பனிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் மாவட்ட அளவில் என அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவ-மாணவிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் பொழுது என்னவோ கருப்பாகவும், மாநிறமாகவும்தான் காணப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளால் தங்கள் மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளைப் பார்த்தால் ஏதோ ஆங்கிலோ இந்தியர்களைப் போல செக்கச் செவேல் என ஜொலிக்கிறார்கள். அவர்களைப் புதிதாக பார்க்கும் யாரும், "இவர்கள் இந்தப்பகுதி மக்கள் இல்லை போல" என்று கேட்கும் அளவுக்கு தனித்துக் காணப்படுகிறார்கள். வெயில் படாத அந்த வெள்ளைத் தோல் வேந்தர்களைப் பற்றி சற்று ஆராய்ந்தால் அவர்கள் சவுக்கார் பேட்டையோ, ராயப்பேட்டையோ, மைலாப்பூரோவாகத்தான் இருப்பார்கள்.

இவர்களையெல்லாம் ப்ளஸ் 2 ரிசல்ட்டின் போது தினத்தந்தியிலோ, தினமலரிலோ பார்த்ததாகத் தோன்றாது. பின் எப்படி சொல்லி வைத்தாற்போல் வெள்ளைக்காரர்களைப்போல் தோற்றமளிக்கும் இவர்கள் மருத்துவப் படிப்பில் பயில்கிறார்கள். இவர்கள் அனைவரும் உண்மையிலேயே தகுதியின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா? அல்லது ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டு, 'பலியாடுகளைப் போல் 80 சதவீதம் காணப்படும் தமிழர்களை' உயிரியல் ஆய்வக தவளையைப் போல் உபயோகப்படுத்தி மருத்துவம் கற்றுக் கொள்விக்கப்படுகிறார்களா?

இவர்கள் நிறத்தைக் கொண்டு அல்லது சமூக அந்தஸ்தைக் கொண்டு அல்லது பணத்தைக் கொண்டு தங்களுக்குள் ஒரு சமூகத்தினரை தனி பிரிவாக பிரித்துச் சென்று தங்களைத் தாங்களே கூட்டு முயற்சியில் உய்வித்துக் கொள்கிறார்களா?

"எவன் இருக்கிறான் என்னைக் கேட்க" என்கிற திராணியோடும், "இதில் என்ன தவறு இருக்கிறது, வாழத்தெரிந்தவன் வாழ்ந்து கொள்கிறான்" என்கிற தத்துவங்கள் துணை கொண்டும் வெளிப்படையாகவும். சர்வாதிகாரத்தனத்தோடும் தங்களை ஓர் இனமாக பிரித்துக் கொண்டு மற்ற திறமையாளர்களை அநியாயமாக அடக்கி தோற்கச்செய்து, தங்களை ஒர் உயர் இனமாக வாழ்வித்துக் கொள்ளும் இவர்களுக்கே இவ்வளவு துணிவிருக்கும் போது, அதைப்பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு மட்டும் ஏன் தயங்க வேண்டும்?

இந்த மருத்துவ மாணவ - மாணவிகள் 3ம், 4ம் ஆண்டு பயிலும் போதே, இந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முதலாளிகள் தங்கள் மருத்துவமனைகளில் லைவ் பிராக்டிஸ் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை நோயாளிகள் என்பவர்கள் ஓர் உயிரியல் ஆய்வக தவளையைப் போன்றவர்கள்தான். பிரித்துப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள், எவன் கேட்கிறான் பார்த்து விடுகிறேன் என்கிற அடாவடித்தனம், இம்மருத்துவமனை முதலாளிகள் நடந்து கொள்ளும் விதத்தில் வெளிப்படையாகவே தெரியும்.

இந்த ட்யூட்டி டாக்டர்ஸ் எனப்படும் மாணவ-மாணவிகள் வேலை பார்க்கும் 8 மணி நேரத்தில் 4 மணி நேரம் செல்ஃபோனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்பொழுது தங்களுக்குள்ளாக சிரித்துக் கொள்கிறார்கள். நடந்து செல்லும்பொழுது எதிர்த்தாற்போல் வருபவர்கள் மீது முட்டிக்கொள்ளாமல் செல்ஃபோனை பார்த்தபடி செல்ல நன்கு கற்றுக் கொண்டிருக்கிறார்கள். நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வயிறு கலங்கிப் போய் உட்கார்ந்திருக்கும் உறவினர்களுக்கு இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாவிட்டால் இது போன்ற மருத்துவமனைப் பக்கமே வரக்கூடாது. அவர்கள் நோயாளிகளுக்காக சில மணித்துளிகளை ஒதுக்குகிறார்கள் என்பது திரை மறைவில் நடைபெறும் அதிசயம்....

