ஈழத்தில் தமிழர்கள் கொத்து கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்ட பொழுது தமிழகத்தில் வாழும் நாம், நமது தொப்புள் கொடி உறவுகளுக்காக பல்வேறு விதமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று நம்மால் முடிந்த அனைத்து விதமாக போராடியும், முத்துக்குமார் உட்பட பல தமிழர்கள் தங்கள் உடலை தீக்கு தந்து ஆயுதமாக்கிய பின்னும், அதை அனைத்தையும் தமிழ்நாட்டில் உள்ள சிலரின் பதவி ஆசைக்காக நம் போராட்டத்தை திசை திருப்பி நம் உறவுகளான‌ ஒன்றரை லட்சம் தமிழர்களை நாம் இழந்தோம்.

arunchorie_480

தமிழ்நாடு மக்கள் கட்சி சென்னை மாவட்டத் தலைவர் அருண்சோரி 

இப்படி தன்னெழுச்சியாக 2009ல் போராடிய மக்களை தங்களின் பதவியைத் தக்க வைத்து கொள்வதற்காக கருணா போன்ற ஒரு சிலர் இனப்படுகொலைக்கு துணை போனார்கள். அது போலவே இப்பொழுதும் தனது அரசியல் லாபத்திற்காக, போராடும் மாணவர்களை தனது கட்சியின் ஆட்களைக் கொண்டு தம்முடைய அரசியல் கட்சியின் போராட்டமாக மாற்ற முயற்சித்து வருகிறார்கள் தமிழ்நாடு மக்கள் கட்சியும் அதன் சென்னை மாவட்டத் தலைவர் அருண்சோரியும்.

பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை காட்சிகள் வெளிவந்த போது அனைத்து தமிழ் நெஞ்சங்களும் துடித்தன‌. அது போலவே இலங்கை மீதான ஒரு விவாதம் ஐ.நா அவையில் வந்தது. இந்த காலகட்டத்தில் 08/03/2013 அன்று லயோலா கல்லுரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கல்லுரி அருகில் உள்ள அய்கப் அரங்கில் ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது அங்கே வந்த காவல்துறையினர் 'மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் கைது செய்வோம்' என்று சொன்ன போது தமிழின உணர்வாளர்கள் அனைவரும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டாம் எனவும், அவர்களை காவல் துறையினரிடம் இருந்து காப்பாற்றி, போராட்டத்தை தொடர்வது என்றும் முடிவு செய்த பின், அதுவரை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அருண்சோரியும், அவரது ஆட்களும் தன்னிசையாக மாணவர்களிடத்தில் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும், மாணவரகள் போலிசாரிடம் கைது ஆக வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அது அங்கு இருந்த உணர்வாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

illaiyaraja_politics_300தமிழ்நாடு மக்கள் கட்சியின் அருண்சோரி ஏன் அப்படி போலிசாருக்கு சாதகமான ஒரு முடிவை மாணவர்களிடத்தில் வைத்தார், ஏன் போராட்டத்தை திசை திருப்ப முயன்றார் என்று ஒரு விவாதம் மாணவர்களிடத்திலும், அங்கு இருந்த உணர்வாளர்களிடத்திலும் ஏற்பட்டது. ஆனாலும் மாணவரகள் போராட்டத்தை காக்க வேண்டும், அதை அனைத்து மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களை உணர்வாளர்கள் அங்கிருந்து கோயம்பேட்டில் உள்ள செங்கொடி அரங்கத்திற்கு கொண்டு சென்று போராட்டமானது தொடர்ந்தது.

இப்படி மாணவர் போராட்டத்தை முதலிலேயே தடுக்க முயன்ற தமிழ்நாடு மக்கள் கட்சியும் அருண்சோரியும் அடுத்து மாணவர்களை பிளவுபடுத்த தன் கட்சியின் ஆட்களைக் கொண்டு "தமீழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு" என்ற ஒன்றை ஏற்கனவே இருந்த தமீழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்புக்கு எதிராக ஆரம்பிக்க வைத்தனர். அதன் ஒருங்கிணைப்பாளராக தனது கட்சியின் இணைச் செயலாளர் திவ்யா என்பவரையும், அதன் அடுத்த கட்ட தலைவராக தனது கட்சியின் மாணவர் தலைவரான இளையராஜா என்பரையும் நியமித்து மாணவர் போராட்டத்தை தனது கட்சியின் போராட்டமாக மாற்றினார். 

முதலில் போராட்டத்தை ஆரம்பித்த லயோலா கல்லூரி மாணவர்கள், இது வெறும் லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டம் இல்லை, அனைத்து கல்லூரி மாணவர்கள் போராட்டம், ஆகவே இதற்கு 'தமீழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு' என்று பெயரிட்டு, அதன் மூலம் அனைத்து மாணவர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு ஆரம்பிக்கப்பட்டது தான் 'தமிழீழ விடுதலைக்கான் மாணவர் கூட்டமைப்பு'.

இப்படி போராடும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில் முதலில் இணைந்து வேலை செய்த தமிழ்நாடு மக்கள் கட்சியின் திவ்யாவும், இளையராஜாவும் கூட்டமைப்புக்கு கிடைத்த வரவேற்பை தனது கட்சிக்கு மாற்ற நினைத்தார்கள். அது அங்கு இருந்த மாணவரகளால் தடுக்கப்பட்டது. அதன் பின் தனியாக ஒரு அமைப்பை 'தமீழிழத்திற்க்கான மாணவர் போராட்ட குழு' என்று ஆரம்பித்து அதன் தலைவராக தங்களது கட்சியின் ஆட்களை நியமித்துக் கொண்டு, மொத்த மாணவர் போராட்டத்தை இரண்டாக உடைத்தார்கள் அருண்சோரியும் தமிழ்நாடு மக்கள் கட்சியும்.

tmk_poster_628

இப்படி மாணவர் போராட்டத்தை உடைத்ததோடு இல்லாமல் போராடும் மாணவர்களின் கோரிக்கைகளையும் அவர்களுக்குத் தெரியாமல் மாற்றி அமைத்தனர் தமிழ்நாடு மக்கள் கட்சியினர். மதுரையில் போராடும் 'தமீழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு' மாணவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தந்த நிலையில் அங்கும் தமிழ்நாடு மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் தங்கபாண்டியனும் ஆதரவு தருகிறோம் என்றும், வேலையை பிரித்துப் கொள்ளலாம் என்றும் கூறியதன் காரணமாக மாணவர்கள் தயாரித்த அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்கிறோம் உட்பட கோரிக்கைகளை வைத்து சுவரொட்டி தயாரிக்கும் வேலையை மாணவர்கள் தங்கபாண்டியன் அவர்களுக்கு கொடுத்தனர். அவர் மாணவர்களின் கோரிக்கையான அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கிறோம் என்பதற்குப் பதிலாக தனது கட்சியின் கோரிக்கையான 'அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க' என்று தன்னிச்சையாக மாற்றிக் கொடுத்தார். அதன் பின் சுவரொட்டி ஒட்டும் பொழுது அதைப் பார்த்த மாணவரகள் அதிர்ச்சி அடைந்து அனைத்து சுவரொட்டியின் மீதும் மீண்டும் ஒரு சுவரொட்டியை ஒட்டி தவறான கோரிக்கையை அழித்திருக்கின்றனர். இப்படியாக மாணவர்களின் கோரிக்கையைக் கூட ஏற்றுக்கொள்ளாத அளவுக்கு யாரைக் காப்பாற்ற அருண்சோரியும் அவர் சார்ந்த தமிழ்நாடு மக்கள் கட்சியும் முயல்கிறார்கள் என்று நேர்மையாளர்கள் புரிந்து கொள்ளட்டும்.

