பள்ளி சூழல்களில் தொடர்ந்து பிரச்சனையாகி வரும் குழந்தைகள் மீதான பாலியல் பாதிப்பு புகார் காரணமாகவோ அல்லது அந்த பிரச்சனையினை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்றோ, தமிழக அரசு கடந்த 28.5.2013 தேதிய பள்ளி கல்வித்துறை சார்ந்த அரசாணையில், தமிழகத்தில் பெண்கள் பள்ளிகளுக்கு ஆண் ஆசிரியர்களை நியமிப்பதில்லை என முடிவெடுத்துள்ளது.தமிழக அரசின் இந்த முடிவு எந்த விதமான தீர்வினை குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை தடுப்புக்கு தந்துவிடப் போகின்றது என்பது ஒரு பெருத்த கேள்வியாக உருவாகியுள்ளது.

பள்ளிகளுக்கு ஆண் ஆசிரியர்களை நியமிக்க மறுப்பதன் முலம் பிரச்சனையினை தீர்த்துவிட முயலும் அரசு,பள்ளிக்கு வெளியில் நடைபெறும் வன்முறைகளுக்கு என்ன தீர்வினை சொல்லப்போகின்றது?

சமூகத்தில் பள்ளிகள் தனித்து இருப்பதில்லை.பள்ளிகளுக்கென பிரத்தியேக ஒழுக்க விழுமியங்கள் உருவாகிவிடுவதுமில்லை.பள்ளியில் நிகழும் வன்செயல்கள் சமூகத்தில் நிகழும் குழந்தைகள் மீதான வன்முறையின் ஒரு நீட்சியே.,நமது சமூகத்தின் எல்லா பக்கங்களிலும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியா போன்ற மக்கள் தொகை  அதிகம் உள்ள நாட்டில் சுமார் ஐந்தில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள்.

கடந்த 2005ம் ஆண்டு துளிர், சேவ் சில்ரன் (save children), Centre for healing and preventive child sexual abuse அகிய தன்னார்வ தொண்டு அமைப்புக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில், பல்வேறு பொருளாதார பின் புலத்தில் உள்ள மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் ஆண் குழந்தகள் 48% பேரும், பெண் குழந்தைகள் 39% பேரும் பாலியல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டது.சுமார் 72%குழந்தைகள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்செயல்களைப்பற்றி வெளிப்படுத்தவில்லை என்பதையும் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்த மெளனமே குழந்தைகளை பாலியல் பாதிப்புக்கு உள்ளாக்குபவர்களுக்கு பாதுகாப்பாக உள்ளது.

பொதுவாக குழந்தைகள் வெளிப்படுத்துவதில்லை என்பதாலேயே திரும்பத் திரும்ப பாதிப்பை தைரியமாக செய்யும் நிலை உள்ளது.இதில் வேடிக்கை என்ன வென்றால் குழந்தைகளை இந்த பாதிப்புக்குள்ளாக்குபவர்களில் பெரும்பாலானோர் அந்த குழந்தைகள் நன்கு அறிந்த நபர்கள். வீட்டிலோ அல்லது வீட்டுக்கு அருகிலோ ,பள்ளிப்பகுதிகளிலோ வேறு விளையாடும் இடங்களிலோ இந்த நபர்களை குழந்தைகள் எதிர்கொள்கின்றனர். பாலியல் பாதிப்பென்பது பெண் குழந்தைகளுக்கு மட்டும் நிகழக்கூடிய ஒன்று. அதுவும் ஆண் மூலம் மட்டுமே அது நிகழக்கூடியது என்ற ஒரு பழமையான மூட நம்பிக்கைக்கு அரசும் விதி விலக்காக இல்லை.

கடந்த 2013பிப்ரவரி மாதம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்செயலுக்கு எதிராக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த கோயமுத்தூர் குற்றவியல் வழக்குரைஞர் சங்கம் முடிவு செய்திருந்தது. இப்பிரச்சாரத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்ட ஆர்வமுள்ள இருபாலர் வழக்குரைஞர்களுக்கு,குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பாதிப்பு மற்றும் தற்காத்துக்கொள்வதற்கான முறை குறித்து முதலில் பயிற்றுவிக்கப்பட்டது. ஏனெனில் குழந்தைகளிடம் சென்று பேசுவது என்பதே ஒரு சவால்,அதிலும் பாலியல் வன்முறையிலிருந்து தற்காத்து கொள்வது குறித்து பேசுவது பெரும் சவால் என்று உணரப்பட்டது. குழந்தைகளுடன் தொடர்ந்து பணிபுரிந்து வரும் சைல்ட் லைன் (Child line) போன்ற அமைப்புக்களின் நிர்வாகிகள் வழக்குரைஞர்களிடம் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். குழந்தைகளின் மனநிலை குறித்தும், அவர்களிடம் எப்படி பேசலாம் என்பது குறித்தும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கூறினர். 

