இந்த நாட்டில், அறியாமை இருள் சூழ்ந்திருந்த காலத்தில், மத்திய ஆசியாவைச் சேர்ந்த ஆரியர்கள், இந்த நாட்டில் புகுந்து, சொந்தம் கொண்டாடத் தொடங்கிய நேரத்தில், நமது முன்னோர்கள் அப்பாவிகளாக இருந்து எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டனர். ஆரியர்கள் வந்து சிறிது காலத்திற்குள்ளாகவே இங்கும் தம் வாலாட்டத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் நம் மக்களிடம் நம்பிக்கைத் துரோகங்கள் பலவற்றைச் செய்தார்கள்! புராணக் கதைகள் பலவற்றையும் கட்டிவிட்டார்கள்! செப்படி வித்தைகள் செய்து காட்டினார்கள்! ஜேப்படி வித்தைகள் நடத்தினார்கள்!

அவர்கள் இயற்கை நிகழ்ச்சிகளைக் காட்டிக் "கடவுள்' என்றொரு கற்பனைக் கருத்தைச் சுட்டிக் காட்டித், திராவிடர்களின் மூளையையே குழப்பி விட்டார்கள்.

காரல் மார்க்ஸ் என்ற பேரறிஞர், தம் ஆராய்ச்சி முதலான "மூலதனம்' என்னும் பொருளாதார அறிவுக் களஞ்சியத்தில், "மதம் மக்களுக்கு அபின்' என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்துதான் சொல்லியிருக்கிறார்! (கைதட்டல்!)

"கடவுள்' என்ற கற்பனைக் கருத்தை நிலைநாட்டித், தம் சூழ்ச்சிகளில் வெற்றி கண்ட ஆரிய வஞ்சகர்கள், தம்முடைய வெண்ணிறத்தைக் காட்டித், தாம் உயர்ந்தவர் என்றும், திராவிடர்களின் கறுப்பு நிறத்தைக் காட்டி அவர்களெல்லாம் தாழ்ந்தவர்கள் என்றும், கடவுளின் தலையிலிருந்து வெடித்து வந்தவன்தான் "பார்ப்பனன்' என்றும், கடவுளின் தோளிலிருந்து பிளந்துகொண்டு வெளிவந்தவன்தான், "சத்திரியன்' என்றும், கடவுளின் வயிற்றிலிருந்து வெடித்து வெளி வந்தவன்தான் "வைசியன்' என்றும் கடவுளில் காலிலிருந்து, பிளந்து வெளிவந்தவன்தான் "சூத்திரன்' என்றும் கூறித், திராவிட அப்பாவிகள் பலரையும் நம்ப வைத்தனர்!

நான் 30 ஆண்டுகளுக்கு மேல், இங்கிலாந்திலும், இங்கும் மருததுவப் பணி செய்து அனுபவம் பெற்றவன். ஆனால் இம்மாதிரியாக உடலின் பல பகுதிகளில் பிள்ளைப்பேறு மருத்துவங்களை நான் என் வாழ்நாளில் கண்டதுமில்லை, கேட்டறிந்ததுமில்லை! (சிரிப்பு! கைதட்டல்!)

ஆரியக் கடவுளின் உடல் அமைப்பே அலாதியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது! (சிரிப்பு! கைதட்டல்!)

இவ்வாறாகக் கடவுளின் மேற்பகுதி உறுப்புகளிலிருந்து, மகப்பேறு பெற்று வெளிவந்த ஆரியர்கள், தங்களுக்கே நாடு, வீடு, தோட்டம், துரவு, காடு, கழனி, பணம், காசு எல்லாம் சொந்தம் என்று ஆக்கிக் கொண்டு விட்டார்கள். நாலாம் சாதியினரான சூத்திரர்களும், அய்ந்தாம் சாதியினரான பஞ்சமர்களும் கல்வி, சொத்துரிமை போன்றவற்றில் எந்த ஒரு உரிமையும் கொண்டாட முடியாது; கொண்டாடக் கூடாது என்று ஆக்கி விட்டனர்.

இவையெல்லாம் ஒவ்வொருவரின் முன் பிறப்பில் செய்த பாவபுண்ணியங்களின் அடிப்படையில் ஏற்பட்டவையாகும் என்று ஆரிய தெய்வீகச் சட்டதிட்டங்கள் கூறுகின்றன. இதற்குத் "தலைவிதி' என்றும் அவர்கள் பெயர் வைத்துவிட்டார்கள்.

