சாதி ஒழிப்பு குறித்து இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. சாதியை உடனே ஒழிக்க முடியாது. அது ஒரு நீண்டகால வேலைத் திட்டம் என்று சாதி ஒழிப்பில் அக்கறையுள்ள தோழமை இயக்கத் தோழர்களும், சாதியை ஒழிக்கவே முடியாது என்று சாதியவாதிகளும் பேசி வருகின்ற நிலையில் இது குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.

உண்மையில் சாதியை ஒழிக்கவே முடியாதா? என்றால் உறுதியாகச் சாதியை முற்றிலும் ஒழிக்க முடியும்.

உலக அளவில் நிலவிய பல்வேறு வகையான நிறப் பாகுபாடு, மொழிப் பாகுபாடு, ஆண்டான் அடிமை முறை போன்ற பல்வேறு பாகுபாடுகள் அனைத்து தேசத்திலும் நிலவின என்று நாம் அறிந்தாலும் மாமேதை அம்பேத்கர் அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்திலும், பிற நாடுகளிலும் நிலவிய பாகுபாடு குறித்துப் பல்வேறு செய்திகளைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். குறிப்பாக நிறப் பாகுபாடு குறித்தும் அறிவியல் குறித்தும் நாம் தெரிந்து கொண்டால்தான் சாதியை ஒழிக்க முடியுமா, முடியாதா? என்கின்ற தெளிவான முடிவுக்கு வர முடியும்.

இந்தியத் துணைக் கண்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கின்ற கொடுமைகளுக்கு இணையாக அதே போன்று கொடுமையான ஒடுக்குமுறையுடன் கருப்பின மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்து வந்தனர். கருப்பின மக்கள் அனுபவித்த கொடுமைகள் பல இருந்தாலும் ஒன்றை மட்டும் இங்கே நினைவுபடுத்த வேண்டும். கருப்பின மக்களை வெள்ளைக்காரர்கள் மாந்தர்களாக அங்கீகரிக்கவில்லை. அவர்களை ஒரு விலங்காகவே நடத்தினர். ஆடு, மாடு, கோழிகளைச் சந்தைகளில் விற்பதைப் போன்று கருப்பின மக்களை விற்கவும், வாங்கவும் சந்தைகள் இருந்தன. அந்தச் சந்தைக்குக் குடும்பம், குடும்பமாகக் கருப்பின மக்களை விற்க வரும்போது அவர்களை வாங்கும் வெள்ளைக் காரர்கள் ஒரு கருப்பினக் குடும்பத்தை அப்படியே வாங்குவதில்லை. அந்தக் குடும்பத்தில் உள்ள ஆணை வேறொரு வெள்ளைக்காரரும், பெண்ணை ஒரு வெள்ளைக்காரரும், குழந்தைகளைத் தனித்தனியே வெவ்வேறு வெள்ளைக்காரர்களும் வாங்கிச் சென்றனர். அந்தக் கருப்பின குடும்பம் தனித்தனியே பிரிக்கப்பட்டு, ஆளுக்கொரு திசையில் அடிமைகளாக வாழ்ந்தனர். இப்படிப் பிரிந்த கருப்பின குடும்பத்தினர் வாழ்கிறார்களா? இறந்து விட்டார்களா என்று ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ள முடியாது. இப்படி மோசமான, துயரமான, விலங்கை விட மோசமான நிலையிலேயே கருப்பின மக்கள் நடத்தப்பட்டனர்.

ஆனால் இந்தக் கொடுமைகளெல்லாம் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குப்பின் ஒரு முடிவுக்கு வந்தன. இன்றைக்கு அதற்கு நேர்மாறாகக் கருப்பின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் இன்றைக் குக் கருப்பின மக்களிடத்தில் நிறப் பாகுபாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு ஒரு கருப்பின ஆண் ஒரு வெள்ளையினப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஒரு கருப்பினப் பெண் ஒரு வெள்ளையின ஆணைத் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்த வகையான தடையும் அங்கு இல்லை.

இன்றைக்கு உள்ள தலைமுறைக்கு மேற்கண்ட பாகுபாடுகளை வரலாற்று நூல் வழியாகத்தான் தெரிந்துகொள்ள முடியும்.

