“பா.ம.க. ஆட்சி அமைக்க மாற்றுக் கட்சியில் இருக்கும் வன்னியர்களை பா.ம.க. வில் சேர்க்க வேண்டும்''

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் மேற்கண்ட அறிவிப்பைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் வன்னியர்கள் எந்தக் கட்சியில் இடம் பெற்று இருந்தாலும் உடனடியாக ஒரே கட்சியில் அதுவும் அவர் கட்சியில் சேர வேண்டும் என்பது அவரின் விருப்பம். அவரை அனைத்து வன்னியர்களும் தலைவராக ஏற்றுக் கொள்வார்களா? இல்லையா? என்பது வேறு விவகாரம். அதற்குள்ளே நாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரின் இந்த அறிவிப்பு பகுத்தறிவாளர்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் சாதிப் பற்றாளர்கள் இதனை வரவேற்கக் கூடும்.

எனவே, மருத்துவர் இராமதாசு போல் ஒவ்வொரு சாதித் தலைவர்களும் தனக்கென்று ஓர் அரசியல் கட்சியை முதலில் தொடங்கி மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து, மற்ற சாதிகளின் வாக்குகளையும் பெற்று சில இடங்களைக் கைப்பற்றிப் பதவியில் அமர்ந்து முடிந்தால் ஒரு சிலரை அமைச்சர்களாக்கி சிற்றரசர் அளவிற்கு வசதி வாய்ப்பை உருவாக்கிய பிறகு, மருத்துவர் இராமதாசு போல் தங்கள் கட்சிகளை சாதிக் கட்சிகளாக அறிவிக்கலாம்.

ஒரு காலத்தில் சாதி உணர்வோடு வாழ்ந்த மக்களிடையே ஒருசில தலைவர்கள் தோன்றி அவர்களை அணுகி ஒருங்கிணைத்து ஒரே குரலில் ஓட்டுமொத்த சமூக மேம்பாட்டிற்காகத் தமது சொத்து சுகங்களை இழந்து போராடி ஓரளவிற்குச் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய அந்த மாபெரும் தலைவர்களின் உழைப்பை, தியாகத்தை குழிதோண்டிப் புதைத்து, மீண்டும் புஷ்யமித்ர சுங்கன் தந்த மநுநீதியை நிலை நாட்டத் துடிக்கும் மருத்துவர் இராமதாசு பாராட்டப்படக் கூடியவரே.

அவர் விரும்புவது போல் ஒவ்வொரு சாதியும் தனித் தனி சாதிக் கட்சியாகப் போட்டியிட்டாலும் எந்தச் சாதிக் கட்சியும் ஆட்சியைப் பிடிப்பது சிரமம். மருத்துவரின் எண்ணம் நிறைவேற தமிழகத்தில் தற்போது உள்ள 32 மாவட்டங்களையும் 32 நாடுகளாகப் பிரித்து 252 பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் 76 தாழ்த்தப்பட்ட சாதிகளையும், 36 மலைச்சாதியினரையும் ஆக மொத்தம் 364 சூத்திர சாதிகளையும் 32 சாதிகளாக ஒருங்கிணைந்து, ஒவ்வொரு நாட்டிற்கும் முறையே முதலியார் நாடு, செட்டியார் நாடு, தேவர் நாடு, வன்னியர் நாடு, நாயக்கர் நாடு, கவுண்டர் நாடு, யாதவர் நாடு, உடையார் நாடு, பிள்ளைமார் நாடு, மருத்துவர் நாடு, வண்ணார் நாடு, ஆதிதிராவிடர் நாடு, பறையர் நாடு, அருந்ததியர் நாடு, சக்கிலியர் நாடு, பிராமணர் நாடு எனப்பெயர் சூட்டி அந்தந்த சாதியினரை அந்தந்த நாட்டில் குடியமர்த்தலாம். 

சாதிக்கு ஒரு நாடு என்றும் அந்தந்த சாதித் தலைவர்களை அந்தந்த சாதி நாட்டின் அரசராக நியமிக்க இந்தியப் பாராளுமன்றத்தில் ஒரு சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றலாம். தமிழகத்தைச் சார்ந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் (புதுவை உட்பட) தீர்மானத்தை முன்மொழிந்து பேசலாம். அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலோர் சாதி உணர்வாளர்களே என்பதால் இதனை எதிர்த்து எவரும் பேசமாட்டார்கள். எதிர் காலத்தில் ஒவ்வொரு மாநிலமும் இதனைப் பின்பற்றலாம் என்று அறிவித்தால் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிச்சயம் வெற்றி பெறும்.

1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது சுமார் பத்து லட்சம் மக்கள் மதவெறியால் கொல்லப்பட்டனர். அதுபோல் இம்முறை சாதி வெறியால் எவரும் கொல்லப்படாமல் பாதுகாக்க முன் எச்சரிக்கையாக இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்களிடம் போதுமான பாதுகாப்பு தரக் கோரலாம். தீர்மானம் நிறைவேறினால் எதிர்காலத்தில் அவரும் சிவகங்கை எனும் செட்டியார் நாட்டில் குடியமர வேண்டியவர்தானே. எனவே நிச்சயம் உதவுவார்.

சாதி அரசர்களின் முடி சூட்டு விழாவைத் தலைமை ஏற்று நடத்தித் தர இந்து மத தலைவர்களான, கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சங்கராச்சாரி ஜெயந்திர சுவாமியையும், பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நித்தியானந்த சுவாமியையும், ஆந்திரா போதை புகழ் கல்கி சுவாமியையும் அழைக்கலாம்.

இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை முன்னிலை வகிக்கவும், மத்திய அமைச்சர்களைச் சிறப்பு விருந்தினராகவும் அழைக்கலாம். இவர்களில் எவரேனும் சாமியார்களின் காலில் விழுந்து கும்பிட்டு முடி சூட்டு விழாவின் முக்கியத்துவத்தை கெடுத்துவிடாமல் தடுத்திட சாமியார்களைச் சுற்றி கறுப்புப் பூனைப் படைகளை நிறுத்தலாம்.

முதலில் விழுப்புரம் மாவட்டத்தை வன்னியர் நாடாக அறிவித்து மருத்துவர் இராமதாசு அவர்களை அரசராகவும், அவர் மகன் அன்பு மணியை அரசக் குமாரனாகவும் பதவி ஏற்க வைத்து விழாவைத் தொடங்கலாம்.

சாதிக்கு எதிராகப் போராடி மறைந்த தலைவர்களின் நிழற்படங்களையும் அவர்களின் நூல்களையும், தடை செய்யலாம், சிலைகளையும் தகர்த்தெறியலாம்.

தற்போது தமிழகத்தில் சாதிக்கு எதிராக நாத்திகம் பேசித் திரியும் சுயநலவாதிகளைக் கழுவேற்றிக் கொல்லலாம் அல்லது பொது மன்னிப்பு வழங்கி ஏதாவதொரு சாதி நாட்டில் தஞ்சம் புகுந்து பிழைத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.

இப்படிச் செய்தால் சாதி இன்னும் அய்யாயிரம் ஆண்டுகள் நிலைத்துப் போற்றிப் பாதுகாக்கப்படும். .....

வாழ்க சாதிகள்! வெல்க சாதிக் கட்சித்தலைவர்கள்!

Pin It