ஊழல் குற்றவாளி ஜெயாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடிப்பொடிகள் செய்த அலப்பரை நம்மை தூங்கவிடாமல் துன்புறுத்துகின்றது. காலையில் எழுந்து நாளிதழ்களைப் புரட்டினால் அம்மாவின் சிரித்தமுகம் அனைத்து பக்கங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. பார்ப்பன இந்து, தினமணி, தினமலர் தொடங்கி சூத்திர தினகரன் வரை அம்மாவின் பாதத்தில் மண்டியிட்டு விழுந்துகிடந்தன.

jayalalitha 224இதில் கொடுமை என்னவென்றால் அனைத்து நாளிதழ்களிலும் வந்த விளம்பரங்களில் ஜெயாவை மக்களின் முதல்வர் என்று தவறாமல் குறிப்பிட்டிருந்ததுதான். அடப்பாவிங்களா! காசுகுடுத்தா என்ன வேண்டும் என்றாலும் போடுவீங்களா என்று நம்மை கேட்கத் தோன்றியது. அதிலே வந்த சில அபத்தங்கள்…

மாசியில் பிறந்த மகராசியே, கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் இதய தெய்வம் அம்மாவே, எங்கள் ஆராதனைக்குரிய தெய்வமே, ஏழைகளின் இதயத்துடிப்பே , கருணை உள்ளமே, புன்னகைத் தாயே, தமிழர்களின் உரிமைகளை மீட்டுத்தந்த காவிரித்தாயே, நாளைய பாரதமே………. என்று இந்தப் பட்டியல் மிக நீளமானது.

பத்திரிக்கைகள் ஒருபக்கம் இப்படி காசுபார்த்துக் கொண்டிருக்க அமைச்சர் பெருமக்களோ கோவில்களில் அன்னதானம், தேர் இழுப்பது, ஹோமம் நடத்துவது, பால்குடம் தூக்குவது என்று பார்த்த பக்கமெல்லாம் பண்டார பரதேசிகளாக காட்சிதந்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆர்எஸ்எஸ், இந்துமுன்னணி, பிஜேபி வகையறாக்கள் அதிமுக அடிமைகளிடம் மண்டிபோட்டு பாடம் கற்க வேண்டும்.

இப்படியாக அம்மாவை உற்சாகப்படுத்த பலபேர் பலவிதமாக போராடிக்கொண்டிருக்க அனைவரையும் ஒரங்கட்டப் பார்த்தார் கராத்தே வீரர் ஹுசைனி அவர் தன்னை சிலுவையில் அறைந்துகொண்டு (சாகவில்லை) தன்னைப் போன்ற அடிமை அதிமுகவில் யாரும் இல்லை என்று காட்டிவிட்டார்.

இவனுங்கதான் தேர்தலில் பொறுக்கித்தின்ன இப்படி பண்றானுங்க என்று பார்த்தால் நம்ம இளையராஜா அட ஆமாங்க நம்ம மேஸ்ட்ரோதான் தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஜெயாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கிவைத்து அம்மாவை வாழ்த்தி வணங்கியிருக்கிறார். ஒருவேளை கூப்பிட்டு போகவில்லை என்றால், அம்மாவின் அக்கினிப் பார்வைக்கு ஆளாக நேரும் என்று அஞ்சினாரோ என்னவோ தெரியவில்லை.

அம்மாவின்(லேடியின்) 67வது பிறந்தநாள் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கையில் பதவியில் இல்லாத குற்றவாளிக்கு பதவியில் இருக்கும் குற்றவாளி (மோடி) தன்னுடைய ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் பார்ப்பன அம்மாக்களின் காலடியில் மண்டிபோட்டு கிடப்பதையே இவை காட்டுகின்றன. ஊழல் வழக்கில் பதவியை இழந்த ஒரு குற்றவாளியை காசுக்காகவும், பதவிக்காகவும், அதிகாரத்துக்காகவும் இத்தனைபேர் துதிபாடுவது மிகவும் வெட்கக்கேடான, அவமானகரமான செயலாகும்.

அனைவரும் அம்மாவை வாழ்த்து, வாழ்த்து என வாழ்த்திக் கொண்டிருக்க நாம் மட்டும் வாழ்த்தாமல் விட்டால் அம்மா பாவம் நம்மை சும்மா விடாது.

அம்மா நீங்க 67வயசு ஆகியும் இன்னும் சாகாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்கள் செய்த பெரும்பாக்கியம். நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ வேண்டும். அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளிலேயும் வெற்றி பெற்று நீங்களே முதலமைச்சராக வரவேண்டும் (விடுதலை ஆகிவிட்டால்). தமிழ்நாடு முழுவதும் இன்னும் ஆயிரக்கணக்கான சாராயக்கடைகளை திறந்து டார்கெட் போட்டு வித்துத்தள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு பெண்விடாமல் அனைவரையும் விதவைகள் ஆக்கி அழகுபார்க்க வேண்டும். உங்களது அடிமைகளின் வாயால் விதவைகளின் விடிவெள்ளியே என்று நீங்கள் புகழப்பட வேண்டும். இன்னும் பல ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்து, திராட்சை தோட்டம் வாங்கியது போல ஆப்பிள் தோட்டம், ஆரஞ்சி தோட்டம் எல்லாம் வாங்க வேண்டும். மொத்தத்தில் நீங்கள் நல்லா இருக்கவேண்டும் அம்மா! நாங்கள் நாசமாகப் போக வேண்டும்!!

Pin It