சமூகத்தில் இன்றைக்கு எந்தவகையான நிறப் பாகுபாடும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். ஒருவரைப் பார்த்தால் இவர் வெள்ளைக்காரர், இவர் கருப்பினத்தவர் என்று கண்டு பிடிக்கக் கூடிய அளவில் காணப்படும் உடல் வேறுபாட்டைக் காட்டித்தான் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிறவெறி முற்றிலும் ஒழிக்கப்பட்டு ஏறத்தாழ அவர்களும் மனிதர்கள்தாம் என்பதை அங்குள்ள சமூக இயக்கங்களும், மனித உரிமையாளர்களும் போராடி அதை அரசும் ஏற்றுக் கொண்டு அதற்கான கருத்துகளை எழுதியும் சட்டத்தின் மூலமாகவும் மாற்றி இன்றைக்கு எந்த வகையான பாகுபாடும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாகச் சர்வதேச அரங்கில் கருப்பின மக்கள் ஏறத்தாழ 8% பொருளாதார வளர்ச்சி பெற்றிருப்ப தாகவும், புள்ளி விளக்கங்கள் தெரிவிக்கின்றன. இதை அப்படியே இந்தியத் துணைக் கண்டத்தில் ஒப்பிட்டுப் பார்த்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் விலங்குகளைவிடக் கேவலமாக நடத்தப்படுகின்றனர். நாய், ஆடு, மாடு, கோழி, பூனை ஆகியவற்றை வீட்டிற்குள் அங்கீகரிக்கும் சாதிகள் தாழ்த்தப்பட்ட மக்களை வீட்டிற்குள் அனுமதிப்ப தில்லை. தெருவில் நடக்க, செருப்புப் போட, அணிகலன்கள், விலை உயர்ந்த ஆடைகள் அணிந்து கொள்ள அனுமதிப்பதில்லை. சொந்தமாக எந்த ஒரு பொருளையும் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. இரவு பகலாக வேலை செய்ய வேண்டும். கூலி கிடையாது. கூழும், கஞ்சியும் வேலைக்கு ஊதியமாக கிடைத்தன. இந்து மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் இப்படி இன்னும் சொல்லிலடங்காத் துயரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமைப்படுத் தப்பட்டனர்.

கருப்பின மக்களின் நிறம், உடல் அமைப்பையும் வெள்ளையர்களின் உடல், நிற அமைப்பையும் பார்த்தால் வேறுபாட்டைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் உடல் அமைப்பும், உயர் சாதியரின் உடல் அமைப்பும் பார்த்தால் ஒன்று போல் உள்ளது. இவர்களுக்கு உடல், நிற வேறுபாடுகள் இல்லை. சாதி, கடவுள் மதத்தின் பெயரால் பிரிக்கப்பட்டுள்ளனர்.

பார்ப்பனக் கும்பல் அவர்களின் மூன்று வருண கோட்பாட்டுடன் சூத்திரன் என்னும் ஒரு புதிய வருணத்தை உருவாக்கி நான்கு வர்ணங்களாக இந்தியத் துணைக் கண்டத்தில் பரப்பினார்கள். இந்த நான்கு வருணத்திற்கு அப்பாற்பட்ட பஞ்சமர் என்னும் மக்களை வருணத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் பார்ப்பனர் இந்த வரலாறுகளையெல்லாம் மாமேதை அம்பேத்கர், பகுத்தறிவுத் தந்தை பெரியார் ஆகியோர் எழுதியும், பேசியும் வந்துள்ளனர். ஆகவே அதற்குள் அதிகமாக செல்லத் தேவையில்லை.

சாதி தொடர்பான வரலாற்றுச் செய்திகளை நாம் தெரிந்து கொண்டாலும் இந்தச் சாதி தொடர்பான சில கேள்விகளைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பார்ப்பனர்கள் உருவாக்கிய சாதிப் படிநிலையை அப்படியே இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களைச் சாதியின் பெயரால் ஆதிக்கம் செய்யும் உயர் சாதிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பு இல்லாமல் அவர்களால் வாழ முடியுமா?

தாழ்த்தப்பட்ட மக்கள் உருவாக்கும் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு உணவு தானியங்கள், வீடு கட்டத் தேவையான செங்கல், சுதை (சிமிண்ட்) சுண்ணாம்பு, வண்ணம், இழைப்புக் கற்கள், மர வகைகள் இப்படி வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் கைகளால் தொடப்பட்டு உருவாக்கப்படுகின்றன.