divya_285இதுமட்டுமில்லாமல் மாணவர் போராடும் போது ஆதரவு தெரிவிக்க வந்த அரசியல் கட்சியினரை இது மாணவர் போராட்டம், இதில் அரசியல் கட்சிகள் தலையிடக் கூடாது என்று தமீழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அதாவது தமிழ்நாடு மக்கள் கட்சியின் இணை செயலாளர் திவ்யா நேரிலும் பத்திரிக்கை வாயிலாகவும் பலமுறை சொன்னார்.

அவரே தமிழ்நாடு மக்கள் கட்சியின் இணை செயலாளராக இருந்து கொண்டு அங்கே வேறு அரசியல் கட்சியினர் யாரையும் உள்ளே விடாமல் தடுத்தது எதனால்?? அல்லது வேறு அரசியல் கட்சியினர் வந்தால் தங்களுக்கு பெயர் கிடைக்காது என்று நினைத்தார்களா என்று தெரியவில்லை. அது தமிழ்நாடு மக்கள் கட்சிக்கும் அருண்சோரிக்குமே தெரியும்.

இப்படியாக போராடும் மாணவர்களின் போராட்டத்தை தனது அரசியல் லாபத்திற்க்கு பயன்படுத்த நினைத்து அனைத்து மாணவர் போராட்டத்தை உடைத்த தமிழ்நாடு மக்கள் கட்சியின் சென்னை மாவட்டத் தலைவர் அருண்சோரியையும், அவரது கட்சியையும் - மாணவர்களே! உணர்வாளர்களே! - புரிந்துகொண்டு நமது கோரிக்கைகளில் தெளிவாக இருப்போம்; தமீழீழம் அடைவோம்.

