உலகில் இதுவரை தோன்றிய மனிதர்களிலேயே மகத்தான மாமனிதரான காரல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றை ஆ. பழனி அவர்கள் காப்பியமாக வடித்துள்ளார். அனிச்ச அடி, அன்னிமகள், சாலி மைந்தன் ஆகிய காப்பியங்களையும், களம் கண்ட கவிதைகள், பண்டித மணியின் நாடகத்தமிழ், பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா, கானல் வரியா கண்ணீர் வரியா, இளங்கோவடிகளின் காப்பியக் கலைத்திறன், கோவலன் வீழ்ச்சியும் இளங்கோ மாட்சியும், சிலம்பில் சில மறைப்புகள் போன்ற நூல்களையும் எழுதி எழுதிப் புலமைத்திறம் கைவரப் பெற்ற ஆ. பழனியின் கவித்துவ உயிர்ச்சாரம் முழுவதும் ஊடுருவிப் பாய்ந்து வெளிப்பட்டிருக்கும் காப்பியம் காரல்மார்க்சு காப்பியமாகும். பழைய மரபுக்கவிதையில் புதிய புரட்சியாளரைக் காப்பியத் தலைவனாகப் படைத்துள்ளார். பாயிரம் பாடு கின்றேன், விளையும் பயிர் முளையில் தெரிகின்றது, அறிவுத்தேனீ, புதிய வானம் புதிய பூமி, இருமனம் ஒன்றிய திருமணம், செர்மன்பிரஞ்சு மலர், முன் னேற்றம் தந்த பின்னேற்றம், பெல்சியத்தின் தலை நகரில், பொது உடைமைச் சங்கம், பொது உடைமைக் கட்சி அறிக்கை, புரட்சி அலையில் ஐரோப்பா, மகிழ்ச்சியில் துள்ளிய பாரிசு, பாரிசு வீழ்ந்தது.

karl_marx_451இலண்டனில் மார்க்சு, வறுமைப் போராட்டம், சோகோப் பேட்டையில் ஒரு சோகம், துன்பங்கள் தொடர்கின்றன, சென்னி, பிரடெரிக்எங்கெல்சு, அனைத்துலகத் தொழிலாளர் கூட்டமைப்பு, மார்க்சும் தார்வீனும், மூலதனம், விளக்கு அணைகின்றது, நோயின் பிடியில் மார்க்சு, மார்க்சு மறைவு என்னும் இருபத்தைந்து தலைப்புகளில் காப்பியம் யாக்கப்பட்டுள்ளது. இதில் ‘பாயிரம்’ மட்டுமே ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஆழமும் நுட்பமும் கொண்டதாக விளங்குகிறது. ‘மீண்டும் இயற்கையை நோக்கி’ என்பதுதான் மூலதனத்தின் அடிப்படைக் கருத்து என்கிறார் ஆசிரியர். அஃதன்றியும் காப்பியத் தலைமைக் கதைமாந்தர் காரல்மார்க்சை மனித குலத்தின் தலைமகன் மட்டுமல்லர், தலையாய மகனும்கூட என்று விதந்தோதுகிறார். ஆ.பழனி அவர்களின் காரல்மார்க்சு காப்பியத்தில் உள்ள பாயிரமே ஒரு காப்பியமாகும் தகுதியைப் பெற்று உள்ளது. பாயிரத்தில் மொத்தம் பன்னிரண்டு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் அமைந்துள்ள சிறப்புக் கூறுகளை ஆராய்ந்தறிவது அவசியமானதாகும்.

மார்க்சின் வாழ்க்கை:

பாட்டாளிகளின் உழைப்பைச் சுரண்டி வளரும் முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறிப்பதையே வாழ்நாள் கொள்கையாக காரல்மார்க்சு கொண் டிருந்தார். முதலாளித்துவ மாந்தர்களைக் குளத்தில் வாழும் அட்டைகளைப் போல ஏழைகளின் குருதியை உறிஞ்சுவோர் என்கிறார். இந்த ஏழை மாந்தர் உய்ய வேண்டும் என்பதற்கான பயணத்தை காரல் மார்க்சு தொடங்கி வைத்தார். காரல்மார்க்சின் இயல்புகளை (ப. 19:3) கவிஞர் பின்வருமாறு பட்டியலிடுகின்றார்.