வீடு கட்டும் பணிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடுபடுகின்றனர். அதேபோன்று அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்தால் அவர்கள் மூலம் கிடைக்கும் உதவிகளைப் பெறாமல் இருக்க முடியுமா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கினார். ஆகவே நான் சட்டம் படிக்க மாட்டேன், சிறைக்குச் சென்றால் வெளியே வராமல் அப்படியே இருக்க முடியுமா? இந்தியத் துணைக் கண்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவராகத் தாழ்த்தப்பட்டோர் இருக்கும்போது அதையெல்லாம் நான் பயன்படுத்திக் கொள்ள மாட்டேன் என்று இருக்க முடியுமா?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆடைகள், பயன்படுத்தும் மாத்திரை, மருந்துகள் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிழுத்து விடும் காற்றை உயர் சாதியினர் உள்ளிழுக்காமல் இருக்க முடியுமா? இப்படிப் பல நூறு கேள்விகளுக்கு உட்பட்டு நான் ஓர் உயர் சாதிக்காரன் என்னால் தீட்டுப் படாமல் வாழ முடியும் என்று வாழ்ந்து காட்ட முடியுமா?

மாந்த இனத்தின் கலப்பு

இது ஓர் அறிவியல் சார்ந்த முகாமையான கேள்வி. இன்றைக்கு அறிவியல் வளர்ச்சி என்பது மாந்தன் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தொலைக்காட்சி, தொலைபேசி, வளைதளம், உயர் தொழில் நுட்பம், நிலவுக்குச் செல்வது, செவ்வாய்க்குச் செல்வது என்று அறிவியல் வளர்ச்சி நீண்டு செல்கிறது.

மாந்த வாழ்விலும் பல்வேறு வியப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. உடலில் பல்வேறு உறுப்புகளை மாற்றுவது, நீக்குவது, ஊடுகதிர், வளியம், முழு ஆய்வு என்று நீண்டு செல்கிறது. இந்த அறிவியல் வளர்ச்சியை மனித வாழ்க்கையில் மனிதர்களின் படிநிலை வளர்ச்சி குறித்தும், இவர்களின் கடந்த கால வாழ்க்கை குறித்தும் தொல்பொருள் ஆய்வுகள் சில உண்மைகளை உலகுக்கு உரக்க அறிவித்துள்ளன. தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை மனித இனமானது விலங்கு நிலையிலிருந்து படிப்படியாக ஆடையில்லாமல் பிறகு, மரப்பட்டை, செடி கொடிகளை ஆடையாகக் கொண்டு, விலங்குகளின் தோல்களை ஆடைகளாகப் பயன்படுத்தினார்கள். பிறகு குகைகளிலும், ஆற்றங் கரைகளிலும், நாடோடிகளாகவும், நிலைத்து வாழ்ந்து பல லட்சம் ஆண்டுகளாகப் படிப்படியாக வளர்ந்து வந்த மாந்த வாழ்க்கை பற்றி ஓர் அளவிற்கு இப்படித்தான் மனித வளர்ச்சி இருந்திருக்க முடியும் என்பதை நடுநிலையாளர்களால் உணர முடிகிறது.

மனித இனத்தின் மானுடவியல் வரலாற்று உண்மைகளைப் பலர் நிறுவியிருந்தாலும் அதை மறுத்தும் எழுதியும், பேசியும் வருகின்றனர். இந்த நிலையில் நாங்கள் ஆண்ட சாதிகள், நாங்கள் ஆளப் பிறந்தவர்கள் என்றெல்லாம் எழுதியும், பேசியும் வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு அறிவியல் ஒரு கேள்வியை கேட்கிறது. அது நீங்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே சாதியாக மட்டும் வாழ்ந்தது உண்மையென்றால், அதை அறிவியல் துணை கொண்டு உறுதி செய்யுங்கள் என்பதுதான்.