- சு.கி.கொண்டல்சாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

4 comments

4
antony sasither
உங்கள் அத்துனை குற்றச்சாட்டிற்கும் தமிழ் நாடு மக்கள் கட்சியின் சார்பில் தோழர் வினோத் பதில் கொடுத்துள்ளார். ஓரே ஒரு கேள்வி தோழர்களே.. நியாயமாக பதில் சொல்லுங்கள். அருண்சோரி ஓடி ஒளிந்து விட்டாரா? இல்லை அரசியல் பணி செய்து கொண்டிருக்கிறார? இரண்டு நாட்களுக்கு முன்பு போலிசு அவரயும் சேவ் தமிழ் செந்திலையும் என்ன பாடு படுத்தியது என்று ஊருக்கே தெரியும்..ஹோசிமின் சொன்னது- எவன் ஒருவன் போலிசால் தேடப்படும் குற்றவாளியோ அவன் தான் வியட் நாமின் உண்மையான போராளி... உங்கள் கட்டுரைக்கு இந்த பதிலெ போதும் என்று நினைக்குறேன்.
raghava raj
த.ம.க.வின் பிளவுபடுத்தும் வேலைகள் ந்ன்றாகவே அம்பலமாகியுள்ளன.இனி எல்லோரும் இவர்களைப் புரிந்துகொள்வர்.ஹோசிமின் சொன்னது அந்தக் காலத்து வியட்நாமுக்கு,இந்தக் காலத்து இந்தியாவுக்கல்ல.இப்போது போலிஸ் உளவுத்துறையே சில அமைப்புகளையும் சிலபல தலைவர்களையும் உருவாக்கி,திரியவிடுவது எல்லோருக்கும் தெரிந்தது தானே.புரட்சிகர (? ) அரசியல் என்று பேசித்திரிபவர்களுக்கு தெரியவில்லையோ? மோஹந்தாஸ் கரம்சந்த் காந்தி என்பவரும் இப்படி பிரிட்டிஷ்காரனால் இந்திய மக்க்ளின் தலைவர் (1 ) ஆக்கப்பட்ட வரலாறும் இவர்களுக்கு தெரியாதோ ?
Arunthamizhan
இதற்கான பதில் தோழர் வினோத் குமார் கொடுத்துள்ளார் இதில் உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் தெள்ள தெளிவாக பதில். கூறியிருக்கிறார் களத்தில் இருக்கும் தோழர்.அருண்சோரியை முகநூலில் தேடிக்கொண்டிருக்கும் மே 17 -தோழர் கார்த்திக்: வினோத்குமார். தேசிய பொதுக்குழு உறுப்பினர். தமிழ் நாடு மக்கள் கட்சி. ஒரு முழுநேர அரசியல் ஊழியராக இருந்தும் முகநூல் மற்றும் கீற்று இனைய தள‌த்தில் தாங்கள் எழுப்பிய கேள்விக்கு உடனே பதிலளிக்காமல் களத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் தோழர்.அருண்சோரியின் இந்த தாமதத்திற்கு அவர் சார்பாகவும் எங்கள் தமிழ்நாடு மக்கள் கட்சி சார்பாகவும் முதலில் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு அந்த கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் தங்கள் சந்தேகத்துக்கும், கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க விழைகிறேன். முதலில் தாங்கள் தோழர்.அருண்சோரியின் குற்றசாட்டை (அந்தக் கட்டுரையை) சரியாக படிக்கவில்லை என்றே நான் நினைகிறேன். ஏனெனில், தோழர்.அருண்சோரி தன் கட்டுரையில் திரு.திருமுருகன் மீதும், மே 17 மீதும் வைத்தக் குற்றசாட்டே ஈழ விடயத்தில் இந்தியாவின் துரோகத்தை எதிர்த்து மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கும் இன்றய சூழலில்… திரு. திருமுருகன் அவர்கள் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும், அமெரிக்க பொருட்களை (பெப்சி, கொக்ககோலா...)புறக்கணிப்பது, அதன் மூலம் அமெரிக்காவிற்கு பொருளாதார நெருக்கடியை உருவாக்கி, அமெரிக்க அரசை நிர்பந்தித்து அடுத்து ஐ.நாவில் கொண்டு வரும் தீர்மானத்தைப் பலப்படுத்தும் என்று கருத்து உருவாக்கி வருகிறார் என்பதுதான். தோழர் கார்த்திக் அவர்களுக்காக அருண்சோரி கட்டுரையில் இருந்து சிலப் பகுதிகள்…… இப்பவாவது இதை நன்றாக படிக்கவும். //….இந்த வரலாற்றுத் தருணத்தில் தமிழ்ச் சமூகத்தில் உணர்வின் அடிப்ப‌டையில் ஒட்டுமொத்த இந்திய தேசியக் கட்சிகளை நிர்பந்திக்கக் கூடிய வாய்ப்புள்ளது. இந்த சூழலில் இரண்டு மூன்று நாட்களாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.திருமுருகன் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து 'நாம் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும், அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிப்பது, அமெரிக்க அரசை நிர்பந்தித்து அடுத்து ஐ.நாவில் கொண்டு வரும் தீர்மானத்தைப் பலப்படுத்தும்' என்று கருத்து உருவாக்கி வருகிறார்…..// அருண்சோரியின் இந்த கட்டுரைக்கு பதிலளிப்பதற்காக கட்டுரை எழுதும் தோழர்.கார்த்திக் கடைசி வரை இதற்கு பதிலளிக்காமலே கட்டுரையை முடித்திருப்பது அவர் சாமார்த்தியத்தை காட்டுகிறது. ஆரம்பத்தில் அவருடைய கண்டன உரைக்குபின் அருண்சோரி கேள்விக்கு வரும் தோழர்.கார்த்திக் அந்த இடத்திலேயே அருண்சோரியின் குற்றச்சாட்டையே மாற்றி கூற ஆரம்பிக்கின்றார். தோழர்.கார்த்திக் கட்டுரையில் இருந்து சில….. //…..அவர் திருமுருகனின் மேல் வைத்திருக்கும் குற்றச்சாட்டு மே 17 இயக்கம் அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து இந்தியாவை காப்பாற்றும் நோக்குடன் திசைதிருப்புகிறோம் என்பதாகும்…..// இதில், அருண்சோரி திருமுருகன் மேல் வைத்திருக்கும் குற்றச்சாட்டு மே 17 இயக்கம் அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து இந்தியாவை காப்பாற்றும் நோக்குடன் திசைதிருப்புகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் கட்டுரையில் எந்த இடத்திலாவது “மே 17 இயக்கம் அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து இந்தியாவை காப்பாற்றும் நோக்குடன் திசைதிருப்புகிறார்கள்” என்ற வாசகம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கிறதா தோழர்? அமெரிக்க எதிர்ப்பு, அமெரிக்க பொருட்கள் ( கொக்ககோலா, பெப்சி…) புற‌க்கணிப்பு என்று தெளிவாக உள்ளதை ”அமெரிக்க தீர்மானத்தை எதிர்ப்பு” என தவறாக நீங்கள் குறிப்பிட்டுள்ளது… தவறாக புரிந்துக்கொண்டதாலா? இல்லை தங்கள் வசதிக்காக மாற்றிவிட்டீர்களா? ஆனால் உங்கள் கட்டுரை முழுக்கவே இந்த விமர்சனத்தை அமெரிக்க தீர்மானத்தை எதிர்ப்பதை விமர்சிப்பதாகவே பயன்படுத்தி உள்ளீர்கள். எப்படி இருப்பினும், அருண்சோரி "போராட்டத்தை மடை மாற்றுகிறீர்கள்" என்று வைத்த அடிப்படையான விமர்சனத்துக்கு பதில் அளிக்காமல் அவர் விமர்சனத்தையே மடை மாற்றி சப்பை கட்டுக்கட்டி கட்டுரையாக்கி இருக்கிறீர்கள். இதில் இப்படி ஒரு முடிவுரை வேறு //..