ஒரு முன்னோட்டம்!

1982-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி! தமிழ்நாட்டில் - அன்றைய தினம், ஒரு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி - இந்தியா முழுவதையுமே குலுக்க ஆரம்பித்தது! திருநெல்வேலி மாவட்டத்திலே மீனாட்சிபுரம் என்ற கிராமத்தைச் சார்ந்த சுமார் 1000 தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த சாதிக் கொடுமைகளால், இந்து மதத்துக்கே முழுக்குப் போட்டுவிட்டு அந்த தேதியில்தான் இஸ்லாம் மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்!

மத்தியில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் - தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பைத் துவக்கிடும் முயற்சிகளில் நாடு முழுவதும் தீவிரம் காட்டி செயல்பட்டனர். என்றாலும், அவர்கள் தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை!

அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு - இந்த மதமாற்றம் ஒரு வாய்ப்பாகப் பயன்பட்டது. டில்லியிலிருந்து - பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இந்தக் கிராமத்திலே முகாமடிக்க ஆரம்பித்தனர்! மத மாற்றம் ஒரு 'தேசிய அதிர்ச்சியாக' பிரபலப்படுத்தப் பட்டது.

ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல; அது ஒரு தத்துவம்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் - அவசர நிலை காலத்தில் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டிருந்தது.

ஆனால் - அதே அவசர நிலை காலத்தில் தமிழ் நாட்டில் பார்ப்பன ஆலோசகர் ஆட்சி நடந்தபோது ஆர்.எஸ்.எஸ் தத்துவம்தான் இங்கே ஆட்சி புரிந்தது! பார்ப்பன சங்கராச்சாரி ஆட்சிதான் தமிழ் நாட்டிலேயே கோலோச்சியது.

இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் இந்தியாவின் சமூக அமைப்பே ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வலியுறுத்தும் வர்ணாஸ்ரம தர்மத்தை சாதிய வடிவத்தில் அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருக்கிறது. இதை முழுமைப்படுத்திட வேண்டும். இந்து நாடே ஒரு முழுமையான இந்து ராஷ்டிரமாக்கப்பட வேண்டும் என்ற முனைப்போடுதான் ஆர்.எஸ்.எஸ். தனது செயல் திட்டங்களை முடுக்கி விடுகிறது.

கெஞ்சினால் மிஞ்சுவதும் , மிஞ்சினால் கெஞ்சுவதுமான இந்த தந்திரக்காரர்கள்; தங்கள் அமைப்புக்கு பெரும் தலைவர்களின் ஆதரவெல்லாம் இருப்பதாக அப்பட்டமான பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கி- அதன் மூலம் அப்பாவிகளை மயக்கப் பார்ப்பது இவர்களின் நடைமுறை தந்திரம்!

இந்தக் கூட்டத்தின் வரலாற்றுக் கலாச்சாரமே இப்படித்தான் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டமுடியும்.

இதோ ஒரு உதாரணத்தை சுட்டிக் காட்டுகிறோம். மத்தியில் ஆட்சிக் கட்டிலுக்கு வந்த ஜனதா கட்சி உடைந்து சிதறியதற்கு காரணமாயிருந்தது இரட்டை உறுப்பினர் (Duel Membership) பிரச்சனை! அதாவது ஜனதா கட்சியிலே அங்கம் வகிப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஆகலாமா? என்ற பிரச்சனை. இது அப்போது மட்டும் ஏற்பட்டதல்ல. 1934-ம் ஆண்டிலேயே அந்தப் பிரச்சனை காங்கிரஸ் கட்சியிலேயே ஏற்பட்டிருக்கிறது!

1934-ம் ஆண்டிலேயே அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஒரு தீர்மாணத்தையே நிறைவேற்றியது; என்ன அந்தத் தீர்மானம்?

காங்கிரஸ் கட்சியிலே உறுப்பினராக இருக்கக் கூடியவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக இருக்கக் கூடாது.

இந்தத் தீர்மானம் ஆர்.எஸ்.எஸ். காரர்களின் காங்கிரஸ் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தியது! உடனே காந்தியாருக்கு வலைவீசும் தந்திரங்களை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் மேற் கொண்டார்கள். அதே ஆண்டு 'வார்தா'விலே ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்தது! அதைப் பார்வையிட வரவேண்டும் என்று காந்தியாரை அழைத்தார்கள். ஹெட்கேவர் - என்ற நாக்பூர் பார்ப்பனர், காந்தியாரை நேரில் போய் சந்தித்துப் பேசினார்! காந்தியாரும் முகாமைப் பார்வையிட்டார்!

உடனே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்கள் பிரச்சார சாதனங்கள் மூலம் திட்டமிட்ட ஒரு கருத்தைப் பரப்பினர். "ஆர்.எஸ்.எஸ். சேவைகளை காந்தி அடிகள் நேரில் பார்த்து பாராட்டினார்." என்பதே அந்தப் பிரச்சாரம்!