தேசிய மனித உரிமை ஆணையத்தின் குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு குறித்த கையேடு மற்றும் குழந்தைகளின் உரிமைகள் குறித்து வெளிவந்த பல்வேறு உரிமை சார் அமைப்புகளின் வழிகாட்டுதல்கள்பள்ளிகளுக்கு சென்று பேசப்போகும் வழக்குரைஞர்களுக்கு தரப்பட்டது.முதலில் ஆர்வமாக பலர் முன் வந்த போதும் இந்த சொற்பொழிவு இவ்வளவு கடினமானதா என கருதியதாலேயோ என்னவோ பலர் பின்தங்கினர். இறுதியில் பேசுவதில் ஆர்வமுள்ளவர்கள்,உரிமை சார் செயல்பாட்டாளர்கள்,மனித உரிமையில் அக்கறை உள்ளவர்கள் என சுமார் 30பேர் தங்களை தயார்படுத்திக் கொண்டனர்.அவர்களுடன் துணையாக செல்பவர்கள் என இன்னொரு 30பேர் முன் வந்தார்கள்.

கோவை மாவட்ட கல்வி அதிகாரிகளின் அனுமதியும் பெறப்பட்டது.அதன் பின் கோவையின் சுற்றுப்பகுதியில் அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் என வழக்குரைஞர்கள் பிரிந்து சென்று மாணவர்களிடம் பேசச் சென்றார்கள்.அந்த சமயம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டிருந்ததால் 6முதல் 9வகுப்பு மாணவர்களே பெரும்பாலும் பள்ளிகளில் விழிப்புணர்வு கருத்தை கேட்க அமரவைக்கப்பட்டனர். மாணவர்களிடம் ஒரு சொற்பொழிவு பாணியில் பேசினால் அவர்கள் எளிதில் சோர்வடைந்துவிடக்கூடும் என்பதால் ஒரு உரையாடல் வடிவில் பேச்சை கட்டமைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது.

"மாணவர்களே குழந்தைகளுக்கு பாலியல் பாதிப்பை, தீங்கை ஏற்படுத்துவது என்றால் என்ன எனத் தெரியுமா?" என தயங்கியபடியே பேசுபவர் கேட்டபோது குழந்தைகளோ

"குழந்தைகளை கெடுப்பதுதானே?" என கத்தினர். ஊடகங்கள் நமது உரையாடலை எளிமையாக்கி விட்டன.

"குழந்தைகளை யார் கெடுப்பார்கள்?" என அடுத்த கேள்வியினை கேட்டபோது அவர்கள் பெரும்பாலான பள்ளிகளில் சொன்ன ஒரே மாதிரி பதில்

"தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், திருடர்கள், கொள்ளைக்காரர்கள்"

இதுவும் ஊடகங்கள் வழி பதியப்பட்ட செய்தியாகவே அறிய முடிந்தது. அந்த பதிலின் தொடர்ச்சியாக பேசுபவர்

"இல்லை, உங்களுக்கு கெடுதல் செய்பவர், கெடுப்பவர் தோற்றத்துக்கு அவ்வளவு கொடூரமானவரில்லை அவர் உங்களுக்கு நன்கு அறிமுகமான நபராக இருக்கக்கூடும்"

என அந்த பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகளை தற்காத்துக் கொள்ளும் விழிப்புணர்வு பயிற்சி தொடங்குவது வழக்கமாக இருந்தது. உலகம் முழுதும் குழந்தைகளின் பாலியல் வன்முறை தடுப்பு பால பாடமான "நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்" மற்றும் பாலியல் பாதிப்பு நிகழும் போது அதை மறைத்து வைக்காமல் மற்றவரிடம் பேசுதல், உதவி கோருதல்,.குழந்தைகளின் உடல் பிரத்தியோகமானது அதை பிறர் தேவையின்றி தொட அனுமதிக்க கூடாது என பல்வேறு சின்ன சின்ன தகவல்களுடன் சுமார் ஒரு மணிநேர பேச்சு கட்டமைக்கப்பட்டது.