எங்கள் மேல் வைக்கப்பட்ட அனைத்து அவதூறுகளுக்கும் நாங்கள் நேர்மையாக பதிலளித்திருக்கிறோம். நாங்கள் கேட்ட எந்த கேள்விகளுக்கும் நீங்கள் இதுவரை பதில் சொல்லவில்லை. இனிமேலாவது பதில் சொல்ல முடியுமா அருண்சோரி?...// என்ன நேர்மையான பதில் தோழர்……. எங்கள் கேள்வி தெளிவானது. இன்றய சூழலில், ஈழ விடயத்தில் மாண‌வர்கள் போராட்டமாக இருந்தாலும், இயக்கங்களின் போராட்டமாக இருந்தாலும் நம்முடைய போராட்டங்களும் முழக்கங்களும் முதன்மையாக யாரை நோக்கி என்பதுதான்? இனக்கொலைக்கு சர்வதேச விசாரனை, பொதுவாக்கெடுப்பு போன்ற நம் கோரிக்கைக்கு நாம் முதன்மையாக போராடவேண்டியது… அழுத்தம் கொடுக்க வேண்டியது இந்திய அரசையா? இல்லை அமெரிக்க அரசையா? ஈழத்தை வென்றெடுக்க நாம் எதிர்க்க வேண்டியது இந்திய ஆளும் வர்க்கத்தையா? இல்லை பெப்சி கொக்க கோலாவையா?. இதற்கு பதிலிருந்தால் அடுத்தக்கட்டுரையிலாவது எழுதுங்கள். குறிப்பு: ”முதன்மையாக” என்ற வார்த்தையை கவனிக்கவும். இதையும் கவனிக்காமல் இந்திய அரசை எதிர்ப்பது என்று நான் கூறியதை மடைமாற்றி கொக்ககோலா ஆதரவு, பெப்சி பாசம் என கூற மாட்டீர்கள் என நம்புகிறேன். ஏனெனில் உங்கள் கட்டுரையில் அதைதான் செய்திருந்தீர்கள். உங்கள் பதிவு கீழே… //கடந்த வாரம் சத்தியம் தொலைக்காட்சியில் நடந்த நேர்காணலில் திருமுருகன் இந்திய அரசை பொறுக்கி அரசாங்கம் என்று விமர்சித்தார். இந்த அளவிற்கு நீங்கள் எங்காவது இந்தியாவை எதிர்த்துப் பேசியதுண்டா? இத்தனை ஆண்டுகள் நாங்கள் இந்தியாவிற்கு எதிராக போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கேள்வி கேட்காத அருண்சோரிக்கு, அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லும்பொழுது மட்டும் ஏன் கோபம் வருகிறது? அருண்சோரியின் இந்த கோவத்தில் இந்திய எதிர்ப்பைவிட அமெரிக்கப் பாசம் அதிகம் இருப்பதன் நோக்கம் என்ன? கொலைகாரனை நீதிபதியாக்கிய ள்ள்ற்ச்யை நிராகரிப்பதும், அதையே தமிழனுக்கான தீர்வாகத் திணிக்கும் ஐ.நா மற்றும் அமெரிக்காவினை எதிர்ப்பதும் இந்தியாவிற்கு ஆதரவானது என்பது எந்த புரட்சிகர சிந்தனையில் வருகிறது என்று சத்தியமாக எங்களுக்குப் புரியவில்லை.// பதில்: இந்த பத்தியில் இருந்து 4 விடயங்களை பார்க்கலாம். 1.இந்த பத்தியிலும் இந்திய எதிர்ப்பை விட அமெரிக்க பாசம் அதிகமாக இருப்பதன் நோக்கம் என்ன? என கேட்டுள்ளீர்கள். அருண்சோரி ம்ள் அரசியல் பின்புலம் கொண்டவர்… அவர் ஒரு நக்ச‌லைட் என இந்திய உளவுத்துறையை விட அதிகமாக பொய் பரப்புரை செய்துவரும் நீங்கள்தான் ( தனிப்பட்ட உங்களை சொல்லவில்லை ஒட்டு மொத்த மே 17 இயக்கத்தார்), அமெரிக்க பாசம் என்று கூறுகிறீர்கள். ஈழ விடுதலைக்காக இன்று கொக்ககோலாவை விட இந்தியாவை எதிர்ப்பது முக்கியம் என்று சொல்வது அமெரிக்க பாசமா தோழர். சீனாவின் முற்றுகையில் இந்தியா என்ற புத்தகத்தை வெளியிட்ட நீங்கள், காந்திய பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்ட நீங்கள் இன்றய சூழலில் இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை ஏர்டெல், கொக்ககோலாவுக்கு எதிராக மடை மாற்றுவதுக்கு பெயர் இந்திய பாசம் தோழர். 2. பொறுக்கி அரசாங்கம் என்று குறிப்பிட்டதை சொன்னீர்கள். அதுதான் தைரியம் என நீங்கள் நினைத்தால் உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள் தோழர். ஆனால் உண்ணானிலை போராட்டம் செய்பவர்கள் மீதே தேசத்துக்கு எதிராக போர்த் தொடுத்த வழக்கு போடும் இந்திய அரசு இந்த தைரியத்தை கண்டுக்காததை பார்த்தால் அரசு இதை தைரியமாக கருதுகிறதா என்பதுதான் எங்கள் சந்தேகம். அடுத்து நீங்கள் யாராவது இவ்வளவு தைரியமாக (???) பேசியிருக்கிறீர்களா என கேட்டீர்கள். எங்களை பொருத்தவரை அரசை நிர்பந்திக்கும் வலிமையான போராட்டமே சரியானது என கருதுவதால் நாங்கள் இப்படி திட்டுவதில் கவனம் செலுத்துவதில்லை. 3. //… இத்தனை ஆண்டுகள் நாங்கள் இந்தியாவிற்கு எதிராக போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கேள்வி கேட்காத அருண்சோரிக்கு, அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லும்பொழுது மட்டும் ஏன் கோபம் வருகிறது?….// பதில்: போங்க தோழர். காமடி பண்றீங்க. இந்தியாவை எதிர்த்து போராட்டத்தை நடத்துப்பா என சொல்லும் நாங்கள், இந்தியாவை எதிர்த்து நீங்கள் போராட்டம் நடத்தி இருந்தா ஏன் கேள்வி கேக்க போகிறோம். ஆதரவு தானே தெரிவிப்போம். 4. //… கொலைகாரனை நீதிபதியாக்கிய ள்ள்ற்ச்யை நிராகரிப்பதும், அதையே தமிழனுக்கான தீர்வாகத் திணிக்கும் ஐ.நா மற்றும் அமெரிக்காவினை எதிர்ப்பதும் இந்தியாவிற்கு ஆதரவானது என்பது எந்த புரட்சிகர சிந்தனையில் வருகிறது என்று சத்தியமாக எங்களுக்குப் புரியவில்லை…// பதில்: முன்பே நான் சுட்டிக்காட்டியது போல் அமெரிக்க எதிர்ப்பு, கொக்ககோலா எதிர்ப்பு, பெப்சி எதிர்ப்பு என்ற போராட்டங்களை முன்னிறுத்தியதை பற்றிய விமர்சனத்தை(தீர்மானம் என்ற ஒரு வார்த்தையை சேர்த்து) இதிலும் அமெரிக்க தீர்மானத்தை எதிர்ப்பது எப்படி இந்தியாவிற்கு ஆதரவானது என உங்களுக்கு சாதகமாக மாற்றிவிட்டீர்கள் என்பதோடு இது எந்த புரட்சிகர‌தத்துவத்தில் வருகிறது எனவும் கேட்டுள்ளீர்கள். வைக்கப்பட்ட விமர்சனத்தை சரியாக எதிர்கொள்ளாமல் அதை உங்கள் விருப்பத்துக்கு மாற்றியதோடு… இந்த செயலுக்கு புரட்சிகர‌சாயம் வேறு…. யப்பா முடியல தோழர். உங்கள் அடுத்த கேள்வி.... தோழர்.