ஆனால் - இது உண்மைக் கலப்பில்லாத பொய்ப் பிரச்சாரம்! காந்தியார் - பாராட்டு எதுவுமே தெரிவிக்கவில்லை; அப்படி தெரிவித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அது மட்டுமல்ல; காங்கிரஸ்காரர்கள் - ஆர்.எஸ்.எஸ். சில் சேரத் தடைவிதித்து காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணமும் அப்படியே இருக்கட்டும் என்றார் காந்தியார். காந்தியாரோடு 'வார்தா' பயிற்சி முகாமுக்கு உடன் சென்ற சீடர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நல்ல சேவைகளை செய்கிறார்கள் என்று காந்தியாரிடம் சொன்னபோது - காந்தியார் அளித்த பதில் என்ன தெரியுமோ?

"ஹிட்லரின் நாசிப்படையும் முசோலினியின் பாசிசப் படையும் இதே போல்தான் சேவை செய்தது என்பதை மறந்துவிட வேண்டாம்." இப்படி ஹிட்லர், முசோலினியின் நாசிச, பாசிசப் படைகளோடு , ஆர்.எஸ்.எஸ்ஸை ஒப்பிட்டுக் கருத்துக் கூறிய காந்தியாரை தங்களின் ஆதரவாளர் போல் சித்தரித்துக் காட்டிய பொய்யர்களின் கூடாரம்தான் ஆர்.எஸ்.எஸ்.!

"Mahatma Gandhi, the last Phase" என்ற காந்தியாரின் சுயசரிதையை அவரது உதவியாளர் பியாரிலால் (Pyarilal) எழுதியிருக்கிறார். அந்த நூலின் 440வது பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பற்றி காந்தியார் சொன்ன மேற்கண்ட கருத்துக்கள் எடுத்துக் காட்டப் பட்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் காரர்களின் அரசியல் அமைப்பாக முன்னால் ஜனசங்கமான, இந்நாள் பாரதீய ஜனதா கட்சி 1982 ஏப்ரல் 14-ம் தேதி அய்தராபாத் நகரத்திலே ஒரு ஊர்வலம் நடத்தியது. அது என்ன ஊர்வலம் தெரியுமா?

டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாளையட்டி - சமூக சமத்துவ நாள் என்ற பெயரில் அவர்கள் ஊர்வலம் நடத்தினார்கள்.

குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து - ரத்த ஆறை ஓடவிட்ட அதே கூட்டம்தான் வெட்கம் இல்லாமல் அம்பேத்கார் பிறந்த நாள் ஊர்வலம் எடுத்து தாழ்த்தப் பட்டோர்களுக்கு வலைவீச்சு நடத்த திட்டமிடப்பட்டது.

பார்ப்பனீயத்தையும் இந்து ராஷ்டிரத்தையும் ஆழக்குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்த அந்த மாமேதைக்கு (அம்பேத்காருக்கு), அறிவு நாணயமற்ற இந்த வெட்கம் கெட்டவர்கள் ஊர்வலம் எடுப்பதற்கு என்ன யோக்கிதை இருக்கிறது?

1992-ல் இவர்கள் அயோத்தியில் பாபர் மசூதியை இடிப்பதற்கு தேர்ந்தெடுத்த நாளே - - டாக்டர் அம்பேத்கார் நினைவு நாளான டிசம்பர் 6-ம் தேதிதான்!

இந்து மதத்தின் முடை நாற்றத்திலிருந்து தனது பல்லாயிரக் கணக்கான தொண்டர்களை விடுவித்துக் கொண்டு புத்த மார்க்கத்திலே இணைந்தவர் டாக்டர் அம்பேத்கார் என்பது இவர்களுக்குத் தெரியாதது அல்ல; ஆனாலும் - நாட்டிலே மற்ற மதத்தவர்களோடு மோதி, உயிர் பலியாவதற்கு தாழ்த்தப்பட்ட தோழர்களின் படை அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்ற ஒரே காரணத்தால் அந்தக் கூட்டம் இத்தகைய நாடகங்களை நடத்துகிறது.

இவர்கள் 'அம்பேத்கார் ஆதரவு நாடகத்தை' நாடு முழுவதும் வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டும் என்பதற்காக - அனுமதிக்கப்படாத வீதிகளில் ஊர்வலமாகப் போய் - கல்வீச்சு, வன்முறைக் கலவரங்களை நடத்தி கைதாகி இருக்கிறார்கள். கைது கலவரம் என்கிற சூழ்நிலை வந்தபிறகு அவைகள் கட்டாயமாக செய்திகளாக்கப்படும் நிலை உருவாகி விடுகிறது அல்லவா? அதுதான் அவர்களது நோக்கம். 1966-ம் ஆண்டு இந்தக் கூட்டத்தின் சதி வலையிலே மறைந்த ஜெயப்பிரகாசரும் (ஜே.பி) சிக்கினார். ஆனால், இரண்டே ஆண்டுகளில் அவர்களின் சுயரூபத்தை ஜெயப்பிரகாசர் உணர்ந்து கொண்டுவிட்டார்.