1)            தத்துவ வறுமையைத் தீர்த்தவன்.

2)            வரலாற்றின் தாகம் தீர்த்தவன்.

3)            மெய்த்தவம் இன்னதென்று மெய்ப்பித்தவன்.

4)            வித்தகம் என்பதை விரல் நுனியில் வைத்தவன்.

5)            புத்தகக் கிடங்கு போன்றவன்.

6)            போதி மாதவனைப் (புத்தன்) போன்றவன். (ப. 19:4)

காரல்மார்க்சு படிப்படியாகப் பொதுவுடைமைக் கொள்கையை வந்தடைவதற்கு அவன் வாழ்ந்த செர்மன், பிரான்சு, பிரிட்டன் போன்ற நாடுகளின் காலமும், சூழ்நிலையும் பெருந்துணை புரிந்தன என்பதைக் கவிஞர் பாயிரத்தில் சுட்டுகிறார். (ப. 20:5)

“அன்னியம் என்னும் ஒன்றை

                அன்னிய மாக்கிக் கொண்டு

சென்னியும் மார்க்சும் வாழ்ந்த

                இல்லறம் சிதைத்தற் கென்றே

மின்னிய மின்னல் என்ன?

                மேல்வந்த இடிகள் என்ன?

எண்ணினால் கோடி தேறும்

                இதுகூடக் குறைம திப்பே” (ப. 20)

என்னும் பாயிரப்பாடல் மார்க்சும் அவர் மனைவி சென்னியும் அடைந்த இன்னல்களை எடுத்தியம்பு கிறது. ஏழாண்டுக்காலம் தனக்காகக் காத்திருந்த சென்னியை 1843ஆம் ஆண்டு சூன் 1ஆம் தேதி காரல்மார்க்சு மணந்து கொண்டார். ‘ஜோஹன்னா பெர்த்தா ஜூலி ஜென்னிவான்’ என்பதே அப்பொழுது சென்னியின் பெயராக இருந்தது (என்.ராமகிருஷ்ணன், ஜென்னி மார்க்சு, ப.20). வறுமையில் வாடிய போதும் காரல்மார்க்சு சென்னியின் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார். அவர் சென்னியின் மீது கொண்டிருந்த அன்பை ஒரு கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அக்கடிதம் வருமாறு:

“அன்பே!

உலகத்தில் எத்தனையோ பெண்கள் இருக் கிறார்கள். அவர்களில் சிலர் அழகாகவும் இருக் கிறார்கள். ஆனால் ஒவ்வொரு தோற்றமும், கவர்ச்சிக் கூறும் ஏன் அதன் ஒவ்வொரு திரையும் ரேகையும் கூட என்னுடைய வாழ்க்கையின் மிகவும் பலமான, மிகவும் இனிமையான நினைவுகளை என்னுள்ளே கிளப்பிவிடக்கூடிய மற்றொரு அழகிய முகத்தை நான் எங்குக் காண்பேன்? உனது இனிய முகத் தோற்றத்தில் என்னுடைய முடிவில்லாத துன்ப துயரங்களையும் கூட நான் காண்கிறேன். நான் உனது இனிய முகத்தில் முத்தமிடும் போது, எனது வேதனைகளையும் கூட முத்தமிட்டுத் துடைத்து விடுகிறேன்.

அன்பே! நான் தன்னந்தனியாக இருக் கிறேன். இருந்தாலும் எப்பொழுதும் உன்னுடன் கற்பனையில் உரையாடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், என் சிந்தனை ஓட்டத்தை அறிந்து, என் கற்பனை உரைகளைக் கேட்டு, அதற்கு நீ மறு மொழி தர முடியாத போது, எத்தனை நாள்தான் கற்பனையிலேயே சஞ்சரிக்க முடியும். அதனால் தான் மீண்டும் உனக்குக் கடிதம் எழுதுகிறேன். நான் உன்னை அன்போடு தொடுகிறேன். தலை முதல் கால் வரை உன்னை முத்தமிடுகிறேன். உன் முன் முழந்தாளிட்டுப் பணிகிறேன்.... அருகில் இருக்கும் போது கோபுரங்கள், உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போது பூதாகாரமாய்த் தோற்ற மளிக்கின்றன. மனதுக்கு இனிய பொருள் அருகில் இருக்கும்போது, அதன்மீதுள்ள ஆழமான உணர்ச்சிகள் கூட பழக்கப்பட்டுப் போய் சாதாரணமாகிவிடு கின்றன. எனது அன்பின் நிலையும் இதுவே.