கார்த்திக் கட்டுரையிலிருந்து.... //நாங்கள் அமெரிக்காவை எதிர்த்து, இந்தியாவை காப்பாற்ற முயல்கிறோம் என்பது அடிப்படை புரிதல் கூட இல்லாத செயலாகும். மே 17 இயக்கம் இதுவரை நடத்திய, நடத்தப் போகின்ற அனைத்து போராட்டங்களையும் இந்தியாவை எதிர்த்தே நடந்தும், நடத்தியும் வருகிறது. இப்பொழுது நாங்கள் அமெரிக்காவை எதிர்ப்பது போராட்டத்தின் ஒரு பகுதியே தவிர, இதுவே ஒட்டுமொத்த போராட்டம் இல்லை. நாங்கள் இந்தப் போராட்டத்தை தொடங்கும்பொழுதே நாங்கள் வெளியிட்ட சுவரொட்டியில் இந்தியா+இலங்கை+அமெரிக்காவின் கூட்டு சதியை முறியடிப்போம் என்று தான் வெளியிட்டோம்......// // கூடங்குளம் அணு உலை, முல்லைப் பெரியாறு, தமிழகத்திற்கு தரவேண்டிய மின்சாரத்தை தராமல் இருட்டடிப்பது என்று இந்தியாவின் அனைத்து தமிழர் விரோத துரோகங்களுக்கும் எதிராக எங்கள் இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. அதேபோல் தமிழின அழிப்பிற்கு துணைபோன இந்தியாவின் ஏர்டெல் புறக்கணிப்பு போராட்டம், இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு முட்டு கொடுக்கும் ஹிந்து பத்திரிக்கைக்கு எதிரான போராட்டம், தமிழின இனப்படுகொலைக்கு துணைபோன ஐ.நா. அலுவலக முற்றுகை என்று தமிழீழத்திற்கு தடையாக இருக்கும் அனைத்து முட்டுகட்டைகளுக்கும் எதிராக எங்கள் போராட்டம் சரியான திசையில் செல்கிறது //. பதில்: மேலே உள்ள உங்கள் பதிவில் 2 விடயங்கள். 1. இந்திய பிரச்சனைகளில், தமிழ் நாட்டு பிரச்சனையில் உங்கள் போராட்டத்தை பற்றி கூறியுள்ளீர்கள். இவற்றை பொருத்தவரை ம்ள் அரசியல், காந்திய பொருளாதாரம், இந்திய பாதுகாப்பு, சாதிய பிரச்சனை, இடஒதுக்கீடு என பல விடயங்களில் உங்கள் நிலைப்பாட்டை பற்றி நிறைய கேள்விகள் கேட்க வேண்டி இருப்பினும் இந்த கட்டுரை உங்கள் ஈழ பிரச்சனை தொடர்பான நிலைப்பாட்டை பற்றியதால் இதை பின்னர் தனியாக ஒரு கட்டுரையில் விவாதிப்போம். 2. ஈழப்பிரச்சனை தொடர்பாக பார்த்தால் மே 17 இயக்கம் இதுவரை நடத்திய, நடத்தப் போகின்ற அனைத்து போராட்டங்களையும் இந்தியாவை எதிர்த்தே நடத்தும், நடத்தியும் வருகிறது. இப்பொழுது நாங்கள் அமெரிக்காவை எதிர்ப்பது போராட்டத்தின் ஒரு பகுதியே தவிர, இதுவே ஒட்டுமொத்த போராட்டம் இல்லை என கூறுகிறீர்கள். அதன் கீழேயே உங்கள் போராட்டங்களை பட்டியல் இட்டுள்ளீர்கள். அதை சரியாக படித்து பாருங்கள். ஏர்டெல் எதிர்ப்பு, ஹிந்து பத்திரிக்கை எதிர்ப்பு, ஐநா அலுவலக முற்றுகை..... அருண்சோரியின் குற்றச்சாட்டுக்கு இதை விட வேறு ஆதாரம் எதற்கு?... ஏர்டெல்,இந்து பத்திரிக்கை எதிர்ப்புகளும் ஐநா எதிர்ப்பும்தான் இந்திய அரசு எதிர்ப்பா தோழர். இது தான் சரியான திசையா? இது மட்டும் இல்லை இந்த 3 ஆண்டுகளில் உங்கள் போராட்டங்களின் பட்டியலை எடுத்து பாருங்கள். அதில் உங்கள் முதன்மையான எதிரியாக நீங்கள் குறிப்பிடும் இந்தியாவை எதிர்த்த போராட்டங்கள் எத்தனை. பகுதி எதிரியாக குறிப்பிடும் அமெரிக்க, ஐ.நா., கம்பனிகளுக்கு எதிரான போராட்டங்கள் எத்தனை? எது அதிகம்... என்பது உங்களுக்கே புரியும். (பார்க்க: மே17 முகநூல்). சாதாரன நேரங்களில் இந்திய அரசை நோக்கியும், நெருக்கடி காலங்களில் பகுதி எதிரிகளை நோக்கியும் உள்ளதை பார்க்கலாம் (உதாரணம்: காலச்சுவடு எதிர்ப்பு, அருந்ததிராய் எதிர்ப்பு, சிவசங்கர் மேனன் எதிர்ப்பு, எம். எஸ். சுவாமினாதன் எதிர்ப்பு, ஐ.நா. அதிகாரிகள் எதிர்ப்பு, டைம்ஸ் ஆப் இன்டியா எதிர்ப்பு......என மிக நீண்ட பட்டியலை பார்க்கலாம். (பார்க்க: மே17 முகநூல்). இத்தனை போராட்டங்களுக்கு பின்னால் உள்ள உங்கள் உழைப்பு தெரிந்தாலும் இவை ஈழத்துகான போராட்டத்தில் எந்த அளவுக்கு இந்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுத்திருக்கும் என நினைக்கிறீர்கள். நீங்கள் எதிர்க்கும் ஐ.நா. அதிகாரிகளோ... சிவ சங்கர் மேனன்களோ... அரசின், ஆளும் வர்கங்களின் பிரதிநிதிகள். அவர்கள் இடத்தில் எந்த குப்பனும், சுப்பனும் இருந்தாலும் இதைதான் செய்திருப்பார்கள் என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாத நீங்கள்.. புவிசார் அரசியல் என்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றும் பேசிக்கொண்டிருகப்பது மிகுந்த நகைப்புக்குரியதாக உள்ளது தோழர். இந்திய எதிர்ப்பை பொருத்தவரை இந்தியாவை நேரடியாக எதிர்காமல் இந்தியாவை தாஜா பண்ணி வென்றெடுக்கும் செயல்திட்டத்தை கொண்டுள்ளீர்கள். (சீனா முற்றுகையில் இந்தியா....). அதன் தொடர்சியே உங்கள் இந்த அமெரிக்க எதிர்ப்பு. உங்கள் அடுத்த கேள்வி.... தோழர்.கார்த்திக் கட்டுரையுலிருந்து.... //….மேலும் எங்களின் ஐ.நா. அதிகாரிகளுக்கு எதிரான போராட்டம் குறித்து கேள்வியெழுப்பியிருக்கும் இவர் ஐ.நா. அமைப்பு என்பது உலக ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருக்கும் நிறுவனமாக இருந்தபோதும், தமிழீழ விடுதலையை முன்கொண்டு செல்ல உதவக் கூடிய போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான பன்னாட்டு விசாரணையை கொண்டு வருவதற்குரிய மையமாக இருக்கின்றது என்கிறார். என்ன சொல்ல வருகிறீர்கள் அருண்சோரி? ஐ.நா. அதிகாரிகள் என்ன குற்றம் செய்தாலும் அதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்கிறீர்களா?...// பதில்: நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் கார்த்திக்?. இப்போது மாணவர்கள் இந்திய அரசின் குற்றத்தை கேள்வி கேட்பது... முக்கியமா?. ஐநா அதிகாரிகளின் குற்றத்திற்கு கேள்வி கேட்பது முக்கியமா? எதை நோக்கிய போராட்டம் முக்கியம்?. அப்படியே மே17 ஐ.