கோவையினைச் சுற்றி உள்ள 60அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த பிரச்சாரம் செய்யப்பட்டது.ஆரம்பத்தில் பரிட்சை நடப்பதாகவும்,மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பதாகவும் ,சாக்கு போக்கு கூறி தயங்கிய ஒரு சில ஆசிரியர்கள் கூட இறுதியில் இப் பிரச்சாரத்தை வரவேற்றனர். தங்களால் வெளிப்படையாக பேச முடியாததை வழக்குரைஞர்களின் உரையாடல் பேசிவிட்டது என சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த அனுபவத்தில் ஒன்று வெளிப்படையாக தெரியவந்தது. அது, இது வரை அரசு பாலியல் தீங்கிழைத்தல் தடுப்பு கல்வியினை மாணவர்களுக்கும் கொண்டு செல்லவில்லை என்பதும், ஆசிரியர்களிடமும் கொண்டு செல்லவில்லை என்பதும் புலப்பட்டது..குழந்தைகளை எவ்விதம் மதிப்பது. குழந்தைகளின் உரிமைகள், அவர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் அவர்களுக்கு எதிராக சித்தரவதையோ ,தண்டனையோ தடைசெய்யப்பட்டது என்ற ஆழமான கருத்து கல்வி மையங்களில் கொண்டு சேர்க்கப்படவில்லை.

பாலியல் சீண்டல்களை அதன் அறிகுறிகளை அறிதல் என்பது அந்த பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள உள்ள முதல் அடிப்படை அலகாகும்.இந்த அனுபவம் பள்ளிகளுக்க் சென்றடையவில்லை.வழக்குரைஞர்கள் பள்ளிகளில் சென்ற் பேசுவதால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க ஆசிரியர் பற்றிய எதிரான கருத்துக்களை வெளிப்படுத்துவதில்லை என முடிவு செய்திருந்தனர்.ஆசிரியர்களின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மட்டுமே பேசினர்.ஆசிரியர்கள் நிச்சயம் பள்ளிகளில் பாலியல் பாதிப்புக்களை தடுக்க ஆக்கப்பூர்வமான பங்காற்றக்கூடிய சக்திகள் அவர்களை எதிர்மறையாக நிறுத்த தேவையில்லை என்ற முடிவு சாதகமான பலன் தந்தது.

ஆக பிரச்சனை ஆசிரியர் ஆணாக இருக்கின்றார் அல்லது பெண்னாக இருக்கின்றார் என யோசிப்பதில் இல்லை.குழந்தைகளின் உரிமைகள் மற்றும் குழந்தைகளை நடத்துவது குறித்த விழிப்புணர்வை அறியச்செய்தல்,குழந்தைகள் பாதுகாப்பு சட்ட நிலைகளைப் பற்றி விவாதித்தல்,பாலியல் தீங்கிழைத்தலில் ஆசிரியரை பாதுகாவலர் நிலையில் வைத்தல் ஆகியவற்றில் உள்ளது. பள்ளிகளுக்கு சென்று வளர் பருவ மாணவர்களை  நேரிடையாக சந்தித்த கள அனுபவம் மூலம் ஒன்றை உறுதியாக கூறமுடியும். குழந்தைகள் நாம் பொது புத்தியில் நினைத்துக்கொண்டிருப்பது போல அவ்வளவு அறியாமையில்,வெகுளிகளாக இல்லை.அவர்களுக்கு நல்லது கெட்டது தெரிகிறது.அவர்களுக்கு நாம் நல்ல வழிகாட்டுதல்களை செய்யமுடியும்.அவர்கள் பள்ளிகளில்,பிற சூழல்களில் ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்ககூடிய சக்திகள்.

நமது வீடுகளில் கூட நாம் இந்த பாலியல் தீங்கிழைத்தல் தடுப்பு மற்றும் தற்காத்துக்கொள்ளும் விவாதங்களை முன்னெடுக்க விரும்புவதில்லை.நமது மெளனம் ஆயிரமாயிரம் கால பழமைவாதத்தின் வழி உருவானது.தீங்கிழைப்பவர்கள் இதனையே தங்களுக்கு சாதகமாக கருதுகின்றனர்.அரசும் கல்வி சூழலில் இந்த மெளனத்தை விரும்புகின்றது.எனவே அரசு பெண் குழந்தைகள் பள்ளிகளில் ஆண் ஆசிரியரை நியமிப்பதில்லை என தீர்வற்ற ஒன்றை தீர்வு என கருதுகின்றது.

நாம் எல்லோரும் ஒரு திறந்த விவாதத்தை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தீங்கிழைத்தலுக்குஎதிராகஎழுப்புவோம்.நமதுகுழந்தைகளுக்குசொல்லுவோம். இப்பிரச்சனையில் முக்கியமாக இறுகிப் போய் கெட்டித்து உள்ள மெளனத்தை உடைப்போம்.ஒரு ஆரோக்கியமான, பாதுகாப்பான உலகினை குழந்தைகளுக்கு சமைப்போம்.

Pin It