1968-ம் ஆண்டில் ஜெயப்பிரகாசர் இவ்வாறு பிரகடனப்படுத்தினார். "ஆர்.எஸ்.எஸ். ஒரு வகுப்பு வாத பாசிச இயக்கம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்." புது டில்லியிலே 1968-ம் ஆண்டு வகுப்பு வாத எதிர்ப்பு இரண்டாவது தேசிய மாநாட்டில் கலந்துக் கொண்டு, ஜெயப்பிரகாசர் நாராயணன் பேசிய பொழுது இவ்வாறு தெரிவித்தார். அவரது உள்ளத்தின் உணர்வுகள் பீறிட்டுக் கிளம்பின. "ஜனசங்கம் தன்னை ஒரு மதச்சார்பற்ற அமைப்பு என்று கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால், இவர்கள் ஆர்.எஸ்.எஸ். எனும் எந்திரத்தால் இயக்கப் படுகிறவர்களாகவே இருக்கிறார்கள். அந்த ஆர்.எஸ்.எஸ். முடிச்சுக்களிலிருந்து ஜனசங்கத்தினர் தங்களை முழுமையாக வெட்டிக் கொள்ளாதவரை இவர்கள் மதச்சார்பின்மை கொள்கைக்காரர்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. (ஆதாரம் 'Secular Democracy' ஆண்டு மலர் 1969)

மயிலிடம் இறகுக்கு கெஞ்சுவது போல் வகுப்பு வாதத்தை கைவிடுங்கள் என்று ஆர்.எஸ்.எஸ். காரர்களிடம் மனு போட்டு, மனு போட்டு மனம் சலித்த ஜெயப்பிரகாஷ்... இறுதியில் அன்றைய பிரதமர் மெரார்ஜி ஒரு கடிதம் எழுதினார். 1972-ம் ஆண்டு - மார்ச் 2-ம் தேதியிட்டு ஜெயப்பிரகாஷ் நாராயண் அன்றைய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

"அரசாங்கத்தில் - தலைமையைக் கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை என்னிடம் பல நண்பர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் தங்களை ஒரு கலாச்சார இயக்கம் என்று சொல்லிக் கொண்டு அந்த முகமூடியோடு அரசியலில் செல்வாக்கு பெற விரும்புவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் இந்து ராஷ்டிரக் கொள்கையை நான் எப்போதுமே கண்டித்து வந்திருக்கிறேன். அது மிகவும் ஆபத்தான தத்துவம். நமது - பல்வேறு கலாச்சாரத்தைக் கொண்ட இந்திய நாட்டுக்கு நேர் எதிரான தத்துவம். (I have always condemned the Hindu Rastravad of R.S.S. because it is a dangerous idelogy and is contradictoy to our ideal of composite indian Nation) என்று ஜெயப்பிரகாஷ் நாராயண் அந்தக் கடிதத்தில் தனது கருத்துக்களை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியிருந்தார்!

ஜெயப்பிரகாசர் உளம் புழுங்கி - அன்றைய பிரதமர் மெரார்ஜிக்கு எழுதிய கடிதத்தை - மெரார்ஜியிடம் அனுப்புவதற்கு முன்பு, அந்தக் கடைசி நேரத்தில்கூட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஜெ.பி.யை சூழ்ந்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். பற்றி சொல்லப்பட்டிருக்கிற வாசகங்களை அகற்றுமாறு வறுபுறுத்தினர்! ஆனால், ஜெ.பி. அதற்கு பணிந்து விடவில்லை. ஜெ.பி. கடிதத்தின் கடைசி வரிகள் இப்படி எச்சரிக்கையோடு முடிந்தது. "நீங்கள் இந்த நாட்டின் பிரதமர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வகுப்பு வெறியை மாற்ற வேண்டியது உங்கள் கடமை. நீங்கள் அதைச் செய்யாவிட்டால், நாட்டில் உள்ள சிந்தனையாளர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்த்துப் போராடி அதைச் செய்ய வேண்டிய நிலை வரும்." (ஜெ.பி. கடிதத்தின் ஆதாரம் : 'தினமான்' இந்தி வார ஏடு - ஏப்ரல் 8 - 1979.)

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போதுகூட, அவரிடம் இவர்கள் எத்தனையோ கருணை விண்ணப்பங்களைப் போட்டுப் பார்தார்கள்! 1948-ம் ஆண்டு - அப்போது ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டிருந்த நேரம்: பிரதமர் ஜவஹர்லால் நேருவை நேரில் சந்தித்து எதைச் சொல்லியாவது தடையை நீக்கிவிட வேண்டும் என்று எத்தனையோ முறை தீவிர முயற்சிகளில் - அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர் முயன்று பார்த்தார்.

'என்னை சந்திக்க முயற்சிப்பதில் பயனே இல்லை' என்பதை திட்டவட்டமாக தெரிவித்து தானே கையெழுத்திட்ட ஒரு கடிதத்தையும் நேரு அனுப்பினார். இந்த கடிதத்தில் இருந்த வாசகங்கள் இதுதான்...

"கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகள் பற்றி ஏராளமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. நீங்கள் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருக்கின்ற சமாதானங்கள் அதற்கு சரியான பதில் ஆகமுடியாது. நீங்கள் உங்கள் கொள்கையாக எதையெல்லாம் அறிவித்திருக்கிறீர்களோ, அதற்கும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. இந்திய பாராளுமன்றத்தின் கொள்கையையும், அமைய இருக்கும் அரசியல் சட்டத்தையும், எதிர்ப்பதுதான் உங்கள் வன்மையான கொள்கை. எங்களுக்கு கிடைத்திருக்கிற தகவலின்படி,
உங்கள் அமைப்பின் நடவடிக்கைகள் தேசவிரோதமானவை; சூழ்ச்சியானவை; வன்முறையானவை. இதற்கு எதிராக நீங்கள் தரும் உறுதியை மட்டும் நான் நம்பிவிட முடியாது."

இவ்வாறு முகத்தில் அறைந்தது போல் பதில் எழுதினார் பண்டிதர் நேரு.

அதற்குப் பிறகும் அரசாங்கத்திடம் மன்றாடினவர்கள் கலாச்சார அமைப்பாகவே செயல்படுவோம் என்று உறுதி கூறி புதிய சட்ட விதிகளை ஏற்படுத்திக் கொளவதாகவும் எழுதிக் கொடுத்தனர். அதற்குப் பிறகு 1949-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி தடை நீக்கப்பட்டது.

ஆனால், அவர்களின் போக்கில் ஏதேணும் மாற்றம் இருந்ததா என்றால் இல்லை!
அவர்களின் கலவரங்கள் தொடர்ந்து நீடிக்கத்தான் செய்தன; அதைத் தொடர்ந்து அவசர நிலை காலத்தில் 1974-ம் ஆண்டு மீண்டும் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த தடை நீங்கியது.

ஜனதா கட்சி ஆட்சி பீடம் ஏறியவுடன் அதுவும் மெரார்ஜி தேசாய் பிரதமர் ஆனவுடன் தங்களுக்கு புதிய உலகம் பிறந்துவிட்டதாகவே கருதி அவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்.

அவசர நிலையை எதிர்த்துப் போராடிய மாவீரர்கள் நாங்களே என்று மார் தட்டிக் கொண்டார்கள். அரசியல் சட்டம் - குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்து- அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த பிரகடனம்தான் 'அவசர நிலை' என்பதாகும்.

அப்போது, அதன் தலைவராக இருந்த தேவரஸ் உடனே நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை துவக்கினார். நாட்டில் உள்ள பெரும் பண முதலைகளை எல்லாம் சந்தித்தார்; இருண்ட காலத்திலிருந்து உங்களை விடுவித்தது நாங்கள்தான் என்று, அவசர நிலையை எதிர்த்து இவர்கள் மட்டுமே போராடியது போல் ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டனர்.

ஜெயப்பிரகாசரின் முழு ஆசீர்வாதம் இவர்களுக்கு இருப்பதாகவே சொல்லிக் கொண்டனர். பெரும் பணக்காரர்கள் எல்லாம் நிதியை அள்ளிக் குவித்தனர்! அந்த நேரத்தில்தான் தேவரஸ் சென்னைக்கு வருகை தந்தார்.

ஜனதா ஆட்சியைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் அமைப்புக்கு உயிரூட்டும் திட்டமிட்ட செயல் திட்டங்களை அவர்கள் துவக்கினார்கள். அரசாங்கத்தின் பதவி எந்திரங்களை - தங்கள் வசமாக்கிக் கொள்ளும் ஏற்பாடுகள் நடந்தன. எல்.கே.அத்வானி என்கிற ஆர்.எஸ்.எஸ்.காரர் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சரானதும், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கைத் தகவல் தொடர்புத் துறைகளில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் நுழைக்கப்பட்டனர். (இவைகள் இந்திரா காந்தி ஆட்சி காலத்திலேயே பார்ப்பனமயமாகித்தான் கிடந்தன; ஜனதா ஆட்சியில் நிலைமை மேலும் மோசமாகியது.) வாஜ்பாய் - வெளிநாட்டுத் துறை அமைச்சரானதால், ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் வெளி நாட்டுப் பயணங்கள் சர்வ சாதாரணமானது.

புதுடில்லியிலே வடநாட்டு ஆர்.எஸ்.எஸ். தலைவரான ஹேன்ஸ்ராஜ் குப்தா தலைமையில் மிகப் பெரிய சர்வதேச மாநாடு ஒன்றை வாஜ்பாய் ஆசிர்வாதத்தோடு நடத்திக் காட்டினர். வெளிநாட்டுத் துறை அமைச்சகத்தின் மிகப் பெரிய பொறுப்பில் ஒரு முழுநேர ஆர்.எஸ்.எஸ்.காரர் அமர்த்தப்பட்டார்.

பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும், ஆராய்ச்சி நிலையங்களிலும் 'வித்தியார்த்தி பரிஷத்' (இது ஆர்.எஸ்.எஸ். சின் மாணவர் அமைப்பு) ஆதிக்கம் தலைவிரித்தாடியது. சரித்திர ஆராய்ச்சி பற்றிய இந்திய கவுன்ஸில் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு அதிலே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் புகுந்தனர். 'தீன்தயாள் உபாத்தியாயா நிறுவனம்' என்ற பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். நிறுவனத்தோடு இது இணைக்கப்பட்டது. வரலாற்றை இவர்கள் 'கருத்துக்களுக்கு' ஏற்ப - திரித்து நூல்களை எழுதினார்கள். (வாஜ்பாய் தலைமையில் மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோதும் இதுவேதான் நடந்தது.)

பிறகு மீண்டும் 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஆர்.எஸ்.எஸ். தடை போடப்பட்டது. அப்போதும்கூட விசுவ இந்து பரிஷத் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ். பகிரங்கமாக செயல்பட்டது. தடை பற்றி ஆய்வு செய்த பக்ரி கமிட்டி, பிறகு அந்தத் தடையை நீக்கியது. அவசர நிலைமையை இவர்கள் உணமையாகவே எதிர்த்தார்களா? இந்த 'வீராதி வீரர்கள்' அப்போது செய்தது என்ன? என்பதை எல்லாம் விரிவாக நாம் வேறு அத்தியாயத்தில் ஆராய இருக்கிறோம்!

இந்து மதக் காப்பாளர்களாக இவர்கள் வேடம் போட்டுக் கொண்டாலும், உண்மையிலேயே இவர்கள் பார்ப்பனர்களின் பாதுகாவலர்கள்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை எடுத்துக் காட்ட முடியும். இந்து மதத்தின் தலைவர்களாக வந்திருப்பவர்களில் ஹெட்கேவர் யார்? அவர் ஒரு சித்பவன் பார்ப்பனர்! அடுத்த தலைவர் கோல்வாக்கர் யார்? அவரும் ஒரு சித்பவன் பார்ப்பனர்! அடுத்து வந்த தேவரஸ் என்பவரும் ஒரு சித்பவன் பார்ப்பனர்.

ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புக் களத்திலே முன் வரிசையில் நின்றவருமான ராஜ்நாராயணன் வெளியிட்டுள்ள ஒரு தகவல் இவர்களின் பார்ப்பன சுயரூபத்தை அம்பலமாக்குகிறது.

1979-ம் ஆண்டு 25-ம் தேதியிட்ட 'சண்டே' ஆங்கில வார இதழுக்கு ராஜ்நாராயணன் அளித்த ஒரு பேட்டியில் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

"கடந்த நாற்பது ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நான் மிகவும் துல்லியமாக கவனித்து வருகிறேன். 1840-ம் ஆண்டில் இவர்கள் காந்தியைத் தாக்கினார்கள். 1942-ஆகஸ்ட் 9-ம் தேதிக்குப் பிறகு காங்கிரஸ்காரர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள்; தொடர்ந்து பிரிட்டிஷ்காரர்களின் உளவாளிகளாகவே அவர்கள் செயல்பட்டார்கள். அவர்களுக்கு ஒரு கொள்கை உண்டு. பிரிட்டிஷ்காரர்கள் பேஷ்வா பிராமணர்களிடமிருந்துதான் ஆட்சியைப் பிடித்தனர்; எனவே பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, ஆட்சி மீண்டும் பேஷ்வா பிராமணர்களிடமே திருப்பி வரவேண்டும் என்பது அவர்களின் கொள்கை.

ஆனால், பேஷ்வா பிராமணர்களின் ராஜ்யம் என்று சொன்னால் மக்கள் ஆதரவைப் பெறமுடியாது. எனவேதான் அவர்கள் ஏற்கனவே ஒலித்து வந்த கோஷங்களை மாற்றிக் கொண்டு - பார்ப்பன ராஷ்டிரம் என்பதற்கு பதிலாக இந்து ராஷ்டிரம் என்று சொல்ல ஆரம்பித்தனர்." என்று உண்மையை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் ராஜ்நாராயணன்!

இந்து ராஷ்டிரத்தின் பின்னணி என்ன என்பது இப்போது புரிகிறதா?

பிரிட்டிஷாரிடமிருந்து மராட்டிய பார்ப்பனர்களின் கைகளுக்கு ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் மராட்டிய பார்ப்பனர்கள் இந்த இயக்கத்தின் முன்னணியில் நின்றார்கள்! அகில இந்திய தலைவராக மராட்டியரல்லாத ஒரு பார்ப்பனரல்லாத சமுதாயத்தைச் சார்ந்த - காந்தியார் உருவாகி வந்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை! பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டுமானால் இந்த விடுதலை இயக்கத்துக்கு ஒரு மராட்டிய பார்ப்பனரே தலைவராக இருக்க வேண்டும் என்பது இந்த சதிக் கூட்டத்தின் வெறித்தனமான கருத்தாக இருந்தது! இந்து மகாசபையின் முன்னணித் தலைவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னோடியுமான டாக்டர். பி.எஸ். மூஞ்சி என்ற மராட்டிய பார்ப்பனர், காந்தியாருக்கு எதிரான சதியைத் துவக்கி நடத்த ஆரம்பித்தார். ஆர்.எஸ்.எஸ். தலைவரான ஹெட்கேவர் என்ற பார்ப்பனர் இந்த 'மூஞ்சி'யின் நெருக்கமான சீடர்.