அவர்கள் 7 அடிக்கு அந்தப் பக்கமிருந்து வருகையிலேயே ஒரு வித வாசனை குப்பென்று தூக்குகிறது. அது என்னவிதமான வாசனை திரவியமோ... (மருத்துவமனையை சுத்தமாக வைத்துக் கொள்ள எவ்வளவோ கட்டுப்பாடுகள் இருந்தாலும், இதுபோன்ற விரும்பத்தகாத சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தக் கூடிய வாசனைத் திரவியங்களை இன்டன்சிவ் கேர் யூனிட் வரை மருத்துவமனை நிர்வாகம் அனுமதிப்பது என்பது எவ்வகையில் சரியோ?)

இவர்களுக்கு செல்ஃபோன்கள் ஒரு முக்கியமான விஷயம். அது இல்லையென்றால் அவர்களுக்கு ஒருநாள் என்பது 48 மணி நேரமாக மாறி விடும். காலையா? மாலையா? என்பது கூட தெரியாமல் சாட்டிங் செய்கிறார்கள். அப்படி அவர்கள் செல்ஃபோன்களில் கவனமாக இருக்கும்பொழுது நோயாளியின் நிலைமை குறித்து ஏதேனும் கேட்பதற்கு கூட தயக்கமாகவும், பயமாகவும் இருக்கும். எங்கே எரிந்து விழுந்து விடுவார்களோ என்கிற பயம் தொண்டையை அடைக்க மனதுக்குள்ளேயே பொறுமிக் கொண்டிருக்கும் அனுபவத்தை ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் ஏதெனும் ஒரு தருணத்தில் அனுபவித்திருப்பார்கள்.

இப்படியெல்லாம் தனிமனித துவேஷத்துடன் விமர்ச்சிக்க சற்றும் உரிமையில்லை என்றாலும், சொல்வதற்கு சில அடிமனக் கலக்கங்கள் இருக்கின்றன.

இவ்வளவு ஹை-ஜீனிக்காக காணப்படும் இந்த மருத்தவ மாணவ-மாணவிகள் (தமிழக) உடல்நலன் பாதிக்கப்பட்ட நோயாளிகளை 5 அடி தள்ளி நின்றே மருத்துவம் (போன்று) பார்க்கிறார்கள். எமர்ஜென்சியாக வரும் நோயாளிகளைக் கூட தொட்டுப் பார்க்காமல் மருத்துவம் செய்யும் அதிசயம் உலகில் வேறு எங்கு சென்றாலும் காணக் கிடைக்காத அதிசயம். தலைவலியா பச்சைக்கலர் மாத்திரையை எடுத்துக் கொடு என்பது போன்ற, மனனம் செய்யப்பட்ட கல்வியறிவுடன் கூடிய செயல்பாடு கொண்ட இவர்களிடம் மருத்துவம் செய்து கொள்வது என்பது மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படுகின்ற விஷயமாக இருக்கிறது. அதற்கான கூலியை அந்த மருத்துவ மாணவ-மாணவிகளிடமிருந்து முதலாளிகள் கறந்துவிடுகிறார்கள் என்பது வேறு விஷயம்.

இவர்கள் காசு கொடுத்துப் படிக்கிறார்கள், இந்த மருத்துவமனைகளின் முதலாளிகள் நோயாளிகளிடம் காசு வாங்கிக் கொண்டு இவர்களுக்கு கற்பிக்கிறார்கள். ஆக ஒரே கல்லில் 2 மாங்காய் இந்த முதலாளிகளுக்கு. படிப்பதற்கும் பணம், அவர்கள் படிப்பதற்கு துணை புரிகிற நோயாளிகளிடமிருந்தும் பணம். ஆக மறைமுகமாக கருணையற்ற ஒரு சில வியாபாரிகளிடம் மண்டியிட்டுதான் எனக்கான மருத்துவத்தை இங்கு நான் செய்து கொள்ள வேண்டும்.