வெயிலும் மழையும் எப்படி ஒரு செடியை போஷித்து அது வளர உதவுகிறதோ அதே போல, நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து தொலைதூரத்திற்குச் சென் றாலும், கால தேவன் என் அன்புக்கு அதே சேவை செய்கிறான் என்று உளமார உணர்கிறேன். நீ என்னை விட்டுத் தனியாகப் பிரிந்து சென்ற அக்கணமே, என்னுடைய அன்பு தனது உண்மையான சொரூபத்தை, விஸ்வரூபத்தை எடுத்துவிட்டது. எனது ஆன்மிக சக்தி பூராவும், எனது உணர்ச்சிப் பிழம்புகள் அனைத்தும் அதிலேயே செறிவுடன் ஒன்றிக் கிடக் கின்றன. என் அன்பே, நான் ஏன் இவ்வாறு திடீரென உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் என்று நீ புன்முறுவலுடன் வினவக் கூடும். ஆனால் உனது மென்மையான, தூய இதயத்தை எனது இதயத் துடன் நெருக்கமாக அணைத்துக் கொள்ள முடியு மானால், நான் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் மௌனமாகி விடுவேன்.” (என்.ராமகிருஷ்ணன், ஜென்னி மார்க்சு, பக்.47-48)

சென்னியும் காரல்மார்க்சும் இல்லற வாழ்க் கையில் எதிர்கொண்ட வறுமை அளப்பரியது. இதனை,

“தத்துவப் போர்க்களத்தில்

                வெற்றியே தந்தான். வாழ்வைக்

கொத்திடும் வறுமைப் போரில்

                கொத்தாக மூன்று பிள்ளை

செத்தாரே! சென்னி வாழ்வை

                நோய்நாளும் தின்னக் கண்டு

பித்தான போது கூடப்

                பிறழாதான் வாழ்க்கை என்னே! (ப.20:8)

என்னும் கவிதையில் கவிஞர் குறிப்பிடுகின்றனர். மூன்று பிள்ளைகள் இறந்தனர். அடுக்கடுக்கான நோய்கள் வந்தன. அனைத்தையும் தாங்கிக்கொண்டு கொள்கைக்காக வாழ்ந்தார், காரல்மார்க்சு. ‘பிறழா தான் வாழ்க்கை என்னே!’ என்று வியந்து வியந்து பாராட்டுகிறார் கவிஞர். சென்னி தன்னுடைய குழந்தை ‘பிரான்சிஸ்கோ’ இறந்ததை எவ்வளவு துக்கத்தோடும் கண்ணீரோடும் கூறுகின்றார் என்பதைப் பாருங்கள்.

“எங்களுடைய சிறு குழந்தை பிரான்சிஸ்கோ, கடுமையான மார்ச்சளியினால் நோயாய்ப் படுத்துக் கொண்டுவிட்டது. அது, பாவம், மூன்று நாள் யமனோடு போராடியது. அதனுடைய அவஸ்தை சொல்லி முடியாது. கடைசியில் அதனுடைய ஆயுள் முடிந்துவிட்டது. அதன் தேகத்தைப் பின் பக்கத்து அறைக்குக் கொண்டு வந்து விட்டோம். அன்றிரவு வெறுந்தரையிலேயே படுத்துக்கொண் டோம். எங்களோடு மற்ற மூன்று குழந்தைகளும் இருந்தன. பிரான்சிஸ்கோ இறந்து போனதற்காக நாங்கள் அழுதுகொண்டிருந்தோம்... எங்களுடைய அதிகமான பணமுடை காலத்தில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. எங்களுடைய ஜெர்மானிய நண்பர்கள் எங்களுக்கு எவ்வித உதவியும் செய்ய முடியாதவர்களாக இருந்தார்கள்...