அநாமதேய மிரட்டல் கடிதங்களை எழுதும் அவர்களின் அற்பத்தனங்கள் இன்றைக்கு மட்டுமல்ல; அன்றைக்கே இருந்தது. அன்றைக்கு காந்தியாருக்கே அநாமதேய மிரட்டல் கடிதங்களை இந்தக் கூட்டம் எழுதியது.

'காந்தியே, பாலகங்காதர திலகரைப் போல் இந்துக்களை ஒன்று படுத்தி இந்து அடிப்படையில் சுயராஜ்யப் போராட்டத்துக்கு போராடாத நீ ஒரு கோழை.' என்று காந்தியாருக்கே மிரட்டல் கடிதங்களை எழுதினார்கள்!

காந்தியார் மனம் குமுறிப்போய் 'யங் இந்தியா' பத்திரிக்கையில் இதற்கு மனம் குமுறி பதில் எழுதினார். "எனக்கு அநாமதேய கடிதங்கள் வருகின்றன. திலகர் வழியில் ஏன் செல்லவில்லை என்று அதிலே கேட்கிறார்கள். நான் சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய முறை திலகர் காட்டிய வழிமுறை அல்ல. அதன் காரணமாகவே எனக்கு பல மராட்டியத் தலைவர்களிடமிருந்து தொல்லைகள் வருகின்றன. (காந்தியார் 'யங் இந்தியா' ஜூலை 13.1921.)

ஒரு பார்ப்பனரல்லாத - மராட்டியரல்லாத காந்தியாரின் - அரசியல் செல்வாக்கை எதிர்த்து - அந்தக் காலத்திலே கொடி தூக்கிய பார்ப்பன - வகுப்பு வாத வெறிக் கும்பல்தான் இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம்! அவர்கள் கூறும் 'இந்து ராஷ்டிரம்' என்பது பார்ப்பன ராஷ்டிரம்தான் என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் சுட்டிக் காட்டமுடியும்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் வேத நூல் என்று அவர்களால் போற்றப்படும் ஒரு நூலை ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர் எழுதியிருக்கிறார். 'இந்து ராஷ்டிரம்' என்றால் அது எப்படிப்பட்ட சமூக அமைப்பைக் கொண்டதாக இருக்க வேண்டும்; என்பதற்கு பழைய கால நிகழ்ச்சி ஒன்றை பெருமையோடு எடுத்துக் காட்டி இதுதான் 'இந்து ராஷ்டிரம்' என்று மார்தட்டிக் கொள்கிறார். கோலவாக்கர் சொல்லும் இந்து ராஷ்டிரத்தின் இலக்கணம் என்ன? இதோ படியுங்கள்!

"தென்னாட்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கில அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். ஒரு நாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது 'பிராமண' பியூன் பின் தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த நாயுடு சமுதாயத்துக்காரர் வந்தார்; ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்து கை குலுக்கினார். ஆனால், பிராமண பியூனைப் பார்த்தவுடன் 'காலைத் தொட்டு வணங்கினார்.' அதைப் பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி, 'நான் உன்னுடைய பெரிய அதிகாரி, நீ என்னிடம் கைதான் குலுக்கினாய். ஆனால், என்னுடைய பியூனின் காலைத் தொட்டு கும்பிடுகிறாயே இது என்ன பிரச்சனை? என்று கேட்கிறார். அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார்...
' நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம்; ஆனால், நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் ஒரு பியூனாக இருக்கலாம்; ஆனால், அவர் நாங்கள் வணங்கக்கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழ வேண்டியது எனது கடமை என்று பதில் சொன்னார் இதுதான் இந்து தர்மம்! (குரு கோல்வாக்கர் எழுதிய (Bunch of Thoughts நூல் பக்கம் 138-139)

இந்தக் கூட்டத்தின் வழிபாட்டுப் பாடல் என்ன தெரியுமா? அந்தப் பாடல்களின் வரிகள் இது.

'Salutations to you. O, Mother Land where I am born; Salutatious to you.
O, Land of Aryas, where I have grown; Salutations to you. O, Sacred Land
where I have worked."

நான் பிறந்த தாய் நாடே உன்னை வணங்குகிறேன்.
என்னை வளர்த்த ஆரிய நாடே உன்னை வணங்குகிறேன்.
நான் உழைக்கும் புண்ணிய நாடே உன்னை வணங்குகிறேன்.

இதுதான் 1939-ம் ஆண்டுவரை இந்தியிலும் மராத்தியிலும் இவர்கள் பாடிய பிரார்த்தனைப் பாடல்! (மராத்திய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் பாடல் இங்கே தமிழில் தரப்பட்டிருக்கிறது.)

'எங்களை ஆளாக்கிய ஆரிய நாடே' என்று பிரார்த்தனைப் பாடிய இந்த மோசடிக் கூட்டங்கள்தான் அம்பேத்காருக்கு விழா எடுக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது!