உலகில் வாழும் ஏறத்தாழ 750 கோடி மக்களிடத்தில் ஆய்வு செய்ததில் அனைத்து இனங்களும் கலப்பு இனம் தான் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழகத்தில் பிரமலைக் கள்ளர் என்று சொல்லக் கூடிய 132 பேர்கள் மட்டுமே கலப்பு இல்லாத இனமாக கண்டறியப் பட்டுள்ளனர். இது விதிவிலக்கான ஒன்று. விதி என்பது அனைவரும் கலப்புதான். இதன்படி இங்கிலாந்து மன்னர் சார்லசு டயானா இவர்களின் மகன் வில்லியம் என்பவர் தன்னை டி.என்.ஏ. ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டு அந்த ஆய்வின் முடிவை வெளியிடவும் ஒப்புக் கொண்டார். அந்த ஆய்வு முடிவு என்ன சொல்கிறது என்றால் 7 தலைமுறைக்கு முன்பு இந்தியாவில் இருக்கும் இனத்துடன் கலந்திருக்கிறது என்று அறிவிக்கிறது.

உடனே மேற்கண்ட வில்லியம் அந்த ஆய்வு முடிவை ஏற்றுக் கொண்டு அந்த உண்மையை உலகுக்கு வெளிப்படையாக அறிவித்தார். அது என்னவென்றால் 7 தலைமுறைக்கு முன்பு என் கொள்ளுப் பாட்டி இந்தியாவிற்குச் செல்கின்றபோது அங்குள்ள வேலைக்காரருடன் உறவு கொண்டுள்ளார். அதன்படிதான் இந்தக் கலப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே என் மூதாதையர்களை இந்தியாவிற்குச் சென்று தேடுவேன் என்று அறிவித்தார். இந்தச் செய்தி உலகம் முழுவதும் அனைத்து நாளிதழ்களிலும், முதன்மைச் செய்தியாக வந்தது. ஆனால் இந்தியாவில் சில நாளிதழ்களில் மட்டும் சிறிய செய்தியாக வந்தது.

இந்த இடத்தில் உலகம் முழுவதும் ஆளப் பிறந்த இனம் ஆரிய இனம்தான் என்று இட்லர் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. இட்லர் உலகத்திற்கு ஓர் உண்மையைச் சொன்னார். அவர், இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் ஆரியர்களை, நான் ஆரியர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவர்கள் அனைவரும் கலப்பு இனம் என்று அறிவித்தார்.

இட்லர் அன்றைக்கு டி.என்.ஏ. மூலமாக ஆய்வு செய்து சொல்லவில்லை. மாறாக, வரலாற்றைப் படித்துச் சொன்னார். கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு ஆரியர்கள் வந்தபோது சில பெண்களும், ஆயிரக்கணக்கான ஆண்களும்தாம் வந்தார்கள். அப்படி வந்த அவர்கள் இங்குள்ள இனத்துடன் கலந்து பிறந்த இனம்தான் ஆரிய இனம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட இட்லர் இந்தியாவில் இருக்கும் ஆரிய இனம் கலப்பினம் என்று அறிவித்தார். ஆகவே அவர்களை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் அறிவித்தார்.

இலங்கையில் உள்ள சிங்கள இனம், சிங்கள இனத்தின் வரலாற்று நூலான மகாவம்சம் என்கிற நூலில் தாங்கள் ஒரு கலப்பு இனம்தான் என்று ஏற்றுக் கொண்டு அறிவித்துள்ளார்கள்.

உண்மையில் இன்று தெருவில் நாய்கள், ஆடு, மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் இனப்பெருக்கம் செய்வதைப் போன்றுதான் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனித இனத்தின் உறவுகள் இருந்தன. மனித இனம் அப்படித்தான் வாழ்ந்தது. தாய்வழிச் சமூகமாக, பிறகு தந்தை வழிச் சமூகமாகப் படிப்படியாக வளர்ந்து வந்திருக்கின்றது என்பதை நடுநிலையுடன் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆகவே சாதி ஏற்றத் தாழ்வு என்பது மனித இனத்தின் இடையில் வந்தது. அதை அறிவியல் துணைக் கொண்டும், கடந்த கால வரலாற்று ஆய்வு முடிவுகளைக் கொண்டும் சாதியை முற்றிலும் ஒழிக்க முடியும் என்பதை உரக்கச் சொல்வதற்காகத்தான் இந்தக் கட்டுரை எழுத நேர்ந்தது.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சாதிய ஒழிப்பு என்பது இந்த மண்ணில் நடந்தே தீரும் என்பதை மார்க்சிய இயங்கியலோடு அறிவியல் வளர்ச்சியோடு நாம் பார்க்க வேண்டும்.