இதையெல்லாம் நம்பி நடப்பவனுக்குத்தான், இறப்பிற்குப் பின் மோட்சம் கிடைக்கும் என்றும், நம்பாதவன் இறப்பிற்குப் பின், நரகத்தில் சித்ரவதைச் செய்யப்படுவான் என்றும் சொல்லி வைத்தார்கள்.

இத்தகைய "கடவுள் திட்டத்திற்கு' வருணாச்சிரம தருமம் என்று பெயர். இவ்வாறு அந்நிய ஆரிய வஞ்சகர்கள் கூறி, அப்பாவித் திராவிடர்களைப் பல்வேறு வகையிலும் அடிமைப்படுத்தி வந்தனர்.

ஆரியச் சூழ்ச்சிகளை, விழிப்புணர்ச்சி கொண்ட திராவிடர்கள், அவ்வப்போது அய்யப்பாடு அடைந்து, ஆரியக் கூட்டத்தினரை எதிர்த்துப் போராடியதும் உண்டு.

ஆரியர்கள் சாமபேததானதண்டமெனும் ஆரிய சதுர்வித உபாயங்கள் மூலம் திராவிடரின் ஒற்றுமையைப் பலவகைகளிலும் குறைக்கச் செய்தனர்.

ஆரியர்கள் திராவிடர்களிலேயே சிலர்க்கு மட்டும் சாதி உயர்வுப் பட்டம் அளித்து, மற்றவர்களை வேறுபடுத்தித் தாழ்த்தி வைக்க முற்பட்டனர். எடுத்துக்காட்டாக, நம் தலைவர் பி. தியாகராயச் செட்டியார் இனமான நெசவாளத் திராவிடர்களைத் "தேவாங்கப் பிராமணர்' என்று சொல்லி, சாதி உயர்வுப் பட்டம் அளித்தனர்.

ஆரியர்கள், திராவிட வேளாண் பெருங்குடி மக்களை, "வன்னிய குல சத்திரியர்' என்றும், நாயுடு ரெட்டியார் மார்களை, "கவுரவ சத்திரியர்' என்றும், திராவிடக் கோமுட்டிகளை, "ஆரிய வைசியர்' என்றும், நாட்டுக் கோட்டைச் செட்டியார்களைத் "தன வைசியர்' என்றும், பொற்கொல்லர்களை "விசுவகர்ம பிராமணர்' என்றும், வடநாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத திராவிட இனத்தைச் சார்ந்தவர்களான குற்றேவல் புரிபவர்களைப் "பூமிஹார் பிராமணர்' என்றும், விவசாயிகளை "குர்மிசத்திரியர்' என்றும், வீரர்களை "இராஜ புத்திர சத்திரியர்' என்றும் பலவாறாகப் பெயர்களைச் சூட்டித் திராவிடர்களின் கோட்டைக்குள்ளேயே குத்து வெட்டு, போட்டா போட்டி, பொறாமை, பொச்சரிப்பு போன்ற குழப்பங்களை ஏற்படுத்தினர்.

திராவிடரில் பலர்க்குப் பெயரளவில், ஆரிய வர்ணாச்சிரம உயர்சாதிப் பட்டங்கள் கிடைக்கப் பெற்றனவேயன்றி, நடைமுறையில், சங்கராச்சாரியார் பீடத்தில் அமரவோ, கோவில் அர்ச்சகர்களாக ஆகவோ, ஆரியச் சடங்குகள் செய்யும் புரோகிதர்களாக மாறவோ, அவர்களுக்கு உரிமைகள் அறவே வழங்கப்படவில்லை!

தேவாங்கப் பிராமணரான நம் தலைவர் திரு. பிட்டி. தியாகராயவள்ளல் அவர்கள், அப்படிப்பட்ட இடங்களில் அமர வேண்டும் என்று ஆசைப்படுவாரேயானால் , இராமாயணத்தில் கண்டுள்ளபடி தவம் செய்த பாவத்திற்காக இராமனால் தலையிழந்த சூத்திரனான சம்பூகன் கதிதான், இவருக்கும் ஏற்படும்! (சிரிப்பு! கைதட்டல்! ஆரவாரம்!)

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு இணங்க, ஆரியர்களால் எவ்வளவு புரட்டுக்களும், பித்தலாட்டங்களும் நடைபெற்றாலும், இங்குக் கூடியிருக்கும் நீங்கள் அனைவரும், உங்களைத் "திராவிடர்கள்' என்று அழைத்துக் கொள்வதில் பூரிப்பும், பெருமையும் கொண்டிருக்கிறீர்கள்.