நா. அதிகாரிகளின் குற்றத்துக்கு கேள்வி கேட்டுவிட்டல் எல்லாம் சரியாகிவிடுமா?. ஐ.நா. அதிகாரிகள் மட்டும்தான் குற்றம் செய்தார்களா?. ஐ.நா. மன்றத்திற்கு தெரியாமல் தான் நடந்ததா இந்த இனப்படுகொலை?. இல்லை சர்வதேச சமூகங்களுக்கும் தெரியாமல் நடந்ததா?. எம் இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது அமெரிக்காவுக்கும், ஐ.நா. வுக்கும் தெரியாதா? சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டதை விட அதிகமான ஆதாரங்கள் அவர்களிடம் இல்லையா? செயற்கைகோள் உதவியுடன் ஒவ்வொறு நொடியும் மொத்த உலகையும் படம் பிடித்துக்கொன்டிருக்கும் வல்லரசுகளிடம் எம் இனம் அழிக்கப்பட்ட மொத்த நிகழ்வுகளுக்கான ஆதாரங்கள் இல்லை என நினைகிறீர்களா? இவ்வளவு இருந்தும் இன அழிப்பை தடுக்காத, எம் இனம் அழிப்பதற்கு எல்லாவகையிம் துனை நின்ற இந்த ஐ.நா. மன்றத்தையும் இந்த சர்வதேச சமூகத்தையும், சில ஐ.நா அதிகாரிகளை குற்றம் சொல்வதாலேயே நிர்பந்திக்க முடியும் என நீங்கள் நம்புவது உங்கள் அரசியல் புரிதலின்மையாலா? இந்திய அரசின் நலன் சார்ந்த நோக்கத்தாலா? ஐ.நா.வை அம்பலப்படுத்துவோம், முற்றுகை இடுவோம் என்கிறீர்கள். ஐ.நா.வை அம்பலப்படுத்த நாம் யார்?. சொந்தமாக நாடு உள்ளதா? அரசு உள்ளதா? தமிழ்நாட்டுக்கென ஐ.நா.வில் பிரதிநிதி உள்ளாரா? சொந்தமாக அரசு உள்ள நாடுகளே அங்கே ஒன்னும் கிழிக்க முடியாத போது, கண் எதிரே உள்ள துரோகியான இந்திய அரசை விடுத்து ஐ.நா.வை நோக்கி போராட முழங்குவதற்கு பின்னால் இந்திய அரசு நலன் தவிர்த்து வேறு என்ன இருக்க முடியும். ஏனெனில்... தமிழக அரசை நோக்கி போராடினால் அது ஒடுக்கும். இந்திய அரசை நோக்கி போராடினால் பெரிதாக கண்டுகொள்ளாது. ஏனெனில் அதற்கு பெரிதாக பாதிப்பு இராததால். அதே போல் ஈழ விடயத்தில் இன்றய சூழலில் ஐ.நாவையும், அமெரிக்காவையும் எதிர்ப்பது, பெப்சியையும், ஏர்டெல்லையும் எதிர்ப்பது இந்திய அரசின் மீதான நெருக்கடியை குறைத்து இந்தியாவுக்கு நலன் சேர்க்காதா? உங்கள் அடுத்த கேள்வி....... கார்த்திக் கட்டுரையிலிருந்து.... //.....மேலும் ஐ.நாவிற்கு எதிரான போராட்டத்தை புலம்பெயர் சமூகம் தான் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ஐ.நாவின் போர்க் குற்றம் குறித்த உண்மைகளை முதன்முதலில் மிகப்பெரிய ஆய்வுக்கு உட்படுத்தி, ஒவ்வொன்றுக்கும் தெளிவான ஆதாரங்களோடு அதை வெளிக்கொண்டு வந்தது யார்? அது குறித்த புரிதல்களை மக்களுக்கு ஏற்படுத்த போராட்டங்கள் செய்யாமல் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருந்தால் அது தமிழக மக்களிடமும் சென்று சேர்ந்துவிடுமா என்ன? இதில் கவனிக்க வேண்டிய செய்தி - நாங்கள் ஐ.நாவிற்கு எதிரான போராட்டம் செய்தது பிப்ரவரி 12 மாணவர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன் என்பது அருண்சோரிக்கு தெரியாதா இல்லை அதை வசதியாக மறந்துவிட்டாரா?.....// பதில்: அடப்போங்கப்பா... விட்டா சேனல் 4 க்கு அந்த ஆவண‌பட ஆதாரங்களை எல்லாம் கொடுத்ததே நாங்கதான் என்ற அளவுக்கு பேசினா என்னத்த‌பண்ணுவது. எந்த காலகட்டத்தில் எந்த முழக்கத்தை வெக்கணும்னு கூட தெரியல... இந்திய அரசுக்கு வரிகொடா இயக்கம் நடத்துவோம் என்கிற அளவுக்கு மாணவர்கள் முழக்கங்களை வைத்துக்கொண்டு இருக்க.... அடுத்து இந்திய கொடியை எரிப்போம் என்கிற அளவுக்கு போய்க் கொண்டிருப்பவர்களிடம் போய் பெப்சியை புறக்கணிப்போம்... ஏர்டெல்லை எதிர்ப்போம்னு பேசிக்கிட்டு.... எங்கள வந்து வெற்று அறிக்கை விடுவதாக சொல்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது. தோழர் களத்துல இருக்கீங்க இல்ல.... பிப்ரவரி 12 நடத்தியதை மறந்துட்டீங்களா? என கேட்டுள்ளிர்கள். உங்கள் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.திருமுருகன் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் தான் ஏர்டெல் புறக்கணிப்பு, பெப்சி புறக்கணிப்பு பற்றி பேசியதை நீங்க மறந்துட்டீங்களா தோழர்?. இதற்கு உங்க நேர்மையான பதில் என்ன தோழர்?. உங்கள் அடுத்த கேள்வி....... கார்த்திக் கட்டுரையிலிருந்து.... //.....மாணவர்கள் போராட்டத்தை மே 17 திசை திருப்புவதாக குற்றம் சுமத்தியிருக்கும் அருண்சோரியிடம் நாங்கள் கேட்கவேண்டிய கேள்விகள் பல விடயங்களில் இருக்கிறது. இருப்பினும் இப்பொழுது அவர் மாணவர் போராட்டத்தை மையப்படுத்தியே எங்களின் மேல் குற்றம் சுமத்தியதால் நானும் மாணவர் போராட்டம் தொடர்பாகவே அவரிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். முதன்முதலில் லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் உட்கார்ந்த பொழுது முதல் நாள் அன்றே “ஆஈசூஃப் வளாகத்திலிருந்து இடத்தை மாற்ற வேண்டாம்; இன்றே போராடி கைதாவோம். நீங்கள் கைதானால் தமிழகத்தில் மாபெரும் புரட்சி வெடிக்கும்” என்று போராட்டம் மற்ற மாணவர்களுக்கு தெரியும் முன்பே ஆலோசனை கூறி நீர்த்துப்போக செய்ய முயற்சித்ததின் நோக்கம் என்ன?....// பதில்: அங்கே உள்ள சூழல் கருதியே இடத்தை மாற்ற வேண்டாம் என்றோம். மாணவர்கள் உட்கார்ந்த இடம் கல்லூரி வளாகம் அருகில்... அங்கே கூடியிருந்த மாணவர் கூட்டம். தமிழக அரசின் அன்றைய ஈழ ஆதரவு நிலை என அனைத்தும் கருத்தில் கொண்டு பார்த்தால் அந்த இடத்தில் காவல்துறை கைது செய்ய முயற்ச்சிக்காது என்பதால்தான் அங்கேயே இருக்க சொன்னோம். அதுமட்டுமல்ல சுற்றிலும் பல கல்லூரிகள் நடக்கும் தூரத்தில் உள்ளது... மாணவர்களை அணிதிரட்ட வசதியாக இருக்கும். எதிரிலே இலங்கை துனை தூதரக கட்டிடம்.. என பல காரணங்கள். அது சரி தோழர்... மாணவர்களை அவசரமாக கோயம்பேடுக்கு இடத்தை மாற்றியத்ற்கான‌ காரணத்தை நீங்கள் சொல்லவே இல்லையே ..... உங்கள் அடுத்த கேள்வி....... தோழர்.