நமக்கு முன்னர் கடலுண்டு

கடலுக்கு முன்னர் நிலமுண்டு

உலகில் தோன்றிய உயிர்களிலே

கடைசி உயிர் மனிதன்தான்

பூமியின் வயது 460 கோடி

உயிரினத்தின் வயது 100 கோடி

டைனோசர்கள் 26 கோடி

மனித இனம் தோன்றி 5 இலட்சம் தான்

நம்மை விட முன்னால் பிறந்ததை

நமக்குப் பின்னால் இருக்கப் போவதை

எனதுடமை என்று சொன்னால்

பேதமை என்பது சரிதானே?

கற்பிதங்களை நம்பிக்கொண்டு

காலங்களைக் கடத்திக் கொண்டு

உண்மைகளைத் தேடாமல்

உறங்கிக் கொண்டே வாழலாமோ?

கடவுள் உலகைப் படைக்கவில்லை

கருத்தை எவரும் கொடுக்கவில்லை

தானே உருவான உலகத்தில்

தனது தனது என்பது தவறுதானே

அவனன்றி ஓரணுவும் அசையாதென்றான்

ஆன்மிகவாதி

அணுவைப் பிளக்க வைத்து மின்சாரம் கண்டான்

அறிவியல்வாதி

இல்லாததை நம்பிக்கொண்டிருந்தான்

மூடநம்பிக்கை வாதி

எதையும் கேள்விக்குள்ளாக்கினான்

பகுத்தறிவு வாதி

அடக்குமுறைக்கு அடங்கிப் போவான்

மிதவாதி

ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பான்

சீர்திருத்த வாதி

கடவுள் படைத்தது உலகமென்பான்

கருத்து முதல் வாதி

பொருள்களின் சேர்க்கையே உயிர்களென்றான்

பொருள் முதல் வாதி

கிடைத்ததெல்லாம் தமக்கென்பான்

தனியுடமைவாதி

இருப்பதெல்லாம் எல்லோர்க்குமென்பான்

பொதுவுடைமை வாதி

இயற்கை மட்டுமே நிரந்தரம்

இணைந்தே அதனுடன் வாழ்ந்திருப்போம்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.