அந்தப் பிரார்த்தனைப் பாடல்கள இன்னும் பாருங்கள்.

"நாங்கள் முழுமையான இந்துக்களாகும்
குணத்தை விரைந்து தாருங்கள்.
உங்கள் கடவுளின் சக்தியை எங்களிடம் புகுத்துங்கள்.
எங்களை ராமனின் சீடர்களாக்குங்கள்.
நாங்கள் நம்பிக்கையின் காவலர்கள் ஆவோம்
சாம்ராத் ஸ்ரீராமதாசுக்கு வெற்றி கிட்டட்டும்!
அவரே இந்த தேசத்தின் குரு;
இந்தியத் தாய் வெற்றி பெறட்டும்."

இவர்கள் உத்தரவு கேட்கும் குரு - சாம்ராத் ராமதாஸ் யார் தெரியுமா? அவர் ஒரு பார்ப்பனர்! சிவாஜி மன்னனின் குரு! தான் போராடிப் பெற்ற வெற்றிகளை - இந்த பார்ப்பன குருவின் காலடியில்தான் காணிக்கையாக செலுத்துவான் சிவாஜி! சிவாஜி மன்னனாக இருந்தாலும் நாட்டை ஆண்டவர் இந்த - - பார்ப்பனர்தான்! அந்த பார்ப்பனர்தான் இவர்களை வசீகரித்துக் கொண்ட குரு! முஸ்லீம்களை போரிட்டு தோற்கடித்து விரட்டி - வெற்றிகளை பார்ப்பனர்களின் காலடியில் குவிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

1939-ம் ஆண்டுவரை பாடப்பட்டு வந்த இந்த வழிபாட்டு பாடல்கள், சுயரூபத்தைக் காட்டிக் கொடுத்து விட்ட காரணத்தால் பின்னர் அதை மாற்றி அமைத்துக் கொண்டார்கள் இந்த ஏமாற்றுக்காரர்கள்! இடத்திற்கு ஏற்ற வேடம்; ஊருக்கேற்ற கோலங்கள் காட்டுவதில் இவர்கள் மகாப் பெரிய சமர்த்தர்கள் அல்லவா!

1939-ம் ஆண்டுவரை ஆரிய நாட்டை வணங்குகிறோம் என்று இந்தியிலும், மராத்தியிலும், பிரார்த்தனை செய்துவந்த இந்தக் கூட்டத்தினர் பிறகு இதை பார்ப்பனர்களின் 'தெய்வீக மொழியான' சமஸ்கிருதத்தில் மாற்றி அமைத்துக் கொண்டார்கள்! தங்களின் சுயரூபத்தை உலகுக்கு அடையாளம் காட்டிய அந்தப் பாடல் வரிகளை மாற்றிக் கொண்டு விட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். சட்டதிட்டங்கள் அவர்களின் சமஸ்கிருத வெறித்தனத்தைப் பட்டாங்கமாகப் படம் பிடித்துக் காட்டி விடுகிறது. அவர்களின் சட்டதிட்டங்களில் 8-வது பிரிவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள பிரிவுகள் என்ன என்பது எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது! அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள். இந்தியா முழுமைக்கும் - அது எந்த மொழி பேசும் மாநிலமாக இருந்தாலும், அந்த அமைப்புகள் இந்த சமஸ்கிருத மொழியிலேதான் அழைக்கப் படவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். சட்ட திட்டங்களின் 8-வது விதியில் கூறப்பட்டிருக்கும் பிரிவுகளின் பெயர்கள் என்ன?

'பிராண்ட்' - மண்டலம்
'விபரக்' - மண்டலத்தின் ஒரு பகுதி
'பிராந்திய கேந்திரா' - மண்டலத் தலைமையகம்
'ஸில்லா' - மாவட்ட அமைப்பு
'ஷாகர்' - நகர அமைப்பு
'மண்டல்' - கிராம அமைப்பு

சட்டத்தின் 11-வது பிரிவு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உயர் அதிகாரக்குழு உறுப்பினர்கள், உயர் அமைப்புகள் பற்றி எடுத்துச் சொல்கிறது.

தலைவர்கள், பல்வேறு உயர்மட்டப் பிரிவுகளின் பெயர் பட்டியலை இதோ பாருங்கள்!

1.'சர் சங் சலாக்' (இவர்தான் அமைப்பின் தலைவர்)
2.'சர் கார்ய வஹா'
3.'கேந்திரிய கார்ய காரி மண்டல்
4.'அகில பாரதீய பிரதிநிதி சபா'
5.'பிராந்த், விபாக், ஸில்லா மற்றும் சங்சலக்குகள்
6.'பிரச்சாரக்'
7.'பிராந்திய பிரதிநிதி சபா'

ஆர்.எஸ்.எஸ்சை துவக்கிய ஹெட்கேவருக்குப் பெயர் 'அத்ய சர்சங்சலக் (ஆதாரம் விதி 12)

14-வது விதியில் 'கேந்திர கார்யகாரி மண்டல்' என்ற அமைப்பில் யார் யார் அங்கம் வகிப்பார்கள் என்று விவரிக்கப்பட்டிருக்கிறது.