எர்னஸ்ட் ஜோன்ஸ், இந்தச் சமயத்தில் எங்களை வந்து பார்த்தார். ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை... எனவே, என்னுடைய தேவையை முன்னிட்டு, எங்களைப் போல் தேசப் பிரஷ்டமடைந்து அருகா மையில் வசித்துக்கொண்டிருந்த ஒரு பிரெஞ்சு நண்பரிடம் சென்று என் குறையைத் தெரிவித்துக் கொண்டேன். அவர் உடனே பெரிய மனது பண்ணி இரண்டு பவுன் கொடுத்தார். இந்தப் பணத்தைக் கொண்டு சவப்பெட்டி வாங்கினேன். அதில்தான் இப்பொழுது என் குழந்தை சாசுவதமாக நித்திரை செய்துகொண்டிருக்கிறது. அது பிறந்த போது, அதற்குத் தொட்டில் இல்லை; இறந்த பிறகு அதற்குச் சவப்பெட்டி அகப்படுவதற்குக் கஷ்ட மாகிவிட்டது.” (வெ.சாமிநாதசர்மா, காரல் மார்க்சு, ப.121-122)

மார்க்சின் கொள்கை:

எந்தச் சூழ்நிலையிலும் காரல்மார்க்சு கொள் கையை விட்டுக்கொடுத்ததில்லை; சமரசம் செய்து கொண்டதில்லை “கொடுமைகள் அறுக்கும் வாளைக் கொடுத்தான்” (ப. 21:9) என்று பாடுகின்றார் கவிஞர். காரல்மார்க்சும் பிரடெரிக் எங்கெல்சும் வெளி யிட்ட பொதுவுடைமை அறிக்கை, ‘பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலிகளைத்தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர். இவர்கள் வென்று பெறு வதற்கு அனைத்து உலகும் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற அறை கூவலோடு முடிகிறது. (எ.ஸ்தெபானா, பிரடெரிக் எங்கெல்சு வாழ்க்கைச் சுருக்கம், இரா. பாஸ்கரன், (மொ.ஆ), ப.122). மார்க்சியக் கோட்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்த ‘மூலதனம்’ என்னும் உலகப்புகழ்பெற்ற நூலை காரல்மார்க்சு எழுதினார். மூலதனம் என்னும் முத்தெடுத்த வரலாற்றை,

“யூதர்கள் குலத்தின் வந்தான்

                ஆயினும் உலக வாழ்வில்

தாதர்கள் பலரா செல்வத்

                தலைமையர் சிலராக் காணும்

தீதற வேண்டும் என்னும்

                தீராத வேட்கை யாலிம்

மூதறி வாளன் ‘மூலதனம்’

                எனும் முத்தெடுத்தான்” (ப. 19:2)

என்ற பாடலில் ஆ. பழனி சுட்டுகின்றார். இது வரை உலகில் தோன்றிய நூல்களிலேயே இது ஒன்றுதான் உலகைப் புரட்டிப்போட்ட-உலகை மாற்றிப்போட்ட நூல் எனலாம். இந்நூலின் மேன்மையை,

“மார்க்சின் பொருளாதாரப் போதனை மிக முழுமையாகவும் பரிபூரணமான முறையிலும் மூலதனம் நூலில் விரித்துரைக்கப்பட்டிருக்கிறது; இப்போதனை மார்க்சின் தத்துவத்தை மிக ஆழமான, அகல்விரிவான, நுணுக்கமான முறையில் நிரூபிப் பதுடன் அதைச் செய்முறையில் உபயோகிப்பதாகவும் இருக்கிறது என்றார் லெனின். மார்க்சின் தத்து வத்தின் உள்ளடக்கக் கூறுகளான தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம் மற்றும் விஞ்ஞானக் கம்யூனிசத்தை விரித்துரைப்பதில் அது மாபெரும் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. தன்னுடைய ஆராய்ச்சிக்குப் பொருள்முதல்வாத இயக்கவியலைக் கையாண்ட மார்க்ஸ் அதைப் படைப்பாற்றலோடு செழுமைப்படுத்தினார்.

