vanam_620

அருகில்
இருந்த பொழுதுகளைக் காட்டிலும்
விலகி இருக்கும்
தருணங்களில்
அதிகம் நினைக்கப்படுகிறாய்
நீ.

கடந்து செல்லும்
நங்கையரின் நயனங்களில்
உன் தனித்துவம்
தேடித் தேடித்
தோற்றுப் போகிறேன்
நான்.

தனிமையின்
வெறுமையால்...
கடக்கும்
ஒவ்வொரு கணமும்
கனத்துப் போயிருக்கிறது
மனம்.

காற்று வெளியில்
மிதக்கும் குரல்களில்
உன் மகரந்தச்
சொற்களைத் தேடியலைகின்றன
என்
செவிப் பட்டாம்பூச்சிகள்.

வறண்ட தொண்டையை
நனைக்க வரும்
தண்ணீரின் தண்மைக்காகத்
தாகித்திருக்கிறது
என் நாவு.

தாமதிக்கும் கணங்கள்
அத்தனையும் நோவு.

விலகி இருப்பது
விவாதத்துக்கு நல்லது.
விவாகத்துக்கு அல்ல.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.