1.'சர் கார்ய வஹா'
2.'ஷா சர் கார்ய வஹா'
3.'அஹில் பாரதீய ஷிரிக் ஷிக்கான் பிராமுக்'
4.'அஹில் பாரதீய பவுதீய பவுதிக் ஷிக்கான் பிராமுக்'
5.'அஹல் பாரதீய பிரச்சார் பிராமுக்'

உறுப்பினர்களுக்கு தரப்படும் பயிற்சி வகுப்புகுப் பெயர் 'அதிகாரி ஷிக்ஷன் வர்கா' இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குப் பெயர் 'வியாஸ் பூர்ணிமா'
பொருளாளருக்குப் பெயர் 'நிதி பிரமுக்'
தினசரி நடத்தும் பயிற்சிக்குப் பெயர் 'ஷாக, சமஸ்கார்.'
வாத்ய இசையை அமைத்துக் கொண்டு முன்னே போவதற்குப் பெயர் 'கோஷ்'
அணிவகுப்பு ஊர்வலத்திற்குப் பெயர் 'பாதஞ்சலன்' (சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் வருடப் பிறப்பன்று திருவல்லிக்கேணியில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் இந்த 'பாதஞ்சலன்' நடத்த முயன்றபோதுதான் கைது செய்யப்பட்டனர்.)

பிறப்பிக்கின்ற கட்டளைக்குப் பெயர் 'ஏகச' 'சப்பத' முதல் நகராக வருகின்றவர்களை அழைக்கின்ற பெயர் 'அக்ரே சரோராக.'
குழந்தைகள் மாநாட்டுக்குப் பெயர் 'சிசு சங்கம்.'
ஏன் இந்த அமைப்புக்கே பெயர் 'ராஷ்டிரிய சுயம் சேவக் சங்க்.'

தலையைச் சுற்றுகிறதா தோழர்களே! இந்தக் கூச்சல் தமிழகத்தில் கேட்கலாமா?

இப்படி எல்லாவற்றிலும் சமஸ்கிருதமயமாகிக் கிடக்கும் இந்த அமைப்பு பார்ப்பனீயத்தின் கலாச்சார பாதுகாப்பு என்பது அல்லாமல் வேறு என்ன?

1999-ம் ஆண்டை சமஸ்கிருத ஆண்டாக பா.ஜ.க. ஆட்சி அறிவித்ததன் காரணம் இதுதான்! இவைகள் எல்லாவற்றையும்விட ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பிரகடனமே பார்ப்பனீய சமஸ்கிருத வெறியை தெளிவாகப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சட்ட திட்டங்களில் 'விதிகளும் ஒழுங்கு முறைகளும்' என்ற தலைப்பில் மூன்றாவது பிரிவு கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

'The aims and objects of the Sangh are to weld together the diverse groups withhin Hindu Samaj and to revitalise and rejuvenate the same on the basis of its Dharma and Sanskrit, the it may achieve an all sided devetopment of the Bharathvarsha.'

'இந்து சமாஜத்தில் பல்வேறு வகையில் பிரிந்து கிடக்கும் குழுக்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு எழுச்சி ஊட்டி இளமை ரத்தம் பாயச் செய்யவேண்டும். இந்து தர்மம், மற்றும் சமஸ்கிருத அடிப்படையில் இது செய்யப்பட வேண்டும். இதன் மூலம் பாரதத்தின் எல்லா துறைகளிலும் வளர்ச்சிப் பெற முடியும். இதுதான் இந்த அமைப்பின் நோக்கமும் கொள்கையும் ஆகும்.

இவ்வாறு இந்து தர்மம், சமஸ்கிருத கலாச்சார அடிப்படையில் இந்துக்களை ஒன்று திரட்டுவதே தங்களின் இலட்சியம் என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்த பிறகும் இது ஒரு வகுப்பு வாத அமைப்பு அல்ல என்று சாதித்தால் , கடைசி மடையன் கூட அதை நம்புவதற்குத் தயாராக இருக்க மாட்டான்!

ஆர்.எஸ்.எஸ். வலையில் சிக்கியுள்ள பரிதாபத்திற்குரிய பக்தித் தமிழர்களே! இந்த அமைப்பு தமிழ்நாட்டுக்குத் தேவைதானா? இது தமிழனை வாழ வைக்குமா? இந்த கொள்கைகளுக்கும் அமைப்பு முறைகளுக்கும் தமிழ் நாட்டோடு ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

தமிழ் நாட்டோடு தமிழனின் மொழியோடு, கலாச்சாரத்தோடு ஒட்டும் இல்லாத உறவும் இல்லாத இந்தக் கூட்டத்தின் கதை என்ன? ஆரியக் கலாச்சாரத்தைப் பரப்பி பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் - இந்த அமைப்பின் வரலாறு என்ன? அவைகளை விரிவாகப் பார்ப்போம்!

(தொடரும்)

Pin It