வீரத் திராவிடர்களே! (பெருத்த ஆரவாரம்! கைதட்டல்! தியாகராயர் வாழ்க! டாக்டர் நாயர் வாழ்க! நீதிக்கட்சி நீடூழி வாழ்க! என்ற முழக்கங்கள்!) என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன்! இலண்டனிலும், சென்னையிலும் எல்லோரும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்லுகிறார்கள்! நான் ஒரு எம்.டி. பட்டதாரி!

எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது. எனக்காகும் செலவு போக, என் வருமானத்தில் மீதப்படும் பணத்தையெல்லாம், என்னருமைத் தலைவர் திரு. பிட்டி தியாகராயர் அவர்களைப் போன்று, உங்களைப் போன்ற திராவிட மக்களைத் தட்டி எழுப்பும் நீதிக்கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமைப்படுகிறேன்! (டாக்டர் நாயர் வாழ்க! தியாகராயர் வாழ்க!)

இவ்வாறெல்லாம் இருந்தும், என் பிறந்த இடமான கேரளத்தில், நானோர் "சூத்திரன்'தானே! (நகைப்பு! வெட்கம்! வெட்கம்! என்ற முழக்கம்! இத்தகைய இந்துமத சாதி அக்கிரமங்களை, எந்தப் பார்ப்பன "லோக' குருவாவது, அல்லது "லோக்கல்' குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? (வெட்கம்! வெட்கம்! என்ற முழக்கம்)

இந்த மூஞ்சிகளுக்குத்தான், தனி ஆட்சி நடத்த, "தன்னாட்சி அரசு வேண்டுமாம்! (வெட்கக் கேடு! வெட்கக் கேடு! என்ற ஆரவாரம்)

இன்னும் கேளுங்கள்! "நசூத்ராய மதிம் தத்யா' என்பது மற்றோர் சுலோகம்! அதன் பொருள் என்னவென்றால், “சூத்திரன் படிக்கக்கூடாது!'' என்பதாகும். அப்படியானால், “நீ எப்படிப் படித்தாய்?'' என்று நீங்கள் கேட்பீர்களேயானால், இந்தச் சண்டாளப் பூனைக் கண்ணன்! "செம்பட்ட மயிரன்' ஆன வெள்ளைக் காரனுடைய "யூனியன் ஜாக்' கொடி அல்லவா இப்பொழுது நாட்டில் பறக்கிறது! அதன் தயவால் தான் நான் படித்து முன்னேறினேன். (கைதட்டல்! ஆரவாரம்!)

அசல் "ஆரிய இந்து தரும' ஆட்சி நடக்குமானால், இங்குக் காவிக்கொடி தான் பறக்கும் என்ற நிலை இருக்குமேயானால், இராம ராஜ்ய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்குமேயானால், அவ்வளவுதான்! சூத்திர சம்பூகன் கதிதான் எனக்கும், என் தலைவர் திரு. பிட்டி தியாகராயர் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் (வெட்கம்! வெட்கம்! இந்து மதம் ஒழிக! என்ற ஆரவாரம்!)

இவ்வளவுக்கு நீங்கள் எல்லோரும் மதிக்கும் என்னை, எங்கள் கேரள நாட்டு "நம்பூதிரிப் பார்ப்பான்', “ஏடா நாயரே!'' என்று சர்வ சாதாரணமாகக் கேவலமாக அழைக்கக் கூடிய, சாதிக் கர்வம் படைத்திருக்கிறான்!

உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற சர் சங்கரன் நாயர், ஒரு சமயம் கேரளாவிலுள்ள தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, ஒரு நம்பூதிரிப் பார்ப்பான், சர் சங்கரன் நாயர் வீட்டு வாசலிலேயே வந்து நின்றபடி, “எடா! சங்கரா! நீ உயர் நீதிமன்ற நீதிபதியாமேடா'' என்று கேட்டானாம். “ஆமாம் சாமி! எல்லாம் உங்கள் கடாட்சந்தான்!'' என்று கூறியவாறே, வெளியே ஓடோடியும் வந்து, நம்பூதிரிப் பார்ப்பானின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக், கைகட்டி வாய் பொத்தி நின்றாராம், அவர்.

(1917 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 7 ஆம் நாள், சென்னை எழும்பூர் ஸ்பர்டங் சாலையில் இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் டி.எம். நாயர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

Pin It