அன்பார்ந்த ஒடுக்கப்பட்ட இனங்களே!
சுரண்டப்படும் மக்களே!
தமிழீழத் தமிழர்கள் நீண்ட வரலாற்றுத் தாயகத்தையும் மொழியையும் பண்பாட்டையும் கொண்ட ஒரு தேசிய இனமாகும். தாயகத்திற்காகவும் இறையாண்மை கொண்ட தேசிய வாழ்விற்காகவும் அமைதி வழியிலான மற்றும் ஆயுதம் ஏந்திய அவர்களின் நீண்ட விடுதலைப் போராட்டம் சிங்களப் பேரினவாத அரசால் இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் ரத்த சகதியில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. முன்னோடியாகத் திகழ்ந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்ட இப்பின்னடைவு தமிழர்களுக்கு மட்டுமல்ல, விடுதலைக்குப் போராடும் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் மனித குலத்திற்கும் ஏற்பட்ட பின்னடைவாகும்.
புகழ்மிக்க தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் நமக்குப் பல படிப்பினைகளை வழங்கியுள்ளது. இன ஒடுக்குமுறையாளர்கள் தனித்து நிற்கவில்லை. அவர்கள் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் வளத்தையும் வாழ்வுரிமையையும் வரலாற்றையும் சூறையாடுவதன்மூலம் உலக வல்லாதிக்க சக்திகளோடு இணைந்தே நிற்கிறார்கள் என்ற உண்மையையும் தேசிய இன விடுதலைப் போராட்டம் தேசத்தின் எல்லைக்குள் மட்டுமல்லாமல் உலகம் தழுவியதாக மாற்றப்பட வேண்டும் என்ற அரசியல் கண்ணோட்டத்தையும், தன்னை ஒத்த ஒடுக்கப்பட்ட இனங்களும் சுரண்டப்படும் மக்களுமே ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் கூட்டாளிகள் என்ற நடைமுறைத் திட்டத்தையும் தன்னல மறுப்பு, நெகிழ்வுத் தன்மை உறுதியான போராட்டப் பண்பையும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் நமக்குக் கற்பிக்கிறது.
தாயக விடுதலைக்கான ஈழத்தமிழ் மக்களின் தியாகத்தையும் உறுதியையும் போற்றுவோம். 1948 முதல் இன்று வரை இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்பதை உலக மக்களிடம் கொண்டு செல்வோம். நம்மை ஆளும் அரசுகளை தமிழீழ விடுதலைக் கோரிக்கையை ஆதரிக்க நிர்ப்பந்திப்போம். தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை நாளான மே18ஐ ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலைக்கான எழுச்சி நாளாக ஆண்டுதோறும் முன்னெடுப்போம். இனப்படுகொலையால் இனங்களின் விடுதலையை ஒடுக்கி விட முடியாது என்பதை உலகிற்கு உணர்த்துவோம். தாயக விடுதலையை முன்நகர்த்துவோம். 21ஆம் நூற்றாண்டை ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலை நூற்றாண்டாக்குவோம்.
தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றம் இனப்படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோருவோம்.
இனப்படுகொலைக்கு நீதி கேட்போம்!
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் துணை நிற்போம்!!
தமிழர் (மொழி, இன) சர்வதேசியம் ஒருங்கிணைப்போம்!
ஒடுக்கப்பட்ட இனங்களோடு ஒன்றிணைந்திடுவோம்!!
ஒடுக்கப்பட்ட இனங்களே! சுரண்டப்படும் மக்களே! ஒன்று சேருங்கள்.
ஒடுக்குமுறை, சுரண்டல் ஒழித்த புத்துலகம் நோக்கி முன்னேறுவோம்.
- தமிழர் குடியரசு முன்னணி (98408 78819, 90924 50972)
RSS feed for comments to this post