கார்த்திக் கட்டுரையிலிருந்து.... //.......மாணவர்கள் போராட்டத்திற்கு பல இயக்கங்கள், கட்சிகள் உதவி வருகின்றன. யார் பெயரும் வெளியில் தெரியாது. அதே போல் தமிழ்நாடு மக்கள் கட்சி மதுரை போராட்டத்தில் பங்கு கொண்டது. அவர்களுக்கு 14ம் தேதி பேரணிக்கு சுவரொட்டி ஓட்டும் பணி கொடுக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் ஐ.நாவில் அமெரிக்கத் தீர்மானத்தை அயோக்கிய தீர்மானம் என்று மறுத்த பொழுது சுவரொட்டி போட்டவர்கள் ஐ.நா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று சுவரொட்டி போட்டது ஏன்? (கடைசி நேரத்தில் கவனித்த மாணவர்கள் அந்த பகுதியை கிழித்துவிட்டு ஒட்டினர்) அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து நீங்கள் போட்ட சுவரொட்டியை உங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் போட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பியவுடன் அந்த கேள்விக்கு கூட பதில் சொல்லாமல் அவசர அவசரமாக அந்தப் படத்தை நீக்கியது ஏன்? உங்களிடம் நேர்மை இருந்தால் அதை ஏன் நீக்க வேண்டும்? .....// பதில்: அனைத்து கல்லூரி மாணவர்கள் போட்ட சுவரொட்டியை பற்றி விளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மாணவர்களின் அந்த சுவரொட்டியில் மாணவர்கள் தெளிவாக போட்டுள்ள பொதுவாக்கெடுப்பு, தனி ஈழம் போன்ற கோரிக்கைகளை ஆதரிக்க எங்கள் முகநூலில் அதை போட்டோம். அதேபோல் அமெரிக்க தீர்மானம் தொடர்பாக அவர்களுக்கு விளக்கினோம். அந்த மாணவர்களின் கோரிக்கை தனி ஈழம், பொதுவாக்கெடுப்பு என மிக தெளிவாக உள்ளது. அந்த கோரிக்கைகளையும் அவர்கள் இந்திய அரசை நோக்கியே (கொக்ககோலா பாட்டிலை முற்றுகையிடாமல்) வைத்துள்ளார்கள். அவர்கள் கோரிக்கையும், நோக்கமும், அமெரிக்க தீர்மானத்தில் உள்ளதா என்பதே விடயம். அதில் இல்லை என்பதால் தான் அவர்களே கிழித்துவிட்டு ஒட்டியிருந்தார்கள். அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். ஆனால் அந்த சுவரொட்டியில் உள்ள பொதுவாக்கெடுப்பு, தனி ஈழம் போன்ற விடயங்களை விடுத்து ஆதரி என்ற வார்த்தையும், முகநூலில் இருந்த தமிழ்நாடு மக்கள் கட்சி என்ற வார்த்தையையும் மட்டும் அடிக்கோடிட்டு எங்கள் கட்சிக்கெதிராக அரசியலாக்க நினக்கும் உங்கள் ஆர்வம் புரிகிறது தோழர். எந்த நேரத்தில் யாரை எதிர்க்கவேண்டும். என்ன போராட்டம் நடத்தவேண்டும் என தெரியாமல் களமாடிக்கொண்டிருக்கும் நீங்கள், புதிதாக‌ களத்துக்கு வந்த மாணவர்களை குறை செல்வதிலும், எங்கள் மீது அவதூறு பரப்புவதிலும் காட்டும் கவனத்தில் பாதியையாவது தங்கள் செய்யவேண்டிய போராட்டத்தின்மீது வைத்திருந்தால் எங்களுக்கு கட்டுரை எழுத தேவை இல்லாமலே போயிருக்கும். உங்கள் அடுத்த கேள்வி....... தோழர்.கார்த்திக் கட்டுரையிலிருந்து.... //......லயோலா மாணவர்களின் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்து போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பை உடைத்து, மாணவர் போராட்டத்தை உடைக்க ‘தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு’ என்ற குழுவை நீங்களும் உங்கள் கட்சியும் உருவாக்க வேண்டிய அவசியம் என்ன?....// பதில்: எல்லா மாணவர் போராட்டங்களின் ஆரம்பக் கட்டத்திலும் மாணவர்கள் பல்வேறு அமைப்புகளாகவும், பல்வேறு குழுக்களாகவும், கூட்டமைப்புகளாகவும் அவர்களின் அரசியல் புரிதல்களுக்கு ஏற்ப அணிதிரள்வது அவர்களின் சனநாயக உரிமை தோழர். இதுதான் சமூக இயங்கியல். போராட்டக்களத்தில் இனைந்து செயல்படும்போதுதான் அவர்களுக்கு முழுமையான அரசியல் புரிதல் வரும். அவர்களுக்குள் இருக்கும் சிறு சிறு முரண்பாடுகள் மறையும். ஒத்தக்கருத்துள்ள குழுக்கள், கூட்டமைப்புக்களுக்கிடையே இனைதல் நடைபெரும். கடைசியாக சரியான அரசியலை முன்னெடுக்கும் ஒரு அமைப்பின்கீழ் பெரும்பாமன்மையினர் அணிதிரள்வர்.... அனைத்தும் போராட்ட வளர்ச்சிப்போக்கில் பலக் கட்டங்கள் தோழர். பொதுவாக ஒரு கூட்டமைப்பு என்பது பல்வேறு அமைப்புகள் சேர்ந்து உருவாக்குவதுதான். ஆனால் ஒரு நல்ல நோக்கத்திற்காக 8 லயோலா மாணவர்களால் உருவாக்கப்பட்ட மாணவர் கூட்டமைப்பு என்ற அடையாளத்தை, அந்த பெயரை அந்த நல்ல நோக்கங்களுக்காக எங்கள் மாணவர் அமைப்பும் ஆதரித்தது. ஆனால் அந்த லயோலா மாணவர்கள் கைது செய்யப்பட்டதும் அந்த லயோலா மாணவர்களால் உருவாக்கப்பட்ட அந்த அடையாளத்தை கைப்பற்றும் நோக்குடன் எந்த‌ மாணவர் அமைப்பிலும் இல்லாத மே17 தோழர் சிபியை வைத்து அந்த மாணவர் கூட்டமைப்பு என்ற அடையாள‌த்தில், பெயரில் தனியாக பத்திரிக்கையளர் ச‌ந்திப்பை நடத்திய‌ நீங்கள் (மே17) எந்த அடிப்படையில் எங்களை கேள்வி கேட்கிறீர்கள் தோழர். மே17 இயக்கத்தின் சுயந‌ல அரசியலுக்காக நீங்கள் ஆரம்பித்த இந்த பணி, அடத்தடுத்து வெவ்வேறு மாணவர்களை, அந்த மாணவர் கூட்டமைப்பு என்ற அடையாள‌த்தின் ஒருங்கினைப்பாளர்களாக முன்னிருத்தி தொடர் பத்திரிக்கையாளர் சந்திப்புகள் நடத்தி பத்திரிக்கையாளர்களே கடுமையாக விமர்சிக்கும் நிலைக்கு ஆளாக்கியது நீங்களா இல்லை நாங்களா தோழர். மாணவர் போராட்டங்கள் வீரியமாகிக் கொண்டிருந்த அந்த சூழலில், புதிதாக மாணவர்கள் அலை அலையாய் களத்துக்கு வந்த அந்த சூழலில் அவர்களை அணிதிரட்டி இந்திய அரசுக்கு எதிரான ஒரு வலிமையான மாணவர் போராட்டமாக முன்னெடுத்திருக்க வேண்டிய அந்த மாணவர்களை, மாணவர் கூட்டமைப்பு என்ற அடையாளத்தை கைப்பற்றும் போராட்டத்தை தங்களுக்குள் நடத்தும் சூழலுக்கு தள்ளிய நீங்கள், இந்த அடையாள‌ அரசியலில் போட்டியில் பங்கேற்காமல் களத்துக்கு வந்த மாணவர்களை அணிதிரட்டும் பணியை சரியாக செய்த... செய்துக்கொண்டிருக்கின்ற எங்கள மாணவர் அமைப்பை பற்றி பேச என்ன அடிப்படை இருக்கிறது தோழர். ஆனால் ஒரு விடயம். மாண‌வர்கள் மத்தியில் அந்த கீழ்தர அரசியலை செய்தவர்கள் அம்பலமாகி வருவது தங்களுக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். உங்கள் அடுத்த கேள்வி....... தோழர்.