விஞ்ஞான அறிவின் வன்மை மிக்க இக்கருவியை மேலும் பரிபூரணமாக்கினார். பாட்டாளி வர்க்க விடுதலை இலட்சியக் கோட் பாடாகிய விஞ்ஞான கம்யூனிசம், சோசலிஸ்டுப் புரட்சி மற்றும் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம் ஆகியவற்றை மூலதனம் ஆழமான தத்துவஞான, பொருளாதார, வரலாற்று முறையில் நிறுவியது. மார்க்சு எழுதிய மாபெரும் நூலாகிய மூலதனம் முதலாளித்துவ அடிமை முறையை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் அதன் வன்மைமிக்க ஆயுதமாக இருக்கிறது.” (எ.ஸ்தெபானவா, கார்ல் மார்க்சு வாழ்க்கைச்சுருக்கம், நா.தர்மராஜன், (மொ.ஆ), பக். 116-117) என்னும் பகுதியில் அறிஞர்கள் எடுத்துக் கூறுவர். இதுவரை கற்பனை என்று நினைத்திருந்த சமனிய கருதுகோளை அறிவியல் முறைப்படி உண்மையென காரல்மார்க்சு அறிவித் தார் என்று காப்பிய ஆசிரியர் குறிப்பிடுகின்றார். (ப.12:12)

1)            பொருள்முதல்வாதம் (மார்க்சிய மெய்யியல்)

2)            மார்க்சியப் பொருளாதாரம் (உபரி மதிப்புத் தத்துவம்)

3)            விஞ்ஞான சோசலிசம் அல்லது கம்யூனிசம் (மார்க்சிய அரசியல்)

என்னும் மூன்று கூறுகள் மார்க்சிய கொள்கையில் அடங்கியுள்ளன.

(தியாகு, மார்க்சியம் ஆனா ஆவன்னா..., ப.18) மார்ச்சிய தத்துவம் உழைக்கும் மக்களின்- சுரண்டப் படுவோரின் தத்துவம் என்பர் (எல்.ஜி. கீதானந்தன், மார்க்சிய சிந்தனை, ப. 25). உலகப் புகழ்வாய்ந்த மூலதனத்தை காரல்மார்க்சு தம் நண்பர் பிரடெரிக் எங்கெல்சுக்கு அர்ப்பணித்தார். 1867ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 16ஆம் தேதி அதிகாலை 2.00 மணிக்கு மூலதனத்தின் முதல் தொகுதிக்கான அச்சுப்படிகளைத் திருத்தி முடித்ததும், காரல் மார்க்சு உடனே எங்கல்சுக்கு ‘உங்கள் உதவியால் மட்டுமே இது சாத்தியமாயிற்று’ என்று கடிதம் எழுதினார். (ஜா. மாதவராஜ், என்றென்றும் மார்க்ஸ், ப.21). காரல்மார்க்சு எழுதிய மூலதனத்தின் பெரு மையை - மேன்மையை அறிந்த மாபெரும் சோவியத் மக்கள் கவிஞர் மாயாகோஸ்கி.

“மாமேதை மார்க்சினது

வெறும் அச்செழுத்தும்

பக்கம் நிறை காகிதக் குவியலோ

அல்ல அல்ல. மேலும் அவை

தூசு நிறை கையெழுத்துப் பிரதிகளும்

உயிரற்ற புள்ளிக் கணக்கு மிக்க

பெரும் குவியல் கூட்டமோ அல்ல அல்ல

அவனுடைய நூல் எல்லாம்

போராடும் பாட்டாளி தன்னுடைய

பேரணிக்குத் தடம் வகுத்து

உழைப்பாளர் தன் அணியை

நிலைநிறுத்தி ஒழுங்கமைத்து

பற்றுறுதித் திடம் நிரம்ப

முன்செல்ல இடம் வகுத்து

தலைமையாய் நின்றதுவே”

என்று பாடினார். (பி.என். பெதோசியேவ் மற்றும் பலர், காரல் மார்க்சு வாழ்க்கை வரலாறு, ஆ.சீனி வாசன், (மொ.ஆ), ப.23). மார்க்சு எழுதிய மூலதனம் உலகில் உள்ள தலைசிறந்த நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்று அறிஞர் பெருமக்கள் குறிப் பிட்டுள்ளனர். (இரா.தணலன், சிந்தனையாளர் காரல்மார்க்சு, ப.54).

