நாற்றமெடுத்த சாதிய சமூகத்தைத்தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்

“சாதி கலப்பு திருமணத்தை” இதற்கு அடிப்படையான காதலை, எதிர்த்தும், ‘நாடக காதல்’ என்று நாடகமாடி சாதி சமூகத்தை கட்டி காக்கவும், அரசியல் பிழைப்பிற்காகவும் பா.ம.க. தலைவர் ராமதாஸ் தலைமையில் திரண்ட ஆதிக்க சாதிவெறிக் கும்பலும், இந்த ஆதிக்க சாதிவெறிக் கும்மபல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்த ஜெயலலிதா அரசும் (மரக்காணம் சிக்கலை ஒட்டி ராமதாசு, அன்புமணி, குரு மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் அவர்களைத் தியாகிகள் ஆக்கியதே தவிர, அவர்களின் ஆதிக்க சாதி அரசியலை அடித்து நொறுக்கவில்லை, இவர்களில் ஒருவர் மீது கூட தலித்துக்களை இழிவுபடுத்தி பேசியதற்காக இதற்கான ஆதாரம் வெளிப்படையாக இருந்தும் வன்கொடுமை தடுப்க்ச் சட்டம் போடப்படவில்லை), தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று பெரிய அளவில் ‘லாபி’ செய்து பெரும் பணக்காரர்களாக மாறிய, மாறத் துடிக்கும் கும்பலின் சாதி அரசியலும், இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆதாரமாக இருக்கும் சாதிய சமூகமும், பா.ம.க. வழக்கறிஞர் பாலு கட்டுப்பாட்டில் இருந்த ‘திவ்யா’ ஆதிக்க சாதிவெறி கும்பலின் மிரட்டலுக்கு பணிந்ததும், சமூக விடுதலைக்காக போராடும் இயக்கங்கள், சனநாயக இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், பெரியாரிய இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள், தலித் இயக்கங்கள், சமூக ஆர்வலர்களின் பலவீனமும்தான், இளவரசனின் படுகொலைக்கான உண்மையான காரணங்களாகும்.

நாற்றமெடுத்த சாதிய சமூகத்தின் மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் நாம் பிரேத பரிசோதனைக்கு உள்ளாக்காமல் இளவரசனின் உயிர் பலிக்கான உண்மைக் காரணத்தை நம்மால் உணரமுடியாது. வருங்காலங்களில் இளவரசன்களின் படு கொலைகளைத் தடுத்து நிறுத்துவிட முடியாது.

இளவரசன் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்று காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. இளவரசனின் உயிரிழப்பிற்கு (அது கொலையாக இருந்தாலும் சரி, தற்கொலையாக இருந்தாலும் சரி) பா.ம.க. தலைவர் ராமதாசு தலைமையில் திரண்ட ஆதிக்க சாதிவெறி கும்பல்தான் காரணம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நம்மால் (சமூக விடுதலைக்காக போராடும் இயக்கங்கள், சனநாயக இயக்கங்கள், பெரியாரிய இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள்) இந்த ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் சாதிவெறி அரசியலை தடுத்து நிறுத்த, தண்டிக்க, தட்டிக் கேட்க முடியாமல் இருப்பது மிகவும் ஆபத்தானதாகும். இப்படிப்பட்ட நிலை தொடர்ந்தால் ஆதிக்கசாதி வெறிக் கும்பலின், தலித் மக்கள் மீதான கும்பல் தாக்குதல்கள், கௌரவக் கொலைகள், அனைத்து சாதிய ஒடுக்குமுறைகள் தொடரும் என்பதை உடனடியாக நாம் அனைவரும் உணர்ந்தாக வேண்டும்.

நம்மிடையே உள்ள பிழைப்புவாதிகள், சமரச சக்திகளை இணங்கண்டு, (பெரும்பாலான தலித் இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமை உட்பட பிழைப்புவாத, சமரச சக்திகளாக உள்ளன), அவர்களை நம் போராட்டத்தின் போக்கில் தனிமைப்படுத்தி உறுதிமிக்க போராட்டங்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்க வேண்டிய முக்கிய தருணத்தில் உள்ளோம். இப்போராட்டத்தை தலித் மக்களின் விடுதலை மற்றும் சாதிய சமூகத்தின் அனைத்து இருப்புக்களையும் தகர்த்து சாதியற்ற சமூகம் படைக்கும் நோக்கில் முன்கொண்டு செல்ல வேண்டும். இப்போராட்டம் எந்தச் சூழ்நிலையிலும் ஆதிக்க சாதியில் உள்ள உழைக்கும் மக்கள், தலித் மக்களின் ஒற்றுமையைக் குலைக்கக்கூடாது. இதுவே காதலில் மலர்ந்து ஆதிக்க சாதி வெறித் தீயில் கருகிய இளவரசனின் மரணம் நம்முன் விட்டுச் சென்றுள்ள கடமையாகும்.

