ஈழத்தில் தமிழர்கள் மீதான இறுதிக்கட்டப்போரில் இலங்கை அரசு போர்க் குற்றங்களையும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் நடத்தியிருப்பது உண்மைதான் என்று அய்.நா பொதுச்செயலாளர் பான்.கீ.முன் அவர்களால் நியமிக்கப்பட்டகுழு தனது அறிக்கையில் உறுதிசெய்துள்ளது. ஏற்கனவே அயர்லாந்து நாட்டில், டப்ளின் நகரில் விசாரித்த தீர்ப்பாயமும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தது. இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு, இந்தியா உட்பட சிலநாடுகள் அய்.நா மனித உரிமைக் குழுவில் கொண்டுவந்து நிறைவேற்றிய திர்மானத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அய்.நாவின் குழு கூறியுள்ளது.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை மறைத்து, போர்நிறுத்தம் வேண்டும் என்ற தமிழகத்தின் குரலையும் நிராகரித்து, அய்.நா, மனித உரிமைக் குழுவிலும் சில மேற்குலகநாடுகள் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தையும் முறியடிக்க முழுவீச்சில் செயல்பட்ட இந்திய அரசு, இப்போது அய்.நா குழுவின் விசாரணை அறிக்கையால் அம்பலப்பட்டு நிற்கிறது.

ஈழத்தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இந்திய அரசு இழைத்த மாபெரும் துரோகத்துக்கு தமிழர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகம் வற்புறுத்துகிறது.

இனியும், ஈழத்தமிழர்களுக்கு எதிரான துரோக நடவடிக்கைகளைத் தொடராமல் அய்.நா. குழு சுட்டிக்காட்டியுள்ள இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இந்திய அரசு கண்டிக்க வேண்டும், போர்க்கொடுமைக்கு உள்ளாகியுள்ள ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 21.04.2011 வியாழன் அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், ஒத்த கருத்துள்ள இயக்கங்களை உடன் இணைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது. நன்றி.

கொளத்தூர் மணி

தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

Pin It