இந்த மாணவ-மாணவிகளைப் பொருத்தவரை மருத்துவம் என்பது சமூகத்தில் அந்தஸ்து மிக்க ஒரு பதவி. அதை நேர்மையாகவோ அல்லது நேர்மையற்ற விதத்திலோ தட்டிப் பறித்துக்கொள்வது அவரவருடைய திறமை.

தமிழகத்தில் என்னதான் நடக்கிறது என்று சற்று அனுபவப்பட்டோமேயானால் தலை சுற்றும்... கிரிக்கெட் போன்ற லாபம் கொழிக்கும் விளையாட்டுகளில் பார்ப்பனர்களே தொடர்ந்து (கிட்டத்தட்ட 19 வருடங்களாக ) இடம் பிடிக்கிறார்கள். இதைப் பற்றி படம் எடுக்கிறார்கள். ஆகா, ஓஹோ என்று பாராட்டுகிறார்கள். நேஷனல் அவார்டு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தேர்ந்தெடுக்கப்படுவதே நடைபெற்றுக் கொண்டிருக்கும். இது என்னவிதமான சமுதாய விழிப்புணர்வு அல்லது போராட்டம் என்றே புரியவில்லை.

திறமையானவனின் வாய்ப்பை பறித்துக் கொள்வதும், திருட்டு சர்டிபிக்கெட் தயார் செய்து அரசு வேலை வாங்குவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

திறமையானவனின் வாய்ப்பை பறித்துக் கொள்வதும், பக்கத்தில் இருப்பவனின் பாக்கெட்டிலிருந்து 500 ரூபாயை பறித்துக் கொண்டு ஓடுபவனுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

இந்த சமூக அந்தஸ்து பித்துபிடித்த மருத்துவ மாணவ-மாணவிகள் எப்படி மருத்துவப் படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? இவர்கள் எலலாம் உண்மையில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுதான் மருத்துவப் படிப்புக்குள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? இவர்களுக்கு உண்மையிலேயே மருத்துவ சேவையில் ஆர்வமுண்டா? இவர்களிடமிருந்து சேவை மனப்பான்மையை எதிர்பார்ப்பது எந்த அளவுக்கு நியாயமான விஷயம்?

நோயாளிகளை ஆய்வகத் தவளைகள் போலவும், நோயாளிகளின் உறவினர்களை எபோலா தாக்கப்பட்டவர்களைப் போலவும் நடத்தும் இவர்களைப் போன்ற மருத்துவ மாணவ-மாணவிகள் நாளை பணம் சம்பாதிக்கும் ஊடகமாக (மட்டுமே) மருத்துவமனையை பயன்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இவர்களைப் போன்ற ஒரு உயர்தர பிரிவினரை உருவாக்கி வெளிக்கொணரும் மருத்துவக் கல்லூரிகளின் நோக்கம் தான் என்ன?

வலிமையுள்ள உயிரினம் வாழும் என்கிற தத்துவம், வன்முறையைக் கையாளும் உயிரினங்களுக்கு மட்டும் சொல்லப்படவில்லையா? வஞ்சகத்தோடு பணம் கொடுத்து வாய்ப்புகளை விலைக்கு வாங்கும் உயிரினங்களுக்கும் சேர்த்துதான் சொல்லப்பட்டதா?

ஏன் துப்பாக்கி தூக்குகிறவனுக்கு மட்டும் தீவிரவாதி என்கிற அடைமொழி? ஏன் வாய்ப்புகளைப் பறித்து பணத்துக்காகவும், கவுரவத்துக்காகவும் மருத்துவத் தொழில் பார்க்க நினைக்கும் இவர்களுக்கும் அப்பெயர் கொடுக்கப்படக்கூடாது? இறப்பு விகிதத்தை நேர்மையுடன் பரிசோதித்துப் பார்த்தால் யார் அதிக கொலைகள் செய்தவர்கள் என்பது தெரியாமலா போய் விடும்?

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்கிற படத்தை ஒரு நகைச்சுவைப் படமாகத்தான் பார்க்க நேர்ந்தது. ஆனால் சத்தமில்லாமல் பல வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.கள் சமூகத்திற்குள் ஊடுருவிக் கொண்டிருப்பது அவ்வளவு நகைச்சுவையான விஷயம் இல்லை. நாம் நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டிருக்கிற ஒரு விஷயத்தை சிரிக்காமல் சிலர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

Pin It