கார்த்திக் கட்டுரையிலிருந்து.... //.....மாணவர் போராட்டத்தில் எந்த அமைப்பும் தலையிடக்கூடாது என்ற உயர்ந்த நோக்குடன் செயல்படும் நீங்கள், உங்கள் கட்சியில் இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திவ்யாவையும், கட்சியின் மாணவர் அமைப்பில் இருக்கும் இளையராஜாவையும் தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர்களாக முன்னிறுத்துவது ஏன்?.....// மாணவர்கள் அரசியல் கட்சிகளிலும், இயக்கங்களிலும் இருப்பது அவர்களின் சனநாயக உரிமை. அது ஆக்கபூர்வமான விடயமும் கூட. அப்படி அரசியல் இயக்கங்களில் இருப்பவர்கள் போரட்டக்களத்துக்கு வருவதும் அவர்கள் உரிமை. இன்றைக்கு போராட்டக் களத்துக்கு வந்த மாணவர்கள் பலபேர் பலவித அரசியல் பின்புலம் உள்ள‌வர்கள்தான். தங்கள் அமைப்பிலும் கூட மாண‌வர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது...இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் ஆட்சியை பிடித்த கருணாநிதியின் குரலா? இல்லை இந்திய ஆளும் வர்க்கத்தின் குரலா? என்பது எங்களுக்கு சரியாக புரியவில்லை. இதில் தங்கள் நிலைப்பாடு என்ன தோழர்? இருப்பினும், தோழர். திவ்யாவும், தோழர்.இளையராசாவும் பல ஆண்டுகள் மாணவர் போராட்டத்தை முன்னெடுத்த அணுபவம் உள்ளவர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் தோழர். அதேபோல் தோழ‌ர் சிபி அவர்களை மே17 ஏன் முன்னிறுத்தியது என கேட்க மாட்டேன். ஏனெனில் மாண‌வர்கள் அரசியல் களத்துக்கு வர வேண்டும். அரசியல் படவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஒரு கட்சி முன்னிருத்தும் ஆட்களை அப்படியே கண்ணை மூடிக்கொன்டு ஏற்கும் அளவுக்கு அறியாமையில் இன்றைக்கு களத்தில் உள்ள மாண‌வர்கள் இல்லை. டெசோ அமைப்பு முதல்... பல்வேறு அமைப்புகள் அவர்கள் போராட்டத்தை கைப்பற்ற நினைத்தும் முடியாமல் அசிங்கப்பட்டதுதான் இன்றைய சூழல். அப்படியே முன்னிறுத்தப்பட்டாலும் சரியான ஆட்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தொடர்வதும், தவறான ஆட்கள் தூக்கி எறியப்படுவதும் தொடர்சியாக மாண‌வர்களின் போராட்டத்தையும் பேட்டிகளையும் பார்திருப்பவர் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.... உங்கள் அடுத்த கேள்வி....... கார்த்திக் கட்டுரையிலிருந்து.... //.....எங்களை இந்தியாவை எதிர்த்துப் போராடவில்லை என்று குறைசொல்லும் நீங்கள், இந்தியாவின் தேர்தல் அரசியலை ஏற்றுக்கொண்டு கட்சி தொடங்கிய நீங்கள், இந்தியாவை எதிர்த்து செய்த போராட்டங்கள் தான் என்ன?.....// எங்கள் கட்சியை பற்றிக் கேட்டுள்ளதால் சில விடயங்களை பற்றி கூற விரும்புகிறேன். எங்கள் கட்சியை பொருத்தவறை உங்களுக்கு பிடிக்காத ம்ள் அரசியல் பின்புலம் முதல், தமிழ்தேச அரசியல் வரை பல்வேறு அரசியல் பின்புலத்திலிருந்து 1முதல் 15 ஆண்டுகள் வரை களத்தில் பணியாற்றிய பல்வேறு அமைப்புகள், தமிழ்தேச விடுதலையையும், மக்களுக்கான சனநாயகத்தையும் முதன்மை கொள்கை முழக்கமாக‌ முன்னிறுத்தி அதன் அடிப்படையில் இனைந்து உருவாக்கிய கட்சியாகும். எங்கள் கொள்கை முழக்கத்தை வெண்றெடுக்க மக்களுக்கு விரோதமில்லாத எந்த வித அரசியல் வடிவத்தையும் எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் கட்சியும் சரி, எங்களுடைய முந்தைய வடிவத்திலும் சரி இந்திய அரசுக்கு எதிரான எங்களுடைய தொடர்ச்சியான போராட்டங்களை களத்தில் தொடர்ச்சியாக பணியாற்றும் அனைவரும் அறிந்ததே. இனையதளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் உங்களுக்கு அத
Antony
//இதுமட்டுமில்லாமல் மாணவர் போராடும் போது ஆதரவு தெரிவிக்க வந்த அரசியல் கட்சியினரை இது மாணவர் போராட்டம், இதில் அரசியல் கட்சிகள் தலையிடக் கூடாது என்று தமீழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அதாவது தமிழ்நாடு மக்கள் கட்சியின் இணை செயலாளர் திவ்யா நேரிலும் பத்திரிக்கை வாயிலாகவும் பலமுறை சொன்னார். அவரே தமிழ்நாடு மக்கள் கட்சியின் இணை செயலாளராக இருந்து கொண்டு அங்கே வேறு அரசியல் கட்சியினர் யாரையும் உள்ளே விடாமல் தடுத்தது எதனால்?? அல்லது வேறு அரசியல் கட்சியினர் வந்தால் தங்களுக்கு பெயர் கிடைக்காது என்று நினைத்தார்களா என்று தெரியவில்லை. அது தமிழ்நாடு மக்கள் கட்சிக்கும் அருண்சோரிக்குமே தெரியும்.// இதுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டாங்க. ஆனா, சம்பந்தமில்லாம ஏதாவது ஒரு கட்டுரையை அப்படியே வெட்டி ஒட்டுவாங்க. யப்பா சாமிகளா! அருண் சோரி வகையறாக்களா! இந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கய்யா. அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவர் அரசியல் கட்சிகள் வரக்கூடாதுன்னு எப்படிய்யா சொல்ல முடியும்? அப்படினா, அது ஒங்க அரசியல் கட்சியோட கிளைப்பிரிவா? ஏற்கனவே தமிழ்நாடு மாணவர் இயக்கம் அப்படின்னு ஒரு பிரிவு வச்சிருக்கிற நீங்க ஏன்யா இன்னொரு பிரிவு தொடங்குறீங்க?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.