என்று முடிவு செய்து விட்டோமே! அத்தை மகன், மாமன் மகன் என்று இப்போதே தேதி குறிக்கலாம்!
அட! விடங்கப்பா!
வீட்டில் பிறந்த பெண் மகவைத் தேர்த்த வேறு வழி பார்ப்போம்!
ஒளவையாராக ஞானம் பெறட்டும்!
அதுவும் ஒளவையாராக! அதற்கு குறைந்து வயதிருந்தால் பிரச்சினை!
நமக்கேன் வம்பு!
- கிருஷ்ணகுமார்