தருமபுரியில் புரட்சிகர கட்சிகளின் செல்வாக்கு இருக்கும்வரை ஆதிக்க சாதி வெறியர்கள் அடங்கிக் கிடந்தனர். இப்பொழுது ஆட்டம் போடுகின்றனர். எனவே தருமபுரி மற்றும் நத்தம் மக்கள் புரட்சிகர அரசியலை நோக்கி நகர்வது ஒன்றே ஆதிக்க சாதி வெறித் தீயில் பலியாகும் இளவரசன்களின் மரணத்தைத் தடுக்கும். மற்றபடி CBI விசாரணை, நீதி விசாரணை எல்லாம் இளவரசன் படுகொலையில் புதையுண்டுள்ள சில உண்மைகளை (பல நிகழ்வுகளில் உண்மை வெளிவரவே இல்லை என்பதே உண்மை) வெளிக் கொணர மட்டுமே உதவும்.

தமிழக அரசே!

 இளவரசன் மரணத்தில் புதையுண்டுள்ள உண்மைகளை அறிய CBI விசாரணை நடத்து!

 ஆள்கொணர்வு மனுவைத் தவறாக கையாண்டு இளவரசன்-திவ்யாவைப் பிரித்து, ஆதிக்க சாதி வெறியர்களுக்குத் துணைபோன நீதிபதியைப் பதவி நீக்கம் செய்!

 இளவரசன் படுகொலைக்குக் காரணமான பா.ம.க. ராமதாசு தலைமையிலான ஆதிக்க சாதிவெறிக் கும்பல்மீது கொலை வழக்கைப் பதிவு செய்!

 திவ்யாவை ஆதிக்க சாதிவெறி கும்பலிடமிருந்து மீட்டு அரசின் பாதுகாப்பில் (தற்காலிகமாக) வை!

 இளவரசன் குடும்பத்தாருக்கு ரூ. 25/-லட்சம் இழப்பீடு வழங்கு! வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கு!

 தலித் மக்களின் பாதுகாப்பிற்கும், ஆதிக்க சாதிவெறி கும்பலின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், கடுமையான சட்டங்களை இயற்று! ஆதிக்கசாதி சங்கங்களைத் தடைசெய்!

 தருமபுரி மாவட்டத்தில் போட்டுள்ள 144 தடை உத்தரவை உடனேத் திரும்பப் பெறு!

தமிழக மக்களே! சனநாயக சக்திகளே! தலித் மக்களே! ஆதிக்க சாதியிலுள்ள உழைக்கும் மக்களே!

 பிழைப்புவாத அரசியலுக்காக பா.ம.க. தலைவர் ராமதாசு தலைமையில் திரண்டுள்ள ஆதிக்க சாதிவெறிக் கும்பலை தலையெடுக்க விடாமல் தனிமைப்படுத்துவோம்! தலித் மக்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும், உறுதியான போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்துவோம்!

 அனைத்து சாதியிலுள்ள உழைக்கும் மக்களின், தலித் மக்களின் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!

 ஆதிக்க சாதிவெறிக் கும்பலை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கும் அரசை அம்பலப் படுத்துவோம்! ஆதிக்க சாதிவெறி கும்பலுக்குத் தலைமை தாங்கும் ராமதாசு கும்பல் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கும் வரை அரசை நிர்ப்பந்தித்துத் தொடர்ந்து போராடுவோம்!

 தலித் மக்களின் விடுதலைக்காகவும், சாதியற்ற சமூகம் படைக்கவும் அனைத்து சமூக விடுதலைக்கான இயக்கங்களும், சனநாயக இயக்கங்களும், பெரியாரிய இயக்கங்களும், தமிழ்த் தேசிய இயக்கங்களும், பெண்கள் இயக்கங்களும், மாணவர் இயக்கங்களும், தொழிலாளர் இயக்கங்களும், அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்க மற்றும் சமூக இயக்கங்களும், சாதி மறுப்பாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஐக்கியப் படுவோம்! பிழைப்புவாத, சமரச சக்திகளைத் தனிமைப்படுத்துவோம்!

தலித் மக்கள் சனநாயக முன்னணி
மக்கள் சனநாயக குடியரசு கட்சி

தொடர்புக்கு
முரளி : 9843067837  அமைப்பாளர், தலித் மக்கள் சனநாயக முன்னணி
பழனி : 9176264717, பொதுச்செயலாளர், மக்கள் சனநாயக குடியரசு கட்சி

Pin It