தண்டியலங்காரம் கூறும் பழைய காப்பிய இலக்கணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு புதுத் தடத்தில் காரல்மார்க்சு காப்பியம் வீறுநடை போடு கிறது. பாயிரம் என்பது காப்பிய மாளிகையின் நுழைவாயில் ஆகும். இதிலேயே ஆசிரியர் காப்பி யத்தின் கட்டமைப்பையும் கருத்தமைப்பையும் உணர்த்திக் காட்டுகிறார். காரல்மார்க்சின் வாழ்க்கை வரலாறு, மார்க்சின் கொள்கை (மார்க்சியம்), மூலதனம் ஆகிய அனைத்தையும் முன்னோட்டமாக இங்கேயே எடுத்தியம்பியுள்ளார். பன்னிரண்டு பாயிரப்பாடல்களில் உள்ள அருஞ்சொற்களுக்கு ஆங்காங்கே பொருளும் விளக்கமும் தந்திருப்பது பாயிரத்திற்கே வலிவும், பொலிவும் தருகின்றது. திருமணி, தாதர்கள், பளத்துறை மாந்தர் மேற்றறகை, தேளையா, வானக்கோள், வாளையா, முளரி, கூறலகு, சமனியம், பொற்புற, மேலை எல்லை, திரியர், செருவொன்று, திரிந்தது, மருவுறு, காசிலான், தூசுறை, என்ரிகு, வேவார், சீயம், புற்புதம், மோப்ப நாய், முற்றுற, ஈட்டான் என்பனபோன்ற சொற் பொருள் விளக்கத்தைப் பாயிரத்தில் தந்துள்ளார் புலவர் ஆ.பழனி.

முன்பே காப்பியங்கள் பல எழுதி, புலமைத்திறம் கைவரப்பெற்ற காரணத் தினால் இக்காப்பியத்தில் அவரின் கலைநுட்பப் பேரறிவுத்திறம் உச்சத்தைத் தொடுகின்றது. பாயிரத் திலேயே காப்பியத்திற்குள் செதுக்கிக் காட்ட விழையும் அனைத்துக் கலைநுட்பத்தினையும் கருத்தாக்க மேன்மையினையும் ஒரு மெல்லிய மலர் மலர்வது போல மென்மையாக உணர்த்திக் காட்டி விடுகின்றார். எதுகை, மோனை, உவமை, உருவகம், படிமம், குறியீடு என அனைத்து வகையான உத்திகளையும் பயன்படுத்தி பாயிரத்தை மேலும் மெருகேற்றியுள்ளார். சமனியம், ஈகம், அறிவன் போன்ற தித்திக்கும் கலைச்சொல் ஆக்கங்களைப் பயன்படுத்தியுள்ளார். பாயிரமே ஒரு காப்பிய மாகும் தகுதியோடு படைத்துள்ள ஆசிரியரின் புலமைத்திறன் போற்றத்தக்கதாகும்.

துணை நூல்கள் :

1.            ஆ. பழனி, காரல் மார்க்சு காப்பியம், தமிழினி, சென்னை, முதல் பதிப்பு, 2005.

2.            ரா.தணலன், சிந்தனையாளர் காரல் மார்க்சு, பிரேமா பிரசுரம், சென்னை, மூன்றாம் பதிப்பு, 1983.

3.            ஏ.ஸ்தேபானவா, பிரெடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கைச் சுருக்கம், இரா. பாஸ்கரன், (மொ.ஆ), முன்னேற்றப்பதிப்பகம், மாஸ்கோ, முதல் பதிப்பு 1985.

4.            இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், மார்க்சு பார்வையில் இந்தியா, இந்திரன் (மொ.ஆ), பாரதி புத்தகாலயம், சென்னை, மூன்றாம் பதிப்பு, 2009.

5.            ஜா. மாதவராஜ், என்றென்றும் மார்க்சு, பாரதி புத்தகாலயம், சென்னை, முதல் பதிப்பு, 2004.

6.            எல்.ஜி.கீதானந்தன், மார்க்சிய சிந்தனை, நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, முதல் பதிப்பு, 2006.

7.            தியாகு, மார்க்சியம் ஆனா ஆவன்னா, புது மலர் படைப்பகம், கோவை, இரண்டாம் பதிப்பு, 1999.

Pin It