கார்ல் மார்க்சு சொன்னார்: ஒரு மனிதனின் சிந்தனையை அவன் வாழ்நிலைதான் தீர்மானிக்கிறது என்று. இந்தியாவில் சமூக வாழ்நிலை என்பது சாதிய பாகுபாட்டுடன் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளுடன் அவர்களின் வாழ்நிலை உள்ளது. ஆகவே அவர்களின் சிந்தனையும் அதேபோன்று உள்ளது. ஆனால் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் சிற்றூர்கள் சிதைய வேண்டும் என்று சொன்னார். சிற்றூர் அமைப்பே கூடாது; அதுதான் சாதியைப் பாதுகாக்கின்றது என்று சாடினார்.

தனியார் மயம், தாராளமயம், உலக மயம் என்னும் பொருளாதாரக் கோட்பாடு உழைக்கும் மக்களை ஓட்டாண்டி ஆக்கி உழைக்கும் மக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. மீண்டும் பழையபடி மக்களிடம் உள்ள சிறு நிலங்கள் பறிக்கப்பட்டு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும் ஆயிரக்கணக்கான நிலங்கள் பிடுங்கிக் கொடுக்கப்பட்டன. எண்ணெய் வயல்கள், நிலக்கரி வயல்கள், தாது வயல்கள், ஆற்று வளம், கடல் வளம், நீர் வளம் உள்ளிட்ட அனைத்து பொதுச் சொத்துகளும் விற்கப்பட்டு அம்பானி, அதானி என்று விரல் விட்டு எண்ணக் கூடிய தரகு முதலாளிகள் பிரிவை உருவாக்கின. இதுதான் நாட்டின் வளர்ச்சி என்று கூறி வருகின்றனர்.

இந்தப் புதிய பொருளாதாரத் திட்டத்தின் பாதிப்பால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடாமல் இருக்க மக்களை மூட நம்பிக்கைகள், மது, கடவுள், சாதி, மதம், போன்றவற்றால் பிரித்து அரசே பாகுபாட்டுடன் செயல்படுகிறது.

இந்த அரசுகள் நாட்டை விற்கும்போது அதை எதிர்த்து மக்கள் போராடாமல் இருக்க, சாதி மத மோதல்களைத் திட்டமிட்டு, இராமதாசு உள்ளிட்ட சாதித் தலைவர்களைக் கொண்டு சாதிக் கலவரங் களையும், இந்துத்துவ அமைப்புகளைக் கொண்டு மதக் கலவரங்களையும் உருவாக்குகின்றனர். அதில் வெற்றியும் அடைகின்றனர்.

இந்த நிலையில் தான் இராமதாசு உள்ளிட்ட சாதித் தலைவர்களிடம் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்டு இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன். இராமதாசு உள்ளிட்ட எந்தச் சாதித் தலைவராக இருந்தாலும் அவர்கள் நான் வன்னியர் அல்லது கள்ளர் அல்லது தேவர் அல்லது கோனார், உடையார், தாழ்த்தப்பட்டவர் என்று யாராக இருந்தாலும் டிஎன்ஏ ஆய்வின்படி நாங்கள் அந்தந்தச் சாதியினர்தாம் எங்கள் உடம்பில் கலப்பு இல்லை என்று நிறுவ முடியுமா?

தமிழக மக்களே!

சாதிச் சங்கங்களை நம்பி நம்மை நாமே அழித்துக் கொள்ளாமல் உண்மை எதுவோ அதை ஏற்றுக் கொண்டு நம் தமிழ்த் தேசத்தையும் அதிலுள்ள வளங்களையும் சுற்றுச் சூழலையும் காத்து எதிர்காலச் சமூகம் வளமுடன் வாழ "சாதி ஒழிப்பை முதற் கடமையாகக் கொண்டு தமிழ்த் தேசிய ஒப்புரவு குடியரசு' அமையப் போராடுவோம்.

"சாதி ஒழிய அம்பேத்கரைப் பொதுத் தலைவராக உயர்த்திப் போராடுவோம்.

சாதி ஒழிய அறிவியலை அடிப்படையாகக் கொண்டு கேள்வி கேட்போம்.

சாதி ஒழிய மானுடவியல் வரலாற்றை கற்பிப்போம்.

சாதி ஒழிய சாதி மறுப்பு திருமணங்கள